சுங்கர் கானரசு

முன்னாள் அரசு
(சுங்கர் கானேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுங்கர் கானரசு என்பது ஐரோவாசிய புல்வெளியில் இருந்த ஒரு ஒயிரட் கானரசு ஆகும். இது சுங்கரியா என்ற நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. சீனப் பெருஞ்சுவரின் மேற்கு நுனியிலிருந்து தற்கால கசகஸ்தான் வரையிலும், தற்கால கிர்கிஸ்தானில் இருந்து தெற்கு சைபீரியா வரையிலும் இது பரவியிருந்தது. இந்த முன்னாள் நாட்டின் பெரும்பாலான நிலப்பகுதி தற்போது சீனாவின் தன்னாட்சி மாகாணமான சின்ஜியாங், கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ளது. மங்கோலிய பேரரசில் இருந்து பிரிந்த கடைசி முக்கியமான நாடோடி பேரரசு இதுவே ஆகும்.

1678 இல் தலாய்லாமாவிடமிருந்து கல்டன் போசோக்டு கான் என்ற பட்டத்தை பெற்றார். இவ்வாறாக ஒயிரட்களிலேயே முன்னணி பழங்குடியினராக சுங்கர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். எனினும் சுங்கர் ஆட்சியாளர்கள் கொங் தயிஜி என்ற பட்டத்தை பயன்படுத்தினர். அதன்பொருள் பட்டத்து இளவரசன் ஆகும். அதேநேரத்தில் அரசானது சுங்கர் கானரசு என்று அழைக்கப்பட்டது.[1] 1697 இல் கல்டன் மற்றும் 1727 இல் அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த த்செவாங் ரப்டன் ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் கானரசானது வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியில் இருந்து அது மீளவே இல்லை. இதன் காரணமாக கிங் அரசமரபானது 1755-58 இல் இனப்படுகொலை செய்து சுங்கர் பகுதியை தன்னுடைய பேரரசில் இணைத்துக்கொண்டது.

வரலாறு தொகு

மேலோட்டமான வரலாறு தொகு

சுங்கர் கானரசானது நினைவில் நிற்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் புல்வெளிகளில் தோன்றிய கடைசி நாடோடி பேரரசு இதுவேயாகும். மேலும் சீன அரசு மேற்குப் பகுதியில் விரிவாக இது முக்கியப் பங்காற்றியது. 1620 இன் போது ஒயிரட்கள் அல்லது மேற்கு மங்கோலியர்கள் சுங்கரியா என்ற பகுதியில் ஒன்றிணைந்தனர். 1688 இல் அவர்கள் தெற்கில் இருந்த தரிம் பள்ளத்தாக்கை கைப்பற்றினர். 1688 இல் கல்டன் கல்காக்கள் அல்லது கிழக்கு மங்கோலியர்களை தோற்கடித்தார். தோற்கடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கிழக்கில் இருந்த உள் மங்கோலியவுக்கு தப்பினர். அங்கே அவர்கள் மஞ்சு அரசின் குடிமக்களாக மாறினர். 1696 இல் மஞ்சுக்கள் உலான் பத்தூருக்கு அருகில் கல்டனை தோற்கடித்தனர். கல்டனை மேற்கு நோக்கித் துரத்தி வெளி மங்கோலியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1717 இல் த்செவாங் ரப்டன் திபெத்துக்கு ஒரு ராணுவத்தை அனுப்பினர். மஞ்சுக்கள் அவர்களை விரட்டி திபெத்திற்கு ஒரு பாதுகாப்பை அளித்தனர். 1750 முதல் 1757 வரை மஞ்சுக்கள் சுங்கர் உள்நாட்டுப் போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இதைப் பயன்படுத்தி சுங்கரியாவை கைப்பற்றினர். பெருமளவிலான மக்களை கொன்றனர். 1759 இல் மஞ்சுக்கள் தெற்கு நோக்கி தங்களது கவனத்தை திருப்பி தரிம் பள்ளத்தாக்கை தங்களது அரசுடன் இணைத்துக்கொண்டனர். இவ்வாறாக தற்போதைய சீனாவின் மேற்கு எல்லை நிறைவு செய்யப்பட்டது.

தோற்றம் தொகு

சுங்கர்களின் தலைவர்கள் சோரோஸ் பரம்பரையில் வந்தவர்கள் ஆவர். அவர்கள் ஒயிரட் டைஷிஸ் டோகூன் (இறப்பு. 1438) மற்றும் எசன் (ஆட்சி 1438-54) ஆகியோரின் வழித் தோன்றல்கள் என கருதப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காரா குலா என்ற பெயருடைய ஒரு இளம் தலைவர் ஒயிரட்களை ஒன்றிணைக்க தோன்றினார். கல்காக்களின் முதல் அல்டன் கானாகிய ஷொலுயி உபசி கொங் தயிஜியுடன் சண்டையிட்டார். ஷொலுயி உபசி கொங் தயிஜி சில வருடங்களுக்கு முன்னர் தான் ஒயிரட்டுகளை அவர்களது இருப்பிடமான கோப்டோ பகுதியிலிருந்து வெளியேற்றி இருந்தார். கோப்டோ பகுதி தற்போது வடமேற்கு மங்கோலியாவில் உள்ளது.[2] தனது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் காரா குலா சோரோஸ், டோர்போட் மற்றும் கொயிட் ஆகிய பழங்குடி இனங்களை ஒன்றிணைத்தார். இவ்வாறாக அவர் சுங்கர் நாட்டை உருவாக்கினார். 1620களில் கல்காக்களுக்கு எதிரான போர்களில் அந்தக் கிழக்கு மங்கோலியர்களுக்கு எதிராக இவர் தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். ஒயிரட் வாழ்விடமானது கல்காக்களின் ஜசக்டு கானின் மேலாட்சி அரசு முறையின் கீழ் இருந்தது. 1623 இல் ஒயிரட் கூட்டமைப்பானது உபசி கொங் தயிஜியை கொன்று தங்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்தினர். அந்த நேரத்தில் கோஷுட் பழங்குடி இனத்தின் தலைவரான டோரோபைக்கு மட்டுமே கான் என்ற பட்டத்தை தனக்கென கேட்க முடியும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் டோர்போட்களின் பாதர் தலாய் டைஷி சக்திவாய்ந்த உயர் தலைவராகக் கருதப்பட்டபோதிலும் காரா குலாவின் மகன் பாதர் குங் தயிஜி (இறப்பு 1653) 1636-42 ஆண்டுகளில் குஷி கான் டோரோபைகுவின் தலைமையில் திபெத்திற்கு எதிராக நடைபெற்ற படையெடுப்பில் இணைந்தார்.[3] சுங்கரியாவிற்கு பாதர் எர்டெனி என்ற பட்டத்துடன் (தலாய் லாமாவால் கொடுக்கப்பட்டது) மற்றும் பெரும் போர் செல்வத்துடன் திரும்பியபோது கசக்குகளுக்கு எதிராக 3 படையெடுப்புகளை நடத்தினார். 1630 இல் இருந்து 1677 வரை டோர்குட்கள், கோஷுட்கள் மற்றும் டோர்போட்கள் ஆகியோர் இடம்பெயர்ந்த போது சுங்கரியாவில் சுங்கர்களின் ஒப்பீட்டு ரீதியான அதிகாரமானது அதிகரித்தது.

உசாத்துணை தொகு

  1. C. P. Atwood Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.622
  2. Fred Walter Bergholz. The partition of the steppe, p. 522
  3. Henry Hoyle Howorth. History of the Mongols from the 9th to the 19th Century: Part 1, p. 595
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கர்_கானரசு&oldid=3434523" இலிருந்து மீள்விக்கப்பட்டது