செரு மலைதல்

செருமலைதல் என்பது புறயானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. கோடை பாடிய பெரும்பூதனார் பாடிய ஒரே ஒரு பாடலுக்கு இத் துறைக் குறிப்பு உள்ளது. இது கரந்தைத் திணையில் வரும் துறைகளில் ஒன்று.

இலக்கியம்

கவர்ந்துவந்த ஆனிரைகள் காளைகளுடன் இங்கு வந்துவிட்டன. கவர்ந்த வில்வீரன் மட்டும் திரும்பவில்லை. காட்டு இலைகளில் தன் தலையை மறைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்க வருபவர்களைத் தாக்குவதற்காக அங்கேயே காத்திருக்கிறான். மீட்கச் செல்லும் கழல்வீரனே! முருகேறிய புலைத்தி போலத் துள்ளிக் குதித்தோடும் ஆனிரைகளுடன் செல்லற்க! செல்லற்க! [1]

இலக்கணம்

  • ஆனிரை கவரும் வெட்சிப் போராளிகளைத் தாக்கிப் போர் புரிவது ‘செருமலைதல்’ என்னும் துறை என்று புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் இதற்கு விளக்கம் தருகிறது. [2]
  • இந்த விளக்கம் புறநானூற்றுப் பாடலுக்குப் பொருந்தவில்லை. பாடல் வெட்சி வீரன் மறைந்திருத்தலைக் குறிப்பிடுகிறது. இலக்கணம் கரந்தை வீரன் போர் புரிவதைக் காட்டுகிறது. எனவே, இதனாலும் புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறை இலக்கணம் மறைந்து போன பன்னிரு படலம் நூலைத் தழுவியது என்பது தெளிவு.
  • தொல்காப்பியம் கரந்தைத்திணை என்று என ஒன்றைத் தனியே குறிப்பிடவில்லை. வெட்சித் திணைக்குள் அடக்கிவிடுகிறது. “ஆரமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்” என்று இதனைக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம், புறத்திணையாயல் 63

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 259
  2. வெட்சியாளரைக் கண்ணுற்று வளைஇ
    உட்குவரத் தாக்கி உளர் செருப் புரிந்தன்று – புறப்பொருள் வெண்பாமாலை 25

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரு_மலைதல்&oldid=1215318" இலிருந்து மீள்விக்கப்பட்டது