ச. கிருஷ்ணமூர்த்தி (கல்வெட்டாய்வாளர்)

ச. கிருஷ்ணமூர்த்தி (கல்வெட்டாய்வாளர்), தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், அனுக்காவூர் வட்டம், விலாரிப்பட்டு (அஞ்சல் குறியீட்டு எண் : 604404) கிராமத்தில் சடைசாமி - பூமாது இணைக்குப் பிறந்தவர் ஆவார். 1949 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 04 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1][2]

கல்வி தொகு

இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை மாநகராட்சி பள்ளியில் முடித்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் வரலாற்றிலும் எம்.ஏ. பட்டம் பெற்றார்.[1][2]

1975 ஆம் ஆண்டில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டியல் ஓராண்டு பட்டயப் படிப்பில் தேர்வு பெற்றார். எஸ். இராமச்சந்திரன் இவரது வகுப்புத் தோழர் ஆவார். கல்வெட்டியல் பயிற்சியின் நிறைவாக திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோவில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு ஓர் ஆய்வேட்டினை சமர்பித்தார். பின்னர் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பி.எட். பட்டம் பெற்றார்.[1][2]

தொல்லியல் துறையில் ஆய்வுப் பணிகள் தொகு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1978 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட தொல்லியல் அலுவலராக, தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில், பணியில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான .ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்து ஆவணங்களை சேகரித்தார். தருமபுரி மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது பல கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் பெருங்கற்கால ஓவியங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.[1][2]

சிதம்பரத்தில் சிறிது காலம் பணியிலிருந்த பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் அலுவலராக நான்காண்டுகள் பணிபுரிந்த காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள், கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் குறித்து பல தகவல்களை சேகரித்தார். கல்வெட்டுகள் படியெடுத்தல் குறித்த முனைப்புத் திட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான குழுவிற்குத் தலைமை தாங்கி பல்வேறு கல்வெட்டுகளைப் படியெடுத்ததுடன் கோவில்கள் குறித்த தகவல்களையும் திரட்டினார். தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேட்டினை எஸ்.செல்வராகவுடன் இணைந்து தயாரித்தார்.

பணி ஒய்வு தொகு

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியன்று பணியிலிருந்து ஒய்வு பெற்றார். தற்போது இவர் சென்னை, திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[1][2]

இயற்றிய நூல்கள் தொகு

  1. தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும்
  2. திருவோத்தூர் வரலாறு (பரிசு பெற்றது)
  3. எசாலம் வரலாற்றுப் புதையல் (இணையாசிரியர்)
  4. திருக்குறள் பழைய உரை 3
  5. வரலாற்றில் வல்லம்
  6. கல்லிடைக்குறிச்சிக் கலைக்கோயில்கள்
  7. விக்கரம சிங்கபுர உலா
  8. சிவகீதையும் சித்தாந்த சபையும்
  9. சப்தஸ்தானம் எனும் ஏழூர் வரலாறு
  10. திருவாவடுதுறை ஆதீன வரலாறு (பரிசு பெற்றது)
  11. துர்க்கை வழிபாடும் சிற்பங்களும்
  12. பிள்ளையார் கதை
  13. திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடுகள்
  14. திருக்கடந்தை வரலாறும் புராணமும்
  15. திருப்பாம்புரம் தலபுராணம்
  16. பெண்ணாகடம் கோயில்கள்
  17. மதிகெட்டான் நாடகம்
  18. புஷ்பவிதி (உரையாசிரியர்)
  19. Thirukovilur Excavation Report (Asst. Editor)
  20. கல்வெட்டுகளில் ஊரும் பேரும் (செய்யாறு)
  21. தமிழ்நாட்டுச் செப்பேடுகள் (இரண்டு தொகுதிகள்)
  22. நடுகற்கள்
  23. தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம்
  24. கிருஷ்ண நாடகம் (பரிசு பெற்றது)
  25. நாலடியார் மூலமும் பாதிக்கப்படாத பழைய உரையும் (பரிசு பெற்றது)
  26. திருக்குறள் பழைய உரை 4 (அறத்துப்பால்)
  27. திருக்குறள் பழைய உரை 4 (பொருட்பால் தொகுதி 1)
  28. திருக்குறள் பழைய உரை 4 (பொருட்பால் தொகுதி 2)
  29. திருக்குறள் பழைய உரை 4 (காமத்துப்பால்)
  30. வரலாற்றில் திருக்கழுக்குன்றம்
  31. Thiruvavaduthurai Adheenam
  32. தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு (இணையாசிரியர்)
  33. கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் (இணையாசிரியர்)
  34. விக்கிரமாதித்தன் – பேசாமடந்தை கதை
  35. வரலாற்றில் எலவானாசூர்க்கோட்டை
  36. வல்லம் தலபுராணம்
  37. சோழர் செப்பேடுகள்
  38. நெல்லை மாவட்ட வரலாறு [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ச. கிருஷ்ணமூர்த்தி தருமபுரி தகவல் களஞ்சியம் நவம்பர் 27, 2018
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 என்னுரை In தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம், ச. கிருஷ்ணமூர்த்தி. சிதம்பரம். மெய்யப்பன் பதிப்பகம். 2010. பக். 3 – 6 (மெய்யப்பன் வெளியீடு 387)