தருமபுரி மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
தருமபுரி
மாவட்டம்

ஒகேனக்கல் அருவி

தருமபுரி மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் தருமபுரி
பகுதி மழவர் நாடு
ஆட்சியர்
கி. சாந்தி, இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

ச. கலைச்செல்வன்
இ.கா.ப
நகராட்சிகள் 1
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 7
பேரூராட்சிகள் 10
ஊராட்சி ஒன்றியங்கள் 10
ஊராட்சிகள் 251
வருவாய்க் கிராமங்கள் 470
சட்டமன்றத் தொகுதிகள் 5
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 4497.77 ச.கி.மீ
மக்கள் தொகை
15,06,843 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
636 xxx
தொலைபேசிக் குறியீடு
04342
வாகனப் பதிவு
தநா-29
பாலின விகிதம்
946 /
கல்வியறிவு
68.54%
இணையதளம் தருமபுரி

தருமபுரி மாவட்டம் (தர்மபுரி மாவட்டம், Dharmapuri district), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தருமபுரி ஆகும். இந்த மாவட்டம் 4497.77 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

வரலாறு தொகு

1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து, தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில், இம்மன்னனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில், நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீர்த்தகிரியார் பிறந்த மாவட்டம்.

மாவட்ட வருவாய் நிருவாகம் தொகு

தருமபுரி மாவட்டத்தில் தர்மபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய்க் கிராமங்கள் கொண்டது.[1]

வட்டங்கள் தொகு

  1. தருமபுரி
  2. அரூர்
  3. பாலக்கோடு
  4. பாப்பிரெட்டிப்பட்டி
  5. பென்னாகரம்
  6. காரிமங்கலம்
  7. நல்லம்பள்ளி

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் தொகு

இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும்[2], 10 ஊராட்சி ஒன்றியங்களும்[3], 251 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[4]

நகராட்சி தொகு

  1. தருமபுரி நகராட்சி

பேரூராட்சிகள் தொகு

  1. அரூர்
  2. கடத்தூர்
  3. காரிமங்கலம்
  4. மாரண்டஅள்ளி
  5. பாலக்கோடு
  6. பாப்பாரப்பட்டி
  7. பாப்பிரெட்டிப்பட்டி
  8. பென்னாகரம்
  9. பி. மல்லாபுரம்
  10. கம்பைநல்லூர்

ஊராட்சி ஒன்றியங்கள் தொகு

  1. தருமபுரி
  2. அரூர்
  3. காரிமங்கலம்
  4. மொரப்பூர்
  5. பாலக்கோடு
  6. நல்லம்பள்ளி
  7. பாப்பிரெட்டிப்பட்டி
  8. பென்னாகரம்
  9. கடத்தூர்
  10. ஏரியூர்

மக்கள் வகைப்பாடு தொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19013,28,897—    
19113,44,203+0.46%
19213,28,877−0.45%
19313,83,902+1.56%
19414,43,969+1.46%
19514,99,582+1.19%
19616,15,809+2.11%
19717,96,404+2.61%
19819,40,175+1.67%
199111,23,583+1.80%
200112,95,182+1.43%
201115,06,843+1.53%
சான்று:[5]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 68.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[7] விடக் குறைவானது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அரசியல் தொகு

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மக்களவைத் தொகுதியும், பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி), பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி), தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி), பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), அரூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி) என 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[8]

புவியமைப்பு தொகு

வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

காடு தொகு

 
ஒகேனக்கல் வனப்பகுதி

இம்மாவட்டம் முழுவதும், காடுகளாலும் மற்றும் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்பைடர் பள்ளத்தாக்கு பல காட்டு விலங்குகளின் தாயகமாகும். இம்மாவட்டம் யானைகளின் இடம்பெயர்வு பாதையில் வருகிறது. மனிதனுக்கும், யானைக்கும் இடையிலான மோதல்கள் இந்தப் பகுதிகளில் மிகவும் பொதுவானவை ஆகும். பல பழங்குடிச் சமூகங்கள் இந்தக் காடுகளை நம்பியுள்ளன. சேர்வராயன் மலைத் தொடரின் மேலே உள்ள, வத்தல் மலை என்னும் குக்கிராமமானது, காபி மற்றும் பலாப்பழங்களைப் பயிரிடுவதற்கு, ஏற்ற நிலைமைகளைக் கொண்டுள்ளது. மொரப்பூர் மற்றும் அரூர் வனப்பகுதியில், காட்டுப்பன்றிகள் மற்றும் புள்ளிமான்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. காட்டெருது சில நேரங்களில், பொம்மிடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, உலா வருகிறது. தொப்பூர் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.

காலநிலை தொகு

பருவநிலை பொதுவாக வெப்பமயமானதாகும். ஆண்டிற்குச் சராசரியாக 89.556 மி.மீ. மழை பொழிகின்றது.

வேளாண்மை தொகு

 
வாணியாறு அணை

விவசாயம் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக விளங்குகின்றது. சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளுள் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் மொத்த வேளாண்மை செய்யும் பரப்பளவு, 4.68 எக்டேர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[9] அதில் கொள்ளு, உளுந்து, பட்டாணி, முட்டைக்கோஸ், பச்சைப் பயறு, துவரை, நெல், இஞ்சி, அவரை, காலிபிளவர், காராமணி, மொச்சை, சோளம், கேழ்வரகு, கம்பு, பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆமணக்கு, கடுகு, மஞ்சள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில், தர்மபுரி மாவட்டம் மலர் உற்பத்தியில், முதல் மூன்று இடங்களில் உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஏறத்தாழ 3385 மெட்ரிக் டன் மலர்கள் விளைவிக்கப்படுவதாக அறியப்படுகிறது. தர்மபுரியின் கால்நடை வளம் அதிகம் உள்ளது. இம்மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி, பண்ணைகள் பரந்து காணப்படுகின்றன. மேச்சேரி வகையாடு, மைலம்பாடி வகை ஆடுகளிலிருந்து, 60 பவுண்டு ஆட்டுமுடிகள் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. ஓசூரில், மந்தியா வகை ஆடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

நீர்நிலைகள் தொகு

 
ஒகேனக்கல் காவிரி அருவி

காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு, வன்னியாறு, மார்க்கண்ட நதி, தோப்பூர் ஆறு, சனத்குமாரநதி, கம்பையநல்லூர் ஆறு, பாம்பாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இருப்பினும், இவற்றில் குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டுமே, நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால், இம்மாவட்டம் அதிக நாட்களில் வறட்சியைச் சந்திக்கின்றன. மாம்பழ விளைச்சலில், இம்மாவட்டம் முன்னணி வகிக்கிறது.

இம்மாவட்டத்தின் மழையளவு குறைவாக இருப்பதால் ஆறுகளில் நீர்வரத்து பல நாட்களில் குறைவாகவே இருக்கும். அதனால் இம்மாவட்ட விவசாயிகள், ஏரிப்பாசனத்தை நம்பி வேளாண் தொழில் செய்கின்றனர். கிருஷ்ணகிரி, ஓசூர், பல தர்மபுரி வட்டங்களில் அதிகமாக ஏரிகள் இருக்கின்றன. அதோடு ஆங்காங்கே கசிவு நீர்க் குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஓசூர் வட்டத்தில், அஞ்செட்டிக்கருகில், சனத்குமார ஆற்றில் அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின், தர்மபுரி வட்டத்தில் மாரண்டஹள்ளி அணைக்கட்டு பெரியது ஆகும். 1958 ஆம் ஆண்டு, சின்னாறு நீர்த்தேக்கம் கட்டப் பட்டது. இந்த நீர்த்தேக்கங்களால், ஏறத்தாழ 2600 ஏக்கர் நிலம் பயன் அடைகின்றன.

பயிர் பரவல் தொகு

 
பாப்பிரெட்டிப்பட்டி அருகில் உள்ள, பண்ணை நிலங்கள்

நெல் விளைச்சல், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களில் அதிகம் நடைபெறுகிறது. நெல்லுக்கு அடுத்து அதிகம், கேழ்வரகு பயிரானது, ஓசூர், தாலி, பாரகோல் இடங்களில் விளைவிக்கப் படுகிறது. அதில் இ.சி. 593 ரகம், அதிகம் விளைகிறது. இப்பயிர்களுடன், கம்பு, சாமை, தினை, வரகும் விளைச்சல் ஆகிறது. பெரிய மஞ்சள், செஞ்சோளம், தலைவிரிச்சான் சோளம் என்ற மூன்று வகை சோள இனங்கள், அரூரில் விளைவிக்கப் படுகின்றன. தர்மபுரிவட்டத்தில், கம்போடியா பருத்தி விளைச்சல் ஆகிறது. ஓசூர், அரூர் முதலிய வட்டங்களில், கொள்ளு அதிக மகசூல் ஆகிறது. மேலும் அரூர் வட்டத்தில், ஏலம், கிராம்பு, மிளகு,புகையில், மல்லி விளைச்சல் ஆகின்றன.

கால்நடை வளர்ப்பு தொகு

1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒசூர் பண்ணையில், பெல்லாரி, பிக்கானீர், மந்தியாவகை ஆடுகள் கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன. மேலும், கோழிப்பண்ணைகளும் உள்ளன. அப்பண்ணைகளில் ரோட் ஐலண்டு, வொயிட் லெக்கார்ன், ரெட் வகைக் கோழியினங்கள் வளர்க்கப்படுகின்றன. 1924-ஆம் ஆண்டு மத்திகிரி கிராமத்தில், ஓசூர் கால்நடைப்பண்ணை அமைக்கப்பட்டது. இக்கிராமம், ஓசூர் வட்டத்தில் உள்ளது. இக்கிராமமானது, கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் இருக்கிறது. இதனால் புல் விளைச்சல் அதிகமாக நிலவுகிறது. இப்பண்ணையானது, சற்றேறக்குறைய 1674 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இப்பண்ணைகளில், சிந்தி, கிர், ஹல்லி கார், காங்கேயம் கால்நடை இனங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மேலும், மத்தகிரியில் பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழில் ஓங்கி வளர்ந்துள்ளது. இப்பகுதியின் தட்ப வெப்ப நிலையே, இதற்கு முக்கிய காரணி ஆகும். 1944-ஆம் ஆண்டு, சுமார் 100 ஏக்கர் நிலத்தில், ஹோப்பட்டு நூல் பணி உருவாக்கப் பட்டது. அதன்படி ஏழு மல்பெர்ரி மரத்தோட்டங்கள் அமைக்கப்பட்டன. அதில் உயர்ந்த ரகப்பட்டுப் பூச்சிகள் வளர்க்கப்பட்டன. 1950-51 இல் மூன்று மடங்கு வளர்ச்சியை, இப்பட்டுப்பூச்சித் திட்டம் அடைந்தது. ஓசூர் வட்டத்தின் தாளவாடி கிராமத்திலும், ஏறத்தாழ 1820 ஏக்கர் நிலப்பரப்பில் பட்டுப்பூச்சி வளர்க்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. பட்டுப்பூச்சி வளர்ப்பை, இந்த வட்டாத்தின் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தர, ராயக் கோட்டை மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி தரப்படுகிறது. பட்டுப்பூச்சி மாதிரிப் பண்ணை ஒன்றை, பேரிகை என்னும் ஊரில் உருவாக்கப் பட்டது. இதன் வழியே, மக்களுக்குப் பட்டுப்பூச்சி வளர்க்கும் செயல்முறை திட்டங்கள் தெளிவு படுத்தப் படுகின்றன. பட்டு நூல் சேகரிக்கும் நடுவம், தென்கனிக் கோட்டையில் செயல்படுகிறது. ஓசூர் நிலையத்தினர், மல்பெர்ரி மரங்கள் வளர்த்தும் விவசாயிகளுக்கு, பட்டுப் புழுக்களை வழங்குவர். பட்டுப்பூச்சி முட்டைகள் சோதிக்கப்பட்ட பின்பே, அவர்களுக்குக் கொடுக்கப் படுகின்றன. எனவே, இப்பட்டுப்பூச்சி வளர்ப்பு, சிறந்த தொழிலில் ஒன்றாக ஓங்கி வருகிறது.

கல்வி தொகு

கல்வியில் முன்னேறும் மாவட்டமாகத் தருமபுரி மாவட்டம் கூறப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி, அரசுக்குத் தெரியாமல் அங்குள்ள மக்களுக்குச் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை அடிப்படையான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.[10]

சுற்றுலா தொகு

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ந்து வரும் தொழிலாகும். தமிழ்நாட்டின் தலையாய நதியான காவிரி, ஒகேனக்கல் அருவியின் வழியாகவே மாநிலத்தை வந்தடைகிறது. இங்குப் பரிசல் பயணமும், எண்ணைக்குளியலும் பிரபலம். மாரண்டஹள்ளி சின்னார் அணை, பெட்டமுகிளாலம் மலை காவேரி வடக்கு வன உயிரினச் சரணாலயம். தீர்த்தமலை மலைக்கோவில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு அணை மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.

தருமபுரி மாவட்டத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் 4000 அடிக்கு மேல் ஏழைகளின் குட்டி ஊட்டி எனப்படும் வத்தல்மலை முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. தர்மபுரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  3. "தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  4. தர்மபுரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
  5. Decadal Variation In Population Since 1901
  6. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு,2011 - தர்மபுரி மாவட்டம்". பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2014.
  7. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2014.
  8. தர்மபுரி மாவட்ட மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள்
  9. https://dharmapuri.nic.in/agriculture-department/
  10. தினமணி; 02.12.2014; பக்கம் 6; (கட்டுரை:ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி_மாவட்டம்&oldid=3864761" இலிருந்து மீள்விக்கப்பட்டது