அகநானூறு

அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பு
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

அகநானூறு எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, 'நெடுந்தொகை' (நெடுமை+தொகை, நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு) என்றும் கூறுவர்.

நூலமைப்பு தொகு

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாக 13 அடிகளையும் அதிக அளவுவாக 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை

  • களிற்றியானை நிரை(1-120)
  • மணிமிடை பவளம் (121-300)
  • நித்திலக் கோவை (301-400)

என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.

பாடல் வைப்புமுறை தொகு

1,3,5,... என ஒற்றை எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - பாலைத்திணை(200 பாடல்கள்)

10,20,... என வரும் பாடல்கள் - நெய்தல் திணை(40 பாடல்கள்)

4,14,... என 4 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - முல்லைத்திணை(40 பாடல்கள்)

2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - குறிஞ்சித்திணை(80 பாடல்கள்)

6,16,26 என 6 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - மருதத்திணை(40 பாடல்கள்) [1]

பாடியோர் தொகு

இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத்தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர்[சான்று தேவை] எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

அகநானூற்றின் மூன்று பகுப்புகள் தொகு

அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்.

பழம்பாடல் தொகு

நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5)
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
களித்த மும்மதக் 'களிற்றியானை நிரை' (10)
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு மரபின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15)
அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக்
கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையால்
கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20)
வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூருள்ளும்
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொப்மை சான்ற நன்மையோனே.

இஃது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.

களிற்றியானைநிரை தொகு

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம் தொகு

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை தொகு

301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றுத் தொகுப்பு தொகு

அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன

பாடல் 1 - பஃறொடை வெண்பா தொகு

வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான்

வகையின் நெடியதனை வைப்பு.

இரண்டாம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்திதான் இந்தப் பாடலிலும் கூறப்பட்டுள்ளன. எனினும், இதில் திணையின் விளக்கங்கள் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன.
வெண்தேர் என்னும் கானல்காற்று ஓடுவது பாலை
தாமரை என்பது ஆகுபெயராய் அது பூத்திருக்கும் மருத நிலத்தைக் குறிக்கும்
காமம் உண்டாக்கக் கூடிய முல்லைப்பூ பூத்திருக்கும் நிலம் முல்லை. இதுவும் ஆகுபெயர்.
வெறி என்பது மணத்தையும், வெறியாட்டத்தையும் குறிக்கும். இந்த இரண்டும் உள்ளது குறிஞ்சி.
குட்டத்தில் (உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல்

பாடல் 2 - வெண்பா தொகு

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது

நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு

கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) - பாலைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) - முல்லைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) - மருதத் திணை
பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) - நெய்தல் திணை
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை

பாடல் 3 - வெண்பா தொகு

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்

நாலு நளிமுல்லை நாடுங்கால் - மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்

ஆறு மருதம் அகம்.

பாட்டு 2-ல் கூறப்பட்டுள்ள செய்தியே இந்தப் பாட்டிலும் வேறு வகையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றையெல்லாம் 'செந்தமிழின் ஆறு(நெறி)' என்று குறிப்பிடுவது பிற மொழிகளில் இல்லாத தமிழ்நெறி இந்தத் திணைப் பாகுபாடு என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நெறி என்பது தமிழிலக்கிய நெறியாகும்.

அகப்பொருள் தொகு

பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். "உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்" எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும் கூறுகின்றன.

அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகள் தொகு

அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும் ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும் தொகு

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தி காணப்படுகிறது. முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி

(அகநானூறு, 149:9-11)

(நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு) இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

"உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்"(225)

என்ற வரிகள் பெரிய கப்பலை பற்றி எடுத்துரைக்கிறது

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள் தொகு

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளை நீராட்டித் தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தித் திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது.

பதிப்பு வரலாறு தொகு

இந்நூல் உரையுடன் முதற் பகுதி 'மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர்' என்றவர்களால் 1918-இல் முதலில் பதிப்பிக்கபட்டது. ஆனால், இப்பதிப்பின் முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் பார்க்கக் கிடைக்கவில்லை, அகநானூற்றின் இரண்டாம் பகுதி 1920-இல் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலைத் தவிர இப்பதிப்பும் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்நூலின் முழு பதிப்பானது 1923-இல் 'அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் பெயரில் ரா.இராகவையங்கார் பதிப்பிக்க, கம்பர் விலாசம் இராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடபட்டது."[2]

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. மது.ச. விமலானந்தம் (2020) (in தமிழ்). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். பக். பக்க எண். 43. 
  2. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 38
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகநானூறு&oldid=3823388" இலிருந்து மீள்விக்கப்பட்டது