திரிபோலி அபுசலிம் சிறைவளாக மனிதப் புதைகுழி

திரிபோலி அபுசலிம் சிறைவளாக மனிதப் புதைகுழி என்பது லிபியா தலைநகர் திரிப்பொலியில் உள்ள அபு சலிம் சிறை வளாகத்தில் 2011 செப்டெம்பரில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியாகும். இதிலிருந்து 1200 க்கும் மேற்பட்ட உடல் எச்சங்கள் மீட்கப்பட்டதாக லிபிய இடைக்கால அரசு தெரிவித்தது[1]. இந்த புகைகுழியின் மேற்பரப்பில் இருந்து உடல் எச்சங்கள் மற்றும் உடைகளின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

விபரம் தொகு

சூன் 28 1996ல் சிறை நிலைமைகள் மிக மோசமாக இருப்பதாகவும், தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி சிறைக் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், கைதிகள் சிறைக் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்றனர். அப்போது ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. கைதிகளை கொல்ல முஅம்மர் கடாபி உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இறந்தவர்கள் அனைவரும் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்பட்டது.

இந்நிலையில், அபு சலிம் சிறை வளாகத்தில், முன்பு பணியாற்றிய சிறை அலுவலர்கள் உதவியுடன், கைதிகள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டதாக, லிபியா இடைக்கால கவுன்சில் உறுப்பினர் கமால் அல் ஷரீப் தெரிவித்திருந்தார். இது விடயமாக மருத்துவ அதிகாரியான டாக்டர் ஒஸ்மன் அப்துல் ஜலீல் பின்வருமாறு கூறியிருந்தார் '1,270க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புகளை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டெடுக்கப்பட்டவர்களின் உறவினர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம்.'

மேற்கோள்கள் தொகு

  1. "More than 1,200 bodies found in Tripoli mass grave". பிபிசி. 25 செப்டம்பர் 2011. http://www.bbc.co.uk/news/world-africa-15055109. பார்த்த நாள்: 25-09-2011. 

உசாத்துணை தொகு