திருக்குறள் மணக்குடவர் உரை

திருக்குறள் மணக்குடவர் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவரும், பரிமேலழகருக்கு உரை வழிகாட்டியாக விளங்கியவருமான மணக்குடவர் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும்[1].

இந்த உரையின் தனித்தன்மையையும் சிறப்பியல்புகளையும் ஆய்ந்து, கு. மோகனராசு போன்ற அறிஞர்கள் வெளியிட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் சில தகவல்கள் இங்கே தொகுக்கப்படுகின்றன.

பரிமேலழகர் உரைக்கு வழிகாட்டி தொகு

"உரையாசிரியர்கள்" என்னும் நூலை எழுதிய மு.வை. அரவிந்தன் என்பவர் பின்வருமாறு கூறிகின்றார்:

திருக்குறள் உரைகளில், பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக அச்சேறி மக்களிடத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்ற பெருமை, மணக்குடவர் உரைக்கு உண்டு. பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும்...

பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார். அதிகாரந் தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். பல குறட்பாக்களின் உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர் மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார். "அறத்தாறு இதுவென" என்ற குறளின் (37) விளக்கவுரையில் மணக்குடவர், "இது பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று" என்கிறார். பரிமேலழகர் அவர் கருத்தைத் தழுவி, "இதனாற் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது" என்று உரைக்கின்றார்.

"செவிக்குணவு" என்ற குறளின் (412) உரையில் மணக்குடவர், "பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காம நுகர்ச்சியை விரும்பும் ஆதலான், 'சிறிது' என்றார்" என்று கூறுகின்றார். பரிமேலழகர் அவர் கருத்தை மேற்கொண்டு "நோயும் காமமும் பெருகுதலால் 'சிறிது' என்றும் கூறினார்" என்று உரைக்கின்றார்.

"உலகம் தழீஇயது" என்ற குறளின் (425) உரையில் மணக்குடவர், "நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இன்றி, ஒரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு" என்று கூறுகிறார். பரிமேலழகர் அக்குறளின் விளக்கவுரையில், "கயப்பூப் போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்" என்று மணக்குடவர் கருத்தைத் தழுவி எழுதுகின்றார்.

வேறு சில இடங்களில் பரிமேலழகர், மணக்குடவரைப் பெரிதும் மதித்து அவர் உரையையும் கருத்தையும் சுட்டிச் செல்லுகின்றார். அவர் கருத்துப் பொருந்தா இடங்களைக் காரணங்கூறி மறுக்கின்றார். (மேற்குறிப்பு, பக்கங்கள்: 3;6).

மணக்குடவர் உரை அச்சேறிய வரலாறு தொகு

முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்ட பெருமை வ.உ. சிதம்பரனாரைச் சாரும். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல், மணக்குடவரின் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.

முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும் 1849இல் சென்னையில் எம். வீராசாமியால் பதிப்பிக்கப்பட்டது என்பதைக் கருதும்போது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மணக்குடவர் உரை பொதுமக்களின் கவனத்திற்கு வராமலே இருந்தது என்பது தெரியவருகிறது.

திருக்குறள் உரை என்றாலே அது பரிமேலழகர் உரைதான் என்னும் உயர்வு நிலையில் - உணர்வு நிலையில் பரிமேலழகரின் உரை தமிழறிந்தார் மனத்தில் ஆட்சி செலுத்தியது. பரிமேலழகர் உரை வைதிக சிந்தனையை உள்ளடக்கியிருந்ததும் இலக்கண நுட்பம் செறிந்ததுமாக விளங்கியது இதற்கு முக்கிய காரணம்.

உரை ஒற்றுமை வேற்றுமைகள் தொகு

ச. தண்டபாணி தேசிகர் எழுதிய "திருக்குறள் உரை வளம்" (பின்னர் ஏழு தொகுதிகளாய் அமைந்த "திருக்குறள் உரைக்களஞ்சியம்"), இரா. சாரங்கபாணி எழுதிய "திருக்குறள் உரை வேற்றுமைகள்" (பின்னர், மூன்று தொகுதிகள்), திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட "திருக்குறள் உரைக் கொத்து", கி.வா. ஜகந்நாதன் வெளியிட்ட "திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு" போன்றவை 1970-80களில் வெளிவந்தன. இந்நூல்களில் பண்டைய உரையாசிரியர்கள் மற்றும் புதிய உரையாசிரியர்கள் ஆகியோரின் திருக்குறள் உரைகளும் விளக்கங்களும் ஒற்றுமை வேற்றுமை காட்டி வழங்கப்பட்டன.

இவ்வாறு பரிமேலழகர் உரை மட்டுமே ஏற்புடையது என்ற நிலை மாறி, மற்ற உரையாசிரியர்களின் உரைத்திறனும் வளமையும் தெரிய வந்தன. இதனால் மணக்குடவரின் உரையும் அறியப்படலாயிற்று.

மணக்குடவரின் திருக்குறள் அமைப்பு தொகு

மணக்குடவர் திருக்குறளை மூன்று பால்களாகக் காண்கின்றார். அறத்துப்ப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன அந்த மூன்று பால்கள் என்னும் பகுதிகள். மணக்குடவரிடம் காணப்படும் அந்த முப்பால் பகுப்பு, அவருக்குப் பின் வந்த பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய பழைய உரையாசிரியர்களின் உரைகளிலும் காணப்படுகின்றது.

இந்த முப்பால் பகுப்பு, எல்லா உரைகளிலும் ஒன்றாக இருப்பதாலும், திருக்குறளுக்கு முப்பால் என்பதே முதற்பெயராக இருந்துள்ளதாலும், வாழ்க்கையின் உறுதிப் பொருள்களாகத் தமிழர்கள் இந்த மூன்றையே இலக்கண இலக்கியங்களில் வெளிப்படுத்தியிருப்பதாலும், மரபு வழியாக - வழிவழியாக - திருக்குறளில் இந்த முப்பால் பகுப்பே இருந்துள்ளது எனக் கொள்ளலாம்.

வேறு சான்றாதாரங்கள் கிடைக்கும் வரை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்றும் கொள்ளலாம்[2].

முப்பாலுக்குள் நாற்பால் காணும் முயற்சி தொகு

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிமேலழகர் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,

புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...

என்று மணக்குடவர் விளக்குகிறார்.

அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்.

திருக்குறளைப் புருடார்த்த வரையறைக்குள் கொண்டு வருகின்ற பரிமேலழகர் கூற்று[3] யாவரும் அறிந்ததே:

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

இப்பார்வை, திருவள்ளுவரை ஒரு "தெய்வ" நிலைக்கு உயர்த்தும் முயற்சி இருந்ததையே சுட்டுகிறது.

முப்பால்களில் இயல் பகுக்கும் முறையில் வேற்றுமை தொகு

திருக்குறளின் அடிப்படைப் பிரிவாகிய அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் பிரிவு முறை வள்ளுவராலேயே செய்யப்பட்டது என்று கொண்டாலும், அந்த மூன்று பால்களின் உட்பிரிவாகிய "இயல்"கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்னும் போது பழைய உரையாசிரியர்கள் நடுவில் கூட பல வேற்றுமைகள் உள்ளன.

மணக்குடவர் அறத்துப்பாலைப் பிரிக்கும் முறை தொகு

பண்டைய திருக்குறள் உரையாசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளார்.

அதே முறையைப் பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் மற்றும் பரிமேலழகர் பின்பற்றுகின்றனர்.

இவ்வாறு அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்காகப் பகுத்துக் காணும் போக்கு மணக்குடவருக்கு முன் அல்லது அவரது காலத்தில் உருவாக்கம் பெற்றுவிட்டதைக் காண முடிகின்றது. இந்தப் பகுப்பை மணக்குடவரே உருவாக்கியிருக்கவும் கூடும். ஆனால் அதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.

பழைய உரையாசிரியர்கள் காலமான 300 ஆண்டுக் காலமும் இந்த மரபே தொடர்ந்துள்ளது. அதன் பின்னரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சுகாத்தியர் உரை வரும் வரையிலும் (1889) இந்த மரபே தொடர்ந்துள்ளது.

இங்கே பரிமேலழகர் ஒரு உட்பிரிவைப் புகுத்தியுள்ளார். அதாவது, அறப்பாலின் நான்காம் இயலாகிய துறவறவியலை இவர் விரதம், ஞானம் என இரண்டாகப் பகுத்துக் கொள்கிறார். இந்த மாற்றம் மற்ற பழைய உரையாசிரியர்களிடம் காணப்படாத ஒன்று ஆகும்.

மணக்குடவர் பொருட்பாலைப் பிரிக்கும் முறை தொகு

பொருட்பாலை மணக்குடவர் பின்வருமாறு பகுக்கின்றார்:

இயல் பெயர் அதிகாரங்கள் அமைப்பு
அரசியல் 39 முதல் 63 முடிய
அமைச்சியல் 64 முதல் 73 முடிய
பொருளியல் 74 முதல் 78 முடிய
நட்பியல் 79 முதல் 83 முடிய
துன்பவியல் 84 முதல் 95 முடிய
குடியியல் 96 முதல் 108 முடிய

இந்தப் பாகுபாட்டைப் பரிப்பெருமாள் அப்படியே பின்பற்றுகின்றார். ஆனால், காலிங்கள் இவர்களிலிருந்து மாறுபட்டு,

அரசியல் - 38 முதல் 63 அதிகாரங்கள்
அமைச்சியல் - 64 முதல் 108 அதிகாரங்கள்

என்று இரு இயல்களாக மட்டுமே பகுக்கின்றார். இவ்வாறு, பரிப்பெருமாள் அமைச்சியல் என்பதில் மணக்குடவர் சுட்டும் ஐந்து பகுப்புகளை ஒன்றாக்கிக் கொள்கின்றார்.

பரிமேலழகர் மேற்கூறிய இரண்டு பாகுபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டுப் புதியதொரு பகுப்பு முறையை உண்டாக்கிக் கொள்கிறார். அப்பகுப்பு முறை வருமாறு:

இயல் பெயர் அதிகாரங்கள் அமைப்பு
அரசியல் 39 முதல் 63 முடிய
அமைச்சியல் (அங்கவியல்) 64 முதல் 95 முடிய
ஒழிபியல் 96 முதல் 108 முடிய

மணக்குடவரின் பகுப்பு முறையிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் வேறுபடுகின்றார்கள் என்றாலும், அவர்கள் அதிகார வைப்பு முறைகளை மாற்றிவிடவில்லை. அதிகார வைப்பு முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு, பகுப்பதில் தான் வேறுபடுகின்றார்கள்.

இவர்களை அடுத்து வரும் திருவள்ளுவமாலைப் புலவர் போக்கியார், பொருட்பாலைப் பின்வருமாறு ஏழாகப் பகுப்பதைக் காண முடிகின்றது: அரசியல்
அமைச்சியல்
அரணியல்
பொருளியல்
படையியல்
நட்பியல்
குடியியல்

இந்த அமைப்பு முறை, பொருட்பாலில் வரும் முதல் அதிகாரத்தோடு பொருந்த வருகின்றது. இந்தப் பகுப்பே இன்று பெரிதும் பின்பற்றப்படுகின்றது.

மணக்குடவர் காமத்துப்பாலைப் பிரிக்கும் முறை தொகு

காமத்துப்ப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர். இதை,

காமத்துப்பால் கூறுவார் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணையும் முதல் கரு உரிப்பொருள் பற்றிப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரோ ஒரு நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்து அதிகாரத்தான் கூறி

என வரும் மணக்குடவர் கூற்றுவழி அறிய முடிகின்றது.

காலிங்கரும் பரிமேலழகரும் வேறு வகையில் காமத்துப்பாலின் இயல்களைப் பிரிக்கின்றனர்.

மணக்குடவர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை தொகு

திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் பிற பழைய உரையாசிரியர்களின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.

இனியவை கூறல்
அடக்கமுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை

ஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.

ஆனால், ஏனைய உரையாசிரியர்கள் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

அதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, ஏனைய உரையாசிரியர்கள் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

மணக்குடவரின் குறள் வைப்பு முறை தொகு

அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் ஒரு முறையைக் கையாளுகின்றார். ஆனால் பிற பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி குறள் வைப்பு வரிசைமுறையை மாற்றியுள்ளார்கள்.

திருக்குறளின் முதல் அதிகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:

திருக்குறள் முதல் அதிகாரத்தில் வரும் குறள்களின் முதல் சீர்கள் மணக்குடவர் வைப்பு முறை பரிப்பெருமாள் வைப்பு முறை பரிதியார் வைப்பு முறை காலிங்கர் வைப்பு முறை பரிமேலழகர் வைப்பு முறை
அகர முதல எழுத்தெல்லாம் 1 1 1 1 1
கற்றதனால் ஆய பயன் என்கொல் 2 2 2 2 2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 3 3 3 3 3
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு 6 6 5 7 4
இருள் சேர் இருவினையும் சேரா 7 7 6 6 5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 8 8 7 7 6
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு 4 4 6 4 7
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு 5 5 10 9 8
கோளில் பொறியில் குணமிலவே 10 10 8 5 9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் 9 9 9 10 10

மணக்குடவர் கொள்ளும் திருக்குறள் பாடமும் வேறுபாடுகளும் தொகு

தலைமுறை தலைமுறையாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்த திருக்குறளின் படிகள் பல பாட வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

என்றாலும், மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியராக விளங்குவதால் அவர் கையாளுகின்ற மூல பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவருடைய மூல பாடத்திலிருந்து, பின் வந்த பழைய உரையாசிரியர்கள் பின்வரும் எண்ணிக்கையில் வேறுபடுவதை அறிய முடிகிறது:

மணக்குடவர் குறள் பாடத்திலிருந்து வேறுபாடுகள்

உரையாசிரியர் குறள் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை
பரிப்பெருமாள் 16
பரிதியார் 20
காலிங்கர் 171
பரிமேலழகர் 120

மேலே காட்டிய பட்டியலிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் தாம் விரும்பியவாறு பாடங்களை மாற்றியுள்ளனர் என அறிய முடிகின்றது. இந்தப் பாட வேறுபாடுகளுக்கு ஒருவேளை அவர்களுக்குக் கிடைத்த சுவடிகளும் காரணமாக இருக்கலாம்.

மணக்குடவர் ஆய்வின் பயன் தொகு

எனவே, திருக்குறளின் பால் பகுப்பில் (அறம், பொருள், காமம்) பழைய உரையாசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பது தெளிவு. பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது.

ஆனால், இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகிய இவற்றின் வைப்பு முறையில் பழைய உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். அதுபோலவே, அவர்களிடையே பாட வேறுபாடுகளும் பல காணப்படுகின்றன.

இதிலிருந்து, பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்டவர்கள் பழைய உரையாசிரியர்களே என்பது தெளிவாகிறது.

மேலும் காண்க தொகு

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)
திருக்குறள் பழைய உரைகள்
திருக்குறள் வைப்புமுறை
திருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)

ஆதாரங்கள் தொகு

  1. திருக்குறள் மணக்குடவர் உரை (பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2003, பக்கங்கள்: 370.
  2. கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், 2005, பக். 12-13.
  3. முனைவர் இரா. சாரங்கபாணி, திருக்குறள் பரிமேலழகர் உரை, தொகுதி 1 அறத்துப்பால், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2003, பக். 33).


தொடர் வரிசை எண் திருக்குறளுக்கு முறை மாறிய உரை வகுத்த ஆசிரியர் உரையாசிரியர் வாழ்ந்த காலம்/உரை வெளியான ஆண்டு முறை மாறிய உரையின் தன்மை
0 மணக்குடவர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10ஆம் நூற்றாண்டு மணக்குடவர் உரையில் அமைந்த திருக்குறள் மூலப் பதிவே முதற் பதிவு என்பதாலும், பரிமேலழகர் மணக்குடவருக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகள் பிற்பட்டவர் என்பதாலும், திருக்குறளில் காணும் பால், இயல், அதிகாரம், குறள்கள் போன்றவற்றிலான வைப்பு முறைகளை மணக்குடவர் அவர்களின் உரையை அடிப்படையாகக் கொண்டு காண்பதுதான் முறை
1 காலிங்கர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 171.
2 பரிதியார் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 20.
3 பரிப்பெருமாள் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 16.
4 பரிமேலழகர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவை ஏற்கின்றார். ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து பல இடங்களில் வேறுபடுகின்றார். மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 120.
5 சுகாத்தியர் T.M. Scott என்ற ஆங்கில நாட்டு அறிஞர்; தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்ப்படுத்திக் கொண்டார் - உரை வெளியீடு: 1889: "திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருதுரயட்டவணையும் பொழிப்புரயும்" திருக்குறளின் முப்பால்களின் பெயர்களை மாற்றினார். அறத்துப்பாலிலுள்ள பாயிரத்தைத் தனியே பிரித்து அப்பாயிரத்துக்கு "நூன்முகம்" என்று பெயரிட்டு, அந்தப் பாயிரத்தில் வரும் அதிகாரப் பெயர்களையும் மாற்றியமைத்தார். ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகவும், ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று இயல்களாகவும், ஒவ்வோர் இயலையும் மூன்று உடைமைகளாகவும் பிரித்தார். எதுகை மோனை அமைவுகளில் தாம் கருதும் அமைவு கருதிப் பெரும் மாற்றங்களைச் செய்தார். அவரே புதுப்புதுக் குறள்களை உருவாக்குவதுபோல் தெரிகிறது.
6 வ. உ. சிதம்பரனார் உரை வெளியீடு: 1935: "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" திருக்குறளில் வரும் முதல் மூன்று அதிகாரங்களை இடைச்செருகல் என்று கருதுகிறார். எனவே, அப்பகுதியை "இடைப்பாயிரம்" என்கிறார். அறத்துப்பால் என்பதை அறப்பால் என்று மாற்றுகிறார். காமத்துப்பாலை இன்பப்பால் என்கிறார். அறத்துப்பாலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் பாடத்தைத் திருத்தியுள்ளார். சில வேளைகளில் பரிமேலழகருக்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்களைப் பின்பற்றி இத்திருத்தங்களைச் செய்துள்ளார்.
7 திரு. வி. கலியாணசுந்தரனார் உரை வெளியீடு: 1939: "திருக்குறள் விரிவுரை - பாயிரம்"; 1941: "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால்-இல்லறவியல்" இவர் செய்த முக்கிய மாற்றம், அதிகாரங்களில் வரும் குறள்களின் வைப்பு முறையை மாற்றியது ஆகும். பரிமேலழகரைப் போலவே திரு.வி.க.வும் தம் போக்கிற்கேற்ப குறட்பாக்களின் வைப்புமுறையை மாற்றியுள்ளார். அதற்கான காரணங்களையும் கூறுகின்றார்.
8 மு. வரதராசன் உரை வெளியீடு: 1948: "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" இவர் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் பால் அமைப்பு முறையைக் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று வரிசை மாற்றி வைத்துள்ளார். ஆனால் 1949இல் மு. வரதராசனார் "திருக்குறள் தெளிவுரை" என்னும் நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்றே வரிசைப்படுத்தியுள்ளார். உரை நூலில் மரபு மாறினால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பழைய மரபை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.
9 புலவர் அ.மு. குழந்தை உரை வெளியீடு: 1949: "திருக்குறள் குழந்தையுரை" பரிமேலழகரின் வைதிக உரைக்கு மாற்றாக, திராவிட இயக்கப் பின்னணியில் முதலில் வெளிவந்த உரை "திருக்குறள் புலவர் குழந்தையுரை" ஆகும். இவர் திருக்குறளுக்குப் பகுத்தறிவு நோக்கில் எளிமையாகப் புரியும் வகையில் உரை வழங்குவதையே முதன்மை நோக்காகக் கொண்டுள்ளார். எனவே, இயல், அதிகாரப் பகுப்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவில்லை; என்றாலும் நடைமுறைக்கு ஏற்ப அதிகார வைப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்கின்றார்.
10 ரா.ந. கல்யாணசுந்தரம் உரை வெளியீடு: 1955: "தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்)" இவரது உரை நூலில், திருக்குறளில் வரும் இறுதிச் சீர்களின் அகரவரிசையில் குறள்களை மாற்றி அமைத்து, குறட்பாக்களுக்குப் பரிமேலழகரின் உரையைத் தழுவி உரைகண்டுள்ளார். நினைவாற்றல் பயிற்சிக்கு இது பெரும் துணையாகும். இது முறைமாறிய அமைப்பு ஆயினும் பயனுள்ள ஒன்று.
11 டாக்டர் தே. ஆண்டியப்பன் உரை வெளியீடு: 1978: "குறள் கண்ட நாடும் வீடும்" இந்நூலில் இவர் பொருட்பாலில் தொடங்கி, 1330 குறள்களையும் அவற்றின் அதிகார உள்ளடக்கத்தைச் சிதைக்காமல், அதிகாரங்களை மாற்றி, நாடும் வீடும் என்பதற்குள் அடக்கி விடுகின்றார். இந்நூல் ஓர் உரைத்தொகுப்பு விளக்க ஆய்வுநூல் என்னும் முறையில் அமைகின்றது.
12 கு. ச. ஆனந்தன் உரை வெளியீடு: 1986: "திருக்குறள் உண்மைப் பொருள்" இவர் தமது திருக்குறள் உண்மைப் பொருள் என்னும் நூலில், ஒரு புதிய பகுப்பு முறையை உருவாக்கிக் கொண்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாக்கி 1080 குறள்களையும் தாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்து, ஒரு புதிய பார்வையில் தருகின்றார். இவர் பால், இயல், அதிகாரம், அதிகாரத்தில் வரும் குறள்கள் என்னும் அனைத்தையும் மாற்றித் தாமே ஒரு புதுப் பகுப்பை உருவாக்கிக்கொண்டுள்ளார். 108 அதிகாரங்களை 115 தலைப்புகளில் அடக்கியுள்ளார். ஒரு தலைப்பில் ஒன்றுமுதல் 23 வரை குறட்பாக்கள் உள்ளடக்கமாகியுள்ளன. காமத்துப்பாலில் வரும் குறட்பாக்களை ஒரு நாடகப் போக்கில் மாற்றி அமைத்து உரை எழுதி தனி நூலாக 1989இல் "மலரினும் மெல்லிது காமம்" என்னும் பெயரில் வெளியிட்டார். இவருடைய படைப்பை உரைநூல் என்பதைவிட ஆய்வுநூல் எனலாம்.
13 கவிரத்தின நலங்கிள்ளி உரை வெளியீடு: 1990: "பொதுமறை அமுது" இவர் இந்நூலில் திருக்குறள் அதிகார முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளார். அதற்கான காரணங்களையும் காட்டுகின்றார்.
14 டாக்டர் ஜனகாசுந்தரம் உரை வெளியீடு: 1995: "திருக்குறள் தொகுப்புரை" இந்நூலில் இவர் இறுதிச் சீர் அடிப்படையில் திருக்குறளுக்கு உரைகண்டுள்ளார். குறள் வரும் அதிகார எண், அந்த அதிகாரத்தில் குறள் பெரும் வரிசை எண் போன்றவை தரப்படவில்லை. குறளின் எண் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது.
15 சாலமன் பாப்பையா உரை வெளியீடு: 1995: "திருக்குறள் - உரையுடன்" இவர் திருக்குறள் வைப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து தம் உரை நூலை வெளியிட்டார். பால், இயல் என்னும் பிரிவுகளை விளக்கி, 133 அதிகாரங்களையும் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். களவியலில் வரும் சில அதிகாரங்களைத் திருமண வாழ்க்கையில் வருமாறு இணைக்கிறார். திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை சமுதாயம் என்னும் பிரிவின்கீழ் கொண்டுவருகின்றார்.
16 ஆரூர் தாஸ் உரை வெளியீடு: 2000: "அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி" இவர் வெளியிட்ட குறள் அகராதி நூலில் 1330 குறட்பாக்களையும் முதல் சீர்களின் அகர வரிசையில் தொகுத்து, அக்குறள்களுக்கு உரை வரைந்துள்ளார். குறள் எண்ணுக்குப் பரிமேலழகர் முறை வைப்பையே பயன்படுத்துகிறார். முறை மாறிய உரை ஆயினும் பயன் கருதிய மாற்றம் இது.
17 இராஜகாந்தீபன் உரை வெளியீடு: 2000: "ஆளவும் வாழவும்" இவர் வெளியிட்ட நூல் மரபு சார் உரை நூல் அல்ல என்றாலும், இவர் புதுக்கவிதை நடையில் தந்துள்ள விளக்கங்கள் பல குறள்களுக்கு விளக்கங்களாகவும் அமைந்துள்ளன. இவர் திருக்குறளை ஓர் அரசியல் நூலாகக் கொண்டு, அதில் காமத்துப்பாலுக்கு இடம் இல்லை என்கிறார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால்களில் வரும் 108 அதிகாரங்களையும் 38 பெயர்களாலான பகுப்புகளுள் அடக்க முயன்றுள்ளார். இது திருக்குறளுக்கு முற்றிலும் புதிய வகையிலான முறை வைப்பு.
18 புலவர் குடந்தையான் உரை வெளியீடு: 2001: "திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை" இவர் வெளியிட்ட திருக்குறள் உரை நூலில் பால் வைப்பு முறை மாற்றங்களும் அதிகார வைப்பு முறை மாற்றங்களும் ஒரு சில குறட்பா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மு. வரதராசனைப் போல் இவரும் காமத்துப்பாலில் தொடங்குகின்றார். அதன் பின் பொருட்பால் வருகிறது. இதில் 58 அதிகாரங்களை மட்டுமே கொண்டு, மீதமுள்ள 12 அதிகாரங்களையும் அறத்துப்பாலில் சேர்த்து அறத்துப்பாலை 50 அதிகாரங்களாகக் கொள்கிறார். இவர் அதிகார வைப்பு முறையில் தமது பார்வைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார். ஆனால், அதிகாரப் பெயர்களை மாற்றவில்லை, குறளில் வரும் சொற்களையும் மாற்றவில்லை.
19 அ.மா. சாமி உரை வெளியீடு: 2003: "திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)" கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் திருக்குறள் பல முறை சிதைக்கப்பட்டது என்றும், எனவே "செம்பதிப்பு" ஒன்று தேவை என்றும் கருதி, அறிஞர்கள் ஒன்று கூடி அததகைய படைப்பை ஆக்காத நிலையில் தானாகவே அந்த முயற்சியில் இறங்கியதாக இவர் கூறுகிறார். தமது உரைக்கு "திருக்குறள் செம்பதிப்பு" என்றே பெயர் இட்டுள்ளார். பழைய உரைகாரர்களுள் முதல்வராகிய மணக்குடவரின் பாடத்தை மிகுதியாக எடுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார். அதிகாரங்களை மாற்றியுள்ளார். குறள்களில் சில சொல் மாற்றங்களையும் செய்துள்ளார். அதற்கான காரணங்கள் தரப்படவில்லை.
20 க.ப. அறவாணன் உரை வெளியீடு: 2006: "திருவள்ளுவம்" இவர் திருக்குறள் முழுமைக்கும் "கருத்துவழிப் பகுப்பு முறை"யில் தெளிவுரை எழுதியுள்ளார். காமத்துப்பால் அதிகார வரிசை மாற்றப்படவில்லை. ஆனால் "இக்காலத் தமிழ் வாசகர் தேவையை முன்னிறுத்தி" அறப்பாலிலும் பொருட்பாலிலும் அதிகார வரிசையை மாற்றியுள்ளார். திருக்குறள் முழுமையையும் 16 இயல்களாக முறைப்படுத்துகின்றார்.