திருக்குறள் சுகாத்தியர் உரை

திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி 1889இல் வெளியிட்ட நூலைக் குறிக்கும். இந்த உரையின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரையட்டவணையும் பொழிப்புரையும் என்பதாகும். இதை லாறன்சு பிர்ஸ், சென்னை வெளியிட்டது.

தமிழ் ஆர்வலர் தொகு

சுகாத்தியர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைத் தமிழில் உருவாக்கினார்.[1]

ஔவையார் எழுதிய "மூதுரை" என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது.

"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார்.

சுகாத்தியர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் நிறைகுறைகள் தொகு

திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைகளுக்குப் பிறகு பெருமளவில் மாற்றங்களைப் புகுத்தி உரை எழுதிய முதல் அறிஞர் சுகாத்தியர் ஆவார்.[2]

இவர் பதித்த திருக்குறள் பதிப்பு சில தனித்தன்மைகள் கொண்டது. அதில் "ஐ" என்னும் எழுத்தை சுகாத்தியர் "அய்" என்று எழுதினார். முப்புள்ளியை அடுத்து வருகின்ற தனி மெய்யெழுத்தை இரட்டை மெய்யெழுத்தாக எழுதினார். மேலும் பல புதுமைகளைப் புகுத்தினார். மூல பாடத்தைத் தம் விருப்பத்துக்கு ஏற்ப திருத்தியதாகத் தெரிகிறது. வழக்கமான பதிப்புகளுக்கும் இப்பதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. - இவ்வாறு L.D. Barnett என்பவர் குறிப்பிடுகிறார்.[3]

சுகாத்தியர் புகுத்திய மாற்றங்கள் தொகு

திருக்குறளின் மூல பாடத்தைப் பதித்து, அதற்கு உரை எழுதிய சுகாத்தியர் என்னென்ன மாற்றங்களைப் புகுத்தினார் என்பதை முனைவர் கு. மோகனராசு விரிவாக விளக்கியுள்ளார். அவரது ஆய்வு முடிவுகள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன.[4]

சுகாத்தியர் திருக்குறளில் வரும் பால், இயல், அதிகாரம் ஆகிய அமைப்புகளை முற்றிலுமாக மாற்றித் தாம் ஒரு புதிய முறையில் அமைத்து, உரை கண்டுள்ளார். எதுகை மோனை என்பவற்றில் பெரும் நாட்டம் கொண்ட இவர், தாம் கருதும் எதுகை மோனை அமைவுக்காகக் குறள்களில் வரும் சொற்கள் பலவற்றையும் மாற்றி அமைத்துத் தாம் அமைத்த பாடங்களுக்குத் தக உரையும் வழங்கியுள்ளார்.

பாயிரத்தை மாற்றுதல் தொகு

திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்கள் "பாயிரம்" என்னும் தலைப்பில் அறத்துப்பாலோடு சேர்ந்து அமைவது மரபு. சுகாத்தியர், பாயிரத்தை அறத்துப்பாலிலிருந்து தனியே பிரிக்கிறார். அதற்கு "நூன்முகம்" என்று மறுபெயர் இடுகிறார். பாயிரத்தின் அதிகாரப் பெயர்களைக் கீழ்வருமாறு மாற்றுகின்றார்:

வழக்கமான அதிகாரப் பெயர் சுகாத்தியர் அளித்த மாற்றுப் பெயர்
கடவுள் வாழ்த்து முதற்பொருள் வாழ்த்து
வான்சிறப்பு மழைத்துணை வாழ்த்து
நீத்தார் பெருமை துறவுரன் வாழ்த்து
அறன்வலியுறுத்தல் அறமுறை வாழ்த்து

இந்த நான்கு அதிகாரங்களும் முறையே ஆணவ மல நீக்கம், மாயா மல நீக்கம், காமிய மல நீக்கம், அறத்தின் ஊக்கம் ஆகியன கூறுவதாகக் கொள்கிறார்.

திருக்குறளைப் பிரித்தல் தொகு

மேலே கூறிய நான்கு அதிகாரங்களையும் தனிப்படுத்திய பின், திருக்குறளின் எஞ்சிய 129 அதிகாரங்களை சுகாத்தியர் மூன்று சம பங்குகள் ஆக்குகின்றார். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் 43 அதிகாரங்களை அமைக்கிறார். அந்த மூன்று பிரிவுகளுக்கும் புதிய பெயர்கள் வழங்குகின்றார்:

  • இயன் முறைப் பால்
  • இயை முறைப் பால்
  • இறை முறைப் பால்

பால் பகுப்பில் பெயர் மாற்றங்கள் மட்டுமல்ல, அவற்றிற்குரிய அதிகாரங்களின் உள்ளடக்கங்களையும் மாற்றி அமைத்துக் கொள்கிறார்.

இயன் முறைப் பால் என்னும் முதற்பிரிவில், மரபு வழியாக வரும் இல்லறவியல் (இரண்டு அதிகாரங்கள் நீங்கலாக), காமத்துப்பால் குறட்பாக்களை உள்ளடக்கமாக்கிக் கொண்டுள்ளார். பொருட்பால், துறவறவியல், இல்லறவியலில் வரும் இரண்டு அதிகாரங்கள் ஆகியவற்றை ஒன்றாக்கி ஒவ்வொன்றும் 43 அதிகாரங்கள் வருமாறு இயை முறைப் பால், இறை முறைப் பால் என இரண்டு பிரிவுகளாக்கிக் கொள்கிறார். அதிகாரத்திற்குப் பதிகம் எனப் பெயர் அமைத்துக் கொண்டுள்ளார்.

விந்தையான பால் பகுப்பு முறை தொகு

சுகாத்தியர் திருக்குறளின் பால் பகுப்பு முறைகளைப் பெருமளவு மாற்றியுள்ளார்:

  • ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகப் பிரித்துக் கொண்டுள்ளார்.
  • ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று மூன்று இயல்களாகப் பிரித்துக் கொண்டுள்ளார்.
  • ஒவ்வோர் இயலையும் மூன்று மூன்று உடைமைகளாகப் பிரித்துக் கொண்டுள்ளார்.
  • ஒவ்வோர் ஆண்மைப் பகுப்பின் முடிவிலும் அந்தந்த ஆண்மையின் பயன் என ஒரு பிரிவையும் அமைத்துக் கொண்டுள்ளார்.

சுகாத்தியர் திருக்குறளின் பால் முறை அமைப்பிலும், அதிகாரப் பெயர் மாற்றத்திலும் எத்துணை ஈடுபாடு காட்டினார் என்பதைப் பின்வரும் அட்டவணை தெளிவாக்கும்:

திருக்குறளில் வரும் மரபுப் பெயர் சுகாத்தியர் தரும் புதுப் பெயர்
பாயிரம்

கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்

நூன்முகம்

முதற்பொருள் வாழ்த்து
மழைத்துணை வாழ்த்து
துறவுரன் வாழ்த்து
அறமுறை வாழ்த்து

இல்வாழ்க்கை

வாழ்க்கைத்துணை நலம்
மக்கட் பேறு
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவை கூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவுநிலைமை
அடக்கம் உடைமை
ஒழுக்கம் உடைமை
பிறனில் விழையாமை
பொறை உடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை

இயன்முறைப்பால்

பேறாண்மை வகை
* நோற்பியல்
தளிர்வுடைமை
விருந்துடைமை
அளவுடைமை
* சால்பியல்
நடுவுடைமை
அடக்குடைமை
ஒழுக்குடைமை
* நோக்கியல்
பொறயுடைமை
கெழுவுடைமை
விறலுடைமை
பேறாண்மைப் பயன்

பயனில சொல்லாமை

தீவினை அச்சம்
ஒப்புரவு அறிதல்
தகையணங்குறுத்தல்
குறிப்பறிதல்
புணர்ச்சி மகிழ்தல்
நலம்புனைந்துரைத்தல்
காதல் சிறப்பு உரைத்தல்
நாணுத் துறவு உரைத்தல்
அலர் அறிவுறுத்தல்
பிரிவு ஆற்றாமை
படர் மெலிந்து இரங்கல்
கண்விதுப்பு அழிதல்
பசப்புறு பருவரல்

ஆய்வாண்மை வகை

சூழ்வியல்
உரவுடைமை
மகிழ்வுடைமை
நகையுடைமை
* பீடியல்
மதியுடைமை
பணிவுடைமை
மடலுடைமை
* ஊரியல்
பிரிவுடைமை
துணைவுடைமை
பரிவுடைமை
ஆய்வாண்மைப் பயன்

தனிப்படர் மிகுதி

நினைந்தவர் புலம்பல்
கனவுநிலை உரைத்தல்
பொழுதுகண்டு இரங்கல்
உறுப்பு நலன் அழிதல்
நெஞ்சொடு கிளத்தல்
நிறை அழிதல்
அவர்வயின் விதும்பல்
குறிப்பு அறிவுறுத்தல்
புணர்ச்சி மகிழ்தல்
நெஞ்சொடு புலத்தல்
புலவி
புலவி நுணுக்கம்
ஊடல் உவகை

வீழ்வாண்மை வகை

காமியல்
நனவுடைமை
மலர்வுடைமை
கவினுடைமை
* ஏமியல்
நிறையுடைமை
நசையுடைமை
திகழ்வுடைமை
* பேணியல்
நினைவுடைமை
புணர்வுடைமை
உணர்வுடைமை
வீழ்வாண்மைப் பயன்

இப்பட்டியலில் காட்டியவாறே மற்ற இரண்டு பால்களும் அமைகின்றன. மரபுப்படியான அதிகாரப் பெயர்களுள் ஓரிரு தலைப்புகள் தவிர ஏனைய தலைப்புகள் அனைத்தையும் சுகாத்தியர் மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் ஒரு சில தலைப்புகள் எண்ணிப் பார்க்கத் தக்கனவாக உள்ளன. எடுத்துக்காட்டாக:

மரபு வழி அதிகாரத் தலைப்பு சுகாத்தியர் தரும் மாற்றுத் தலைப்பு
நாணுத் துறவு உரைத்தல் மடலுடைமை
புலவி புணர்வுடைமை
கள்ளுண்ணாமை களியுடைமை
பெருமை சிறப்புடைமை
உழவு ஏரியல்

சுகாத்தியர் தருகின்ற சில புதிய தலைப்புகள் எதிர்ப்பொருள் தருவனவாக உள்ளன. எடுத்துக்காட்டாக,

  • உறுப்பு நலன் அழிதல் என்பது "கவினுடைமை" என்றும்
  • உட்பகை என்பது "உறவுடைமை" என்றும்
  • நல்குரவு என்பது "வரவுடைமை" என்றும் மாற்றப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அதிகாரங்களுக்குப் பெயரிடும்போது, அந்த அதிகாரத்தில் வரும் ஒரு சொல்லை அடிப்படையாகக் கொண்டே பெயரிடுகின்றார் சுகாத்தியர் என்பது கருதத்தக்கது.

எதுகை மோனை அடிப்படையில் குறள் மாற்றங்கள் தொகு

சுகாத்தியர் பல குறள்களை எதுகை மோனை கருதி மாற்றியுள்ளார். சில எடுத்துக்காட்டுகள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்னும் குறள் (குறள்: 1) சுகாத்தியர் நூலில்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
முகர முதற்றே உலகு

என்று திருத்தப்பட்டுள்ளது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்னும் குறள் (குறள்: 69) சுகாத்தியர் நூலில்,

போன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனய்ச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்று திருத்தப்பட்டுள்ளது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

என்னும் குறள் (குறள்: 786) சுகாத்தியர் நூலில்,

நெகநக நட்பது நட்பன்று நெஞ்சம்
நகநக நட்பது நட்பு

என்று திருத்தப்பட்டுள்ளது.

எதுகை மோனை மாற்றங்களுக்குக் காரணம் தொகு

சுகாத்தியர் திருக்குறளின் பாடத்தைத் திருத்தியது பெருந்தவறு என்பது தெளிவு. பண்டைய இலக்கியமான திருக்குறள் தமிழ் மக்களால் மட்டுமன்றி உலக அளவிலேயே மாண்புடைய நூலாகப் போற்றப்படுவது. அதன் பாடத்தைத் திருத்த வேண்டும் என்றால் அதற்குப் போதிய சுவடி ஆதாரம் வேண்டும். பண்டைய உரையாசிரியர்களின் பாட வேறுபாடுகள் அறியப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் பாடத்திற்கு மாற்று பாடம் தர வேண்டும் என்றால் அறிஞர் உலகம் அதை ஏற்கும் வகையில் அது ஆதாரத்தோடு நிறுவப்படவும் வேண்டும். சுகாத்தியர் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேலும், எதுகை மோனை என்பது தமிழ் இலக்கியத்தில் எழுத்துக்கு எழுத்து பொருத்தமாக இருக்கவேண்டும் என்ற வகையில் தொகுக்கப்படுவதில்லை. மாறாக, ஓசை நயம், பொருள் நயம் போன்றவற்றிற்கு முதலிடம் கொடுப்பதே மரபு. ஆனால் சுகாத்தியர் எதுகை மோனை அமைப்பில் நேருக்கு நேர் பொருத்தம் ஏற்படுத்த எண்ணியதோடு, தம் மனம் போன போக்கில், சுவடி ஆதாரமின்றி, திருக்குறளைத் திருத்தியது ஏற்புடையதன்று.

பாண்டித்துரைத் தேவர் சுகாத்தியர் நூலை எரித்தது தொகு

சுகாத்தியர் உருவாக்கிய திருக்குறள் உரை பரவினால் மக்களிடையே குழப்பம் தான் மிகும், திருக்குறளின் மதிப்பும் கெடும் எனக் கருதிய பாண்டித்துரைத் தேவர், மற்றவர்கள் பார்வைக்குச் சென்ற சுமார் 200 நூல்களைத் தவிர்த்து, எஞ்சிய 300 சுகாத்தியர் பதிப்புகள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கி அவை அனைத்தையும் தீயிட்டு எரித்ததாக வரலாறு.[5]

ஆதாரம் தொகு

  1. இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).
  2. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, 2005, பக். 62.
  3. L.D. Barnett and G.U. Pope (compilers), A Catalogue of the Tamil Books in the Library of the British Museum, London, 1909, p. 384: "This edition is peculiar in writing அய் for ஐ throughout, a double consonant for a single consonant preccded by the " muppulli" and other innovations. The text has apparently been emended with great freedom, and differs considerably from, that of the current editions." இணையதள வெளி இணைப்பு
  4. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, 2005, பக். 22-27.
  5. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, மேற்குறிப்பு, பக். 27.


தொடர் வரிசை எண் திருக்குறளுக்கு முறை மாறிய உரை வகுத்த ஆசிரியர் உரையாசிரியர் வாழ்ந்த காலம்/உரை வெளியான ஆண்டு முறை மாறிய உரையின் தன்மை
0 மணக்குடவர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10ஆம் நூற்றாண்டு மணக்குடவர் உரையில் அமைந்த திருக்குறள் மூலப் பதிவே முதற் பதிவு என்பதாலும், பரிமேலழகர் மணக்குடவருக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகள் பிற்பட்டவர் என்பதாலும், திருக்குறளில் காணும் பால், இயல், அதிகாரம், குறள்கள் போன்றவற்றிலான வைப்பு முறைகளை மணக்குடவர் அவர்களின் உரையை அடிப்படையாகக் கொண்டு காண்பதுதான் முறை
1 காலிங்கர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 171.
2 பரிதியார் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 20.
3 பரிப்பெருமாள் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 16.
4 பரிமேலழகர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவை ஏற்கின்றார். ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து பல இடங்களில் வேறுபடுகின்றார். மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 120.
5 சுகாத்தியர் T.M. Scott என்ற ஆங்கில நாட்டு அறிஞர்; தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்ப்படுத்திக் கொண்டார் - உரை வெளியீடு: 1889: "திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருதுரயட்டவணையும் பொழிப்புரயும்" திருக்குறளின் முப்பால்களின் பெயர்களை மாற்றினார். அறத்துப்பாலிலுள்ள பாயிரத்தைத் தனியே பிரித்து அப்பாயிரத்துக்கு "நூன்முகம்" என்று பெயரிட்டு, அந்தப் பாயிரத்தில் வரும் அதிகாரப் பெயர்களையும் மாற்றியமைத்தார். ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகவும், ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று இயல்களாகவும், ஒவ்வோர் இயலையும் மூன்று உடைமைகளாகவும் பிரித்தார். எதுகை மோனை அமைவுகளில் தாம் கருதும் அமைவு கருதிப் பெரும் மாற்றங்களைச் செய்தார். அவரே புதுப்புதுக் குறள்களை உருவாக்குவதுபோல் தெரிகிறது.
6 வ. உ. சிதம்பரனார் உரை வெளியீடு: 1935: "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" திருக்குறளில் வரும் முதல் மூன்று அதிகாரங்களை இடைச்செருகல் என்று கருதுகிறார். எனவே, அப்பகுதியை "இடைப்பாயிரம்" என்கிறார். அறத்துப்பால் என்பதை அறப்பால் என்று மாற்றுகிறார். காமத்துப்பாலை இன்பப்பால் என்கிறார். அறத்துப்பாலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் பாடத்தைத் திருத்தியுள்ளார். சில வேளைகளில் பரிமேலழகருக்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்களைப் பின்பற்றி இத்திருத்தங்களைச் செய்துள்ளார்.
7 திரு. வி. கலியாணசுந்தரனார் உரை வெளியீடு: 1939: "திருக்குறள் விரிவுரை - பாயிரம்"; 1941: "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால்-இல்லறவியல்" இவர் செய்த முக்கிய மாற்றம், அதிகாரங்களில் வரும் குறள்களின் வைப்பு முறையை மாற்றியது ஆகும். பரிமேலழகரைப் போலவே திரு.வி.க.வும் தம் போக்கிற்கேற்ப குறட்பாக்களின் வைப்புமுறையை மாற்றியுள்ளார். அதற்கான காரணங்களையும் கூறுகின்றார்.
8 மு. வரதராசன் உரை வெளியீடு: 1948: "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" இவர் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் பால் அமைப்பு முறையைக் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று வரிசை மாற்றி வைத்துள்ளார். ஆனால் 1949இல் மு. வரதராசனார் "திருக்குறள் தெளிவுரை" என்னும் நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்றே வரிசைப்படுத்தியுள்ளார். உரை நூலில் மரபு மாறினால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பழைய மரபை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.
9 புலவர் அ.மு. குழந்தை உரை வெளியீடு: 1949: "திருக்குறள் குழந்தையுரை" பரிமேலழகரின் வைதிக உரைக்கு மாற்றாக, திராவிட இயக்கப் பின்னணியில் முதலில் வெளிவந்த உரை "திருக்குறள் புலவர் குழந்தையுரை" ஆகும். இவர் திருக்குறளுக்குப் பகுத்தறிவு நோக்கில் எளிமையாகப் புரியும் வகையில் உரை வழங்குவதையே முதன்மை நோக்காகக் கொண்டுள்ளார். எனவே, இயல், அதிகாரப் பகுப்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவில்லை; என்றாலும் நடைமுறைக்கு ஏற்ப அதிகார வைப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்கின்றார்.
10 ரா.ந. கல்யாணசுந்தரம் உரை வெளியீடு: 1955: "தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்)" இவரது உரை நூலில், திருக்குறளில் வரும் இறுதிச் சீர்களின் அகரவரிசையில் குறள்களை மாற்றி அமைத்து, குறட்பாக்களுக்குப் பரிமேலழகரின் உரையைத் தழுவி உரைகண்டுள்ளார். நினைவாற்றல் பயிற்சிக்கு இது பெரும் துணையாகும். இது முறைமாறிய அமைப்பு ஆயினும் பயனுள்ள ஒன்று.
11 டாக்டர் தே. ஆண்டியப்பன் உரை வெளியீடு: 1978: "குறள் கண்ட நாடும் வீடும்" இந்நூலில் இவர் பொருட்பாலில் தொடங்கி, 1330 குறள்களையும் அவற்றின் அதிகார உள்ளடக்கத்தைச் சிதைக்காமல், அதிகாரங்களை மாற்றி, நாடும் வீடும் என்பதற்குள் அடக்கி விடுகின்றார். இந்நூல் ஓர் உரைத்தொகுப்பு விளக்க ஆய்வுநூல் என்னும் முறையில் அமைகின்றது.
12 கு. ச. ஆனந்தன் உரை வெளியீடு: 1986: "திருக்குறள் உண்மைப் பொருள்" இவர் தமது திருக்குறள் உண்மைப் பொருள் என்னும் நூலில், ஒரு புதிய பகுப்பு முறையை உருவாக்கிக் கொண்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாக்கி 1080 குறள்களையும் தாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்து, ஒரு புதிய பார்வையில் தருகின்றார். இவர் பால், இயல், அதிகாரம், அதிகாரத்தில் வரும் குறள்கள் என்னும் அனைத்தையும் மாற்றித் தாமே ஒரு புதுப் பகுப்பை உருவாக்கிக்கொண்டுள்ளார். 108 அதிகாரங்களை 115 தலைப்புகளில் அடக்கியுள்ளார். ஒரு தலைப்பில் ஒன்றுமுதல் 23 வரை குறட்பாக்கள் உள்ளடக்கமாகியுள்ளன. காமத்துப்பாலில் வரும் குறட்பாக்களை ஒரு நாடகப் போக்கில் மாற்றி அமைத்து உரை எழுதி தனி நூலாக 1989இல் "மலரினும் மெல்லிது காமம்" என்னும் பெயரில் வெளியிட்டார். இவருடைய படைப்பை உரைநூல் என்பதைவிட ஆய்வுநூல் எனலாம்.
13 கவிரத்தின நலங்கிள்ளி உரை வெளியீடு: 1990: "பொதுமறை அமுது" இவர் இந்நூலில் திருக்குறள் அதிகார முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளார். அதற்கான காரணங்களையும் காட்டுகின்றார்.
14 டாக்டர் ஜனகாசுந்தரம் உரை வெளியீடு: 1995: "திருக்குறள் தொகுப்புரை" இந்நூலில் இவர் இறுதிச் சீர் அடிப்படையில் திருக்குறளுக்கு உரைகண்டுள்ளார். குறள் வரும் அதிகார எண், அந்த அதிகாரத்தில் குறள் பெரும் வரிசை எண் போன்றவை தரப்படவில்லை. குறளின் எண் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது.
15 சாலமன் பாப்பையா உரை வெளியீடு: 1995: "திருக்குறள் - உரையுடன்" இவர் திருக்குறள் வைப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து தம் உரை நூலை வெளியிட்டார். பால், இயல் என்னும் பிரிவுகளை விளக்கி, 133 அதிகாரங்களையும் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். களவியலில் வரும் சில அதிகாரங்களைத் திருமண வாழ்க்கையில் வருமாறு இணைக்கிறார். திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை சமுதாயம் என்னும் பிரிவின்கீழ் கொண்டுவருகின்றார்.
16 ஆரூர் தாஸ் உரை வெளியீடு: 2000: "அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி" இவர் வெளியிட்ட குறள் அகராதி நூலில் 1330 குறட்பாக்களையும் முதல் சீர்களின் அகர வரிசையில் தொகுத்து, அக்குறள்களுக்கு உரை வரைந்துள்ளார். குறள் எண்ணுக்குப் பரிமேலழகர் முறை வைப்பையே பயன்படுத்துகிறார். முறை மாறிய உரை ஆயினும் பயன் கருதிய மாற்றம் இது.
17 இராஜகாந்தீபன் உரை வெளியீடு: 2000: "ஆளவும் வாழவும்" இவர் வெளியிட்ட நூல் மரபு சார் உரை நூல் அல்ல என்றாலும், இவர் புதுக்கவிதை நடையில் தந்துள்ள விளக்கங்கள் பல குறள்களுக்கு விளக்கங்களாகவும் அமைந்துள்ளன. இவர் திருக்குறளை ஓர் அரசியல் நூலாகக் கொண்டு, அதில் காமத்துப்பாலுக்கு இடம் இல்லை என்கிறார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால்களில் வரும் 108 அதிகாரங்களையும் 38 பெயர்களாலான பகுப்புகளுள் அடக்க முயன்றுள்ளார். இது திருக்குறளுக்கு முற்றிலும் புதிய வகையிலான முறை வைப்பு.
18 புலவர் குடந்தையான் உரை வெளியீடு: 2001: "திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை" இவர் வெளியிட்ட திருக்குறள் உரை நூலில் பால் வைப்பு முறை மாற்றங்களும் அதிகார வைப்பு முறை மாற்றங்களும் ஒரு சில குறட்பா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மு. வரதராசனைப் போல் இவரும் காமத்துப்பாலில் தொடங்குகின்றார். அதன் பின் பொருட்பால் வருகிறது. இதில் 58 அதிகாரங்களை மட்டுமே கொண்டு, மீதமுள்ள 12 அதிகாரங்களையும் அறத்துப்பாலில் சேர்த்து அறத்துப்பாலை 50 அதிகாரங்களாகக் கொள்கிறார். இவர் அதிகார வைப்பு முறையில் தமது பார்வைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார். ஆனால், அதிகாரப் பெயர்களை மாற்றவில்லை, குறளில் வரும் சொற்களையும் மாற்றவில்லை.
19 அ.மா. சாமி உரை வெளியீடு: 2003: "திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)" கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் திருக்குறள் பல முறை சிதைக்கப்பட்டது என்றும், எனவே "செம்பதிப்பு" ஒன்று தேவை என்றும் கருதி, அறிஞர்கள் ஒன்று கூடி அததகைய படைப்பை ஆக்காத நிலையில் தானாகவே அந்த முயற்சியில் இறங்கியதாக இவர் கூறுகிறார். தமது உரைக்கு "திருக்குறள் செம்பதிப்பு" என்றே பெயர் இட்டுள்ளார். பழைய உரைகாரர்களுள் முதல்வராகிய மணக்குடவரின் பாடத்தை மிகுதியாக எடுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார். அதிகாரங்களை மாற்றியுள்ளார். குறள்களில் சில சொல் மாற்றங்களையும் செய்துள்ளார். அதற்கான காரணங்கள் தரப்படவில்லை.
20 க.ப. அறவாணன் உரை வெளியீடு: 2006: "திருவள்ளுவம்" இவர் திருக்குறள் முழுமைக்கும் "கருத்துவழிப் பகுப்பு முறை"யில் தெளிவுரை எழுதியுள்ளார். காமத்துப்பால் அதிகார வரிசை மாற்றப்படவில்லை. ஆனால் "இக்காலத் தமிழ் வாசகர் தேவையை முன்னிறுத்தி" அறப்பாலிலும் பொருட்பாலிலும் அதிகார வரிசையை மாற்றியுள்ளார். திருக்குறள் முழுமையையும் 16 இயல்களாக முறைப்படுத்துகின்றார்.