திருவிதாங்கூர் தமிழர் இயக்கங்கள்

திருவிதாங்கூர் தமிழர் இயக்கங்கள் என்பவை திருவிதாங்கூர் அரசாட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் ஏற்படுத்திய இயக்கங்கள் ஆகும்.

கி.பி 9ஆம் நூற்றாண்டில் சேரநாடு சிதறிய பகுதிகளில் ஒன்றான வேணாட்டைச் சான்றோர் குல மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்களின் கடைசி மன்னன் பால மார்த்தாண்டவர்மன் (கி.பி 1728 - 1758) கி.பி. 1758ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் காலத்தில் சான்றோர் குலத்திடமிருந்த ஆட்சி ஆதிகாரம் மருமக்கள் வழியை பின்பற்றிய நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயரும் திருவாங்கூர் என மாற்றப்பட்டது. தமிழ் ஆட்சி மொழியாக இருந்த இடத்தில் தமிழ், சமஸ்கிருதம், வேத மொழி கலந்த மலையாளம் ஆட்சிமொழியாக மாறியது.

புதிதாக ஆட்சிக்கு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி முன்பு ஆட்சியில் இருந்த தமிழர்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடக்கூடாது என்ற நோக்கில் பலவிதமான அடக்குமுறைகளை அம்மக்கள் மீது திணித்தனர். ஒடுக்கப்பட்ட இனத்தை பார்ப்பதும், தொடுவதும் தீட்டாக கருதப்பட்டது. பின்பு வந்த மார்த்தாண்ட வர்மா காலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று தடை வந்தது. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தரவாடுகளுக்கு கொடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட இனத்தினர் கோயில்களில் நுழைய தடை விதிக்கப்பட்டது. பல விதமான வரிச்சுமையால் மக்கள் கொடுமைப்பட்டுத்தப்பட்டனர். இந்நிலையில் இவ்வாறான கொடுமைகளை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். தமிழர்கள் பல இயக்கங்களை பல்வேறு காலகட்டத்தில் திருவிதாங்கூர் மன்னராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உருவாக்கித் தங்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர். அவை

  1. மலையாளிகள் எதிர்ப்பு இயக்கம் (கி.பி. 1810)
  2. மலையாள எதிர்ப்பு இயக்கம் (கி.பி. 1822)
  3. கெம்பீரச்சங்கம் (கி.பி. 1845)
  4. கல்வி அபிவிருத்திச் சங்கம் (கி.பி. 1857)
  5. தென் திருவிதாங்கூர் சுதேச சுவிசேச பிரபல்யச் சங்கம் (கி.பி. 1899)
  6. தமிழர் விடுதலை காங்கிரஸ் (கி.பி. 1928)
  7. தமிழர் கட்சி (கி.பி. 1935)
  8. அன்பு குடிமக்கள் இயக்கம் (கி.பி. 1936)
  9. தமிழ்ச் சங்கம் திருவிதாங்கூர் (கி.பி. 1938)
  10. திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ் (கி.பி. 1938)
  11. நாஞ்சில் நாட்டு மத்திய வாலிபர் சங்கம் (கி.பி. 1943)
  12. நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் (கி.பி. 1945)
  13. அகில திருவிதாங்கூர் தமிழன் காங்கிரஸ் (கி.பி. 1945)
  14. சுதந்திர திருவிதாங்கூர் கழகம் (கி.பி. 1947)
  15. அகில திருவிதாங்கூர் தமிழன் சங்கம்
  16. திருவிதாங்கூர் தேசிய காங்கிரஸ்
  17. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (கி.பி. 1947)
  18. போட்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (கி.பி. 1950)
  19. தமிழரசு கழகம்

இந்த பத்தொன்பது இயக்கங்களும் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையப் பாடுபட்டவை ஆகும். இவற்றுள் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், தி திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் ஆகிய இரண்டும் தமிழர் விடுதலை பெற பாடுபட்ட அரசியல் கட்சிகளாகும். மற்ற இயக்கங்கள் அனைத்தும் சங்கங்களாகவே செயல்பட்டன.