திருவிதாங்கூர்

கேரளாவிலிருந்த மன்னர் குடும்பம்

திருவிதாங்கூர் இராச்சியம் (Kingdom of Thiruvithamkoor அல்லது Kingdom of Travancore), இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு மன்னர் அரசு ஆகும். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.

திருவாங்கூர் இராச்சியம்
1729–1949
திருவிதாங்கூர்
கொடி
மாலையில் சங்கும், இருபுறமும் இரண்டு யானைகள்
சின்னம்
நாட்டுப்பண்: வஞ்சி மங்களம்
திருவிதாங்கூர்
இந்தியாவில் திருவிதாங்கூர் இராச்சியம்
நிலைபிரித்தானிய இந்தியாவின் மன்னர் அரசு
தலைநகரம்பத்மனாபபுரம் (1729–1795)
திருவனந்தபுரம் (1795–1949)
பேசப்படும் மொழிகள்மலையாளம், தமிழ்
சமயம்
பெரும்பான்மை: இந்து சமயம் (அதிகாரபூர்வம்)
சிறுபான்மை:
சாந்த தோமையர் கிறித்தவம்
அரசாங்கம்மன்னராட்சி
மகாராஜா 
• 1729–1758 (முதல்)
பால மார்த்தாண்ட வர்மர்
• 1829–1846 (உச்சம்)
சுவாதித் திருநாள்
• 1931–1949 (இறுதி)
சித்திரைத் திருநாள் பலராம வர்மன்
Resident 
• 1788–1800 (முதல்)
ஜார்ஜ் போனி
• 1800–1810
கொலின் மெக்கோலே
• 1840–1860 (உச்சம்)
வில்லியம் கலென்
• 1947 (இறுதி)
கொசுமோ கிராண்ட் நிவென் எட்வர்ட்சு
வரலாற்று சகாப்தம்பேரரசுவாதம்
• தொடக்கம்
1729
• பிரித்தானிய இந்திய அரசின் கீழ்
1795
• விடுதலை பெற்ற இந்தியாவின் கீழ்
1947
• முடிவு
1949
பரப்பு
194119,844 km2 (7,662 sq mi)
மக்கள் தொகை
• 1941
6070018
நாணயம்திருவிதாங்கூர் ரூபாய்
முந்தையது
பின்னையது
[[வேணாடு]]
திருவாங்கூர் கொச்சி
தற்போதைய பகுதிகள்இந்தியா

1949 சூலை 1 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பலராம வர்மன் ஆவார்.

திருவிதாங்கூரின் நிலப்படம்
1859 இல் மதராஸ் மாகாணத்தில் திருவிதாங்கூர்

புவியியல் தொகு

திருவிதாங்கூர் புவியியல் ரீதியாக தற்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம். மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. மேற்கே அரபிக்கடலும், கிழக்கில் மேற்கு தொடர்ச்சி மலையும், தெற்கே இந்திய பெருங்கடலும் எல்லைகளாக இருந்தது.

 
ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர்

வரலாறு தொகு

சேரநாட்டின் தென்பகுதியில் ஆய் நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.[1] இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.

சேர மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார்[2]. கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் அகதிகளாக வந்து தங்கியிருந்த யூதர்களுக்கு குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்[3].

நடுக் கால வரலாற்றில் (கி.பி 650 முதல் 966 வரை) இப்பகுதி பாண்டியர்களின் படையெடுப்புக்கு உட்பட்டிருந்தது. கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளினி என்பார், பாண்டியனின் பிரதிநிதிகள் வாசனைத் திரவியங்கள் தருவதாகக் கூறி அவ்வரசனின் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சூருக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்குத் தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார். ஆய் வேளிர் எனபோர் பாண்டிய அரசர்களுக்குக் கீழ்ப்பட்டு இப்பகுதிகளை ஆண்டுவந்தனர்.

இந்த வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு பின்பு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் இராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பால மார்த்தாண்டன் (1728–1758) தொகு

வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட யோகக்காரர்களும் மாடாம்பிகளும் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை அனத்தன் என்னும் அனந்தபத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். இவர் அரசனின் சகோதரி மகன். திற்பாப்பூர் பரம்பரையில் வந்தவர். இவர் மருமக்கள் வழி வந்தவர் என்ற கூற்றுமுள்ளது. இவருக்கு முன் வந்த வேணாட்டு அரசர்கள் யாரும் மருமக்கள் வழியில் பதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவர் சிறந்த போர் வீரர். இவருக்கு அந்தரங்க ஆலோசகரும் முதன்மை தளபதியுமான அனந்தபத்மநாபன் நாடாரின் கீழ் அனைத்து களரி ஆசான்களும் ஆதரவு தெரிவித்தனர். இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு கொச்சி வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர். யோகக்காரரை அடக்கி நாட்டை வழிநடத்த எட்டுதுரம் நாடார்களை திருவனந்தபுரத்தில் குடியமர்த்தினார்[6]. மார்த்தாண்டவர்மன் நாட்டை பத்மநாபசாமிக்கு அர்பணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மன்னர் காலத்தில் நாட்டின் தலைநகர் கல்குளம் ஆகும். தான் ஆட்சிக்கு வர உதவியதற்காகவும், நாட்டை விரிவாக்க உதவியதற்காகவும் தலைநகரின் பெயரை பத்மநாபன் நாடாரை கௌரவிக்கும் பொருட்டு பத்மநாபபுரம் என்று மாற்றினார். கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் வணிகக் குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் ஆங்கிலேயர், போர்ச்சிகீசியர், டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர்[4]. ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் குளச்சல் சண்டையில் தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர்[5]. கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

கி.பி 10 ம் நூற்றாண்டளவில் சேரநாட்டின் வடபகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாயர்-நம்பூதிரி கூட்டணி பால மார்த்தாண்டவர்மன் காலம் வரை கொச்சிக்கு தெற்கே காலூன்றவில்லை. கி.பி 1758ம் ஆண்டு மார்த்தாண்டவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் தலைநகரை கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இவர் திற்பாப்பூர் பரம்பரையில்லை. ஆட்சியதிகாரம் நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் திருவாங்கூர் என பதிவு செய்யப்பட்டது.

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தொகு

1817-ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் இராச்சியம் தன்னாட்சியுடன் முடியாட்சியாக செயல்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [6][7][8]

இந்திய விடுதலைக்குப் பின் தொகு

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்த சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[9] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த சமஸ்தானம், தற்கால கேரளா மாநிலத்தின் பகுதியாக உள்ளது.

திருவிதாங்கூர் மன்னர்கள் தொகு

கார்த்திகைத் திருநாள் இராமவர்மா தொகு

ஸ்ரீ கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா) திருவிதாங்கூரின் முதல் அரசராவார். கி.பி 1758 முதல் 1798 ஆண்டு வரை அரசாட்சி செய்தார். 1791-ஆம் ஆண்டு, மைசூர் மன்னன் திப்புசுல்தான், திருவிதாங்கூர் மீது படை எடுத்தார். திருவிதாங்கூர் படைவீரர்கள், சுல்தானின் படைபலத்தாக்குதலை ஆறு மாத காலம் எதிர் கொண்டு, அன்னாரை 2 முறை தோற்கடித்த பிறகு மகாராஜா, பிரிட்டீஷ் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு முறையிட்டு உதவி கோரியதால், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது. அவர், பத்மநாபபுரத்திலிருந்த தலைநகரை, திருவனந்தபுரத்திற்கு 1795-ல் மாற்றினார்.

பாலராமவர்மா தொகு

1798ல், ஸ்ரீ பாலராமவர்மா அரியாசனத்தில் அமர்ந்தார். இவரது காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலம் ஆகும். 1802ம் ஆண்டு வேலுத்தம்பி திவானாக (முதல் மந்திரி) பதவி பெற்றார். 1809-ஆம் ஆண்டு, வேலுத்தம்பி மற்றும் கொச்சின் அமைச்சர் பாலியத் அச்சன், ஆங்கிலேயர்களை எதிர்த்து, புரட்சி நடத்தினர், அதில் வெற்றி கிட்டவில்லை. ஆங்கிலேயர், வேலுத்தம்பியை, நாகர்கோயில் மற்றும் கொல்லம் ஆகியவற்றில் நடந்த சண்டையில், தோற்கடித்தனர். திருவிதாங்கூரின் படையணியின் நாயர் பிரிவு, படைக்கலன்களை இழக்க நேரிட்டது. 1810-ல் மீதியிருந்த படையும், வேலுத்தம்பியின் விவேகமற்ற புரட்சிக்குப் பின்னர் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் நிராயுதபாணியாக ஆக்கப்பட்டது.

இராணி கௌரி லட்சுமி பாய் தொகு

இராணி கௌரி லட்சுமி பாய், 1810 ல், ஆங்கிலேயரின் ஆசியுடன் அரியணையில் அமர்ந்தார், அவருக்கு ஒரு மகன் பிறக்கவே, 1813-ல் அரசராக பிரகடனப்படுத்தப்பட்டு, 1815-ல் இராணி கௌரி லட்சுமி பாய் இறந்த பின்னர், மகாராணி கௌரி பார்வதி பாய், அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலிக்கு ஆள்பவர் என்ற முறையில் தொடர்ந்து ஆட்சி செய்தார்.

சுவாதி திருநாள் இராமவர்மா தொகு

1829-ஆம் ஆண்டு, ஸ்ரீ சுவாதி திருநாள் இராமவர்மா, அரியாணையில் அமர்ந்து 1846-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அடுத்தாற் போல், மகாராஜா உத்திராடம் திருமால் மார்த்தாண்ட வர்மா (1847–1860), 1853-ம் ஆண்டு தனது ஆட்சியில் தனது நாட்டில் அடிமைத் தனத்தை ஒழித்தார். மற்றும், சில வகுப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உடையணியும் கட்டுப்பாட்டினையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆயில்யம் திருநாள் (1860–1880) ஆண்டு வரையும், மற்றும் ஸ்ரீ இராமவர்மா விசாகம் திருநாள் (1880–1885) ஆண்டு முடிய சிறப்பாக ஆட்சி செய்தார்.

ஸ்ரீ மூலம் திருநாள் இராமவர்மா தொகு

 
சிவராமப் பிள்ளை கைவண்ணத்தில் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா

இவர் 1857 செப்டம்பர் 25'ம் தேதி சங்கனேசரி ராஜ குடும்பத்தை சேர்ந்த,ராஜ ராஜ வர்மா தம்புரான் மற்றும் மகாராணி லட்சுமி பாய் அவர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.இளவயதிலேயே தாயையும் சகோதரனையும் இழந்த இவர் அன்னாஜி ராவ்(BA) மற்றும் ரகுநாத் ராவ்(BA) ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885–1924 வரை ஆட்சி செய்த போது, பல கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன.இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி,மருத்துவம்,சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.பெண்கள் கல்வியும் அனுமதிக்கப்பட்டது.ஆயுள் காப்பீடும் இவரது காலத்தில் கொண்டு வரப்பட்டது.இவரது சேவைகளை பாராட்டி 1898 ஆண்டு முதல் ஆங்கிலேய அரசு இவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளித்து கவுரப்படுத்தியது.
இவருக்கு இரு மனைவிகள் ஆவர்.முதலாமானவர் நாகர்கோயில் அம்மவீட்டைச் சேர்ந்த அனந்தலட்சுமி பிள்ளை கொச்சம்மா ஆவார்.1882'ம் ஆண்டு ஒரு மகனைப் பெற்ற பிறகு இவர் மரணம் அடைந்தார்.இரண்டாமானவர் வடசேரி அம்மவீட்டைச் சேர்ந்த கார்த்தியாயினி கொச்சம்மா ஆவார்.
மருமக்கதாய முறைப்படி இவருக்கு பெண் பிள்ளைகள் இல்லாதபடியால், மாவேலிக்கரை வீட்டைச் சேர்ந்த இரு ராஜகுமாரிகளான சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகிய இருவரையும் தத்தெடுத்தார்.

சேதுலட்சுமி பாய் தொகு

மூலம் திருநாள் இராமவர்மாவிற்கு பின்னர், சேதுலட்சுமி பாய், ரீஜெண்டாக 1924–1931 வரை, ஆட்சி செய்தார். இவர் 12.11.1936ம் நாள், இந்துக்கள் அனைவரும் கோயிலில் நுழைந்து வணங்கிட (Temple Entry Proclamation) அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்தார். இதனால் கேரளாவில் இருந்த அனைத்து இந்து கோயில்களும், அதுவரை உயர்வகுப்புச் சாதி மக்களுக்கு மட்டுமே இருந்த உரிமை, இந்துக்கள் அனைவருக்குமே திறந்து விடப்பட்டன.

திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர் தொகு

ஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அளிக்க முடிவு செய்த போது, திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இருக்கும் என்று விளம்புகை செய்தார். இந்திய தேசீய காங்கிரஸ் மற்றும் திவான். சர்.சி.பி.இராமசாமி அய்யர், ஆகியோரிடையே இருந்த, கடுமையான மனத்தாக்கின் காரணமாக, நாட்டில் பலவிடங்களில் புரட்சி ஏற்படலாயிற்று. இத்தகைய புரட்சி ஒன்று. புன்னப்பரா - வயலாறு எனும் இடத்தில் 1946-ல் வெடித்தது, அதில் கம்யூனிஸ்டுகள் தமது சொந்த அரசை அந்தப்பகுதியில் ஏற்படுத்தினர். இது, திருவிதாங்கூர் படையினரால் மிருகத்தனமாக நசுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தனர். இது, மேலும் அமைதியின்மைக்கு வழிவகுத்ததில், சர்.சி.பி. இராமசாமி அய்யரின் தவறான போக்கு என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் விளைவாக சர்.சி.பி. இராமசாமி ஐயரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே, அதைத் தொடர்ந்து திரு. P.G.N.உன்னித்தான் திவான் (முதல் மந்திரி) ஆனார். அதன்பிறகு, மகாராஜா. இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள இணக்கம் தெரிவிக்கவே, திருவிதாங்கூர், இந்திய யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சித்திரை திருநாள் பலராம வர்மா தொகு

 
திருவிதாங்கூர் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா

1949, ஜூலை 1-ஆம் நாள், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் ஏற்படுத்தப்பட்டு திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா புதிய மாநிலத்தின் "இராஜப்பிரமுக்", பதவி ஏற்றார். நேசமணி, "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்" என்கிற அமைப்பில் இணைந்துகொண்டார். அவரால் அந்த அரசியல் அமைப்பு வேகமாக வளரத் துவங்கியது. தென் திருவிதாங்கூர் தமிழ் பேசும் பகுதி, அருகிலுள்ள சென்னை மாநிலத்தோடு இணைந்திட வேண்டி போராட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டம், வன்முறைக் கலவரமாக மாறிடவே, காவலர்கள் மற்றும் பல உள்ளூர் மக்கள், மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில், கலவரத்தின் போது கொல்லப்பட்டனர்.மாநில மறுமுறை திருத்தி அமைத்தல் சட்டம், (State Re-organisation Act of 1956) கீழ், திருவிதாங்கூரின் நான்கு தாலுகா பகுதிகளாம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒருபகுதி, சென்னை மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. 1971, ஜூலை 31, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 26-வது திருத்தத்தின்படி மகாராஜாவிற்கிருந்த, மன்னர் மானியம் (தகுதி மற்றும் சலுகைகள்) பறிக்கப்பட்டு விட்டது. இம்மன்னர் 1991-ஜூலை 19-ஆம் நாள் காலமானார்.

உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா தொகு

ஸ்ரீ உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, (1922–2013) 1991-ஆம் ஆண்டிலிருந்து இவர் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவருமாவர், இவர் இரண்டு வயதிலேயே இளையராஜாவாக, திருவிதாங்கூர் வாரிசுச்சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பக். 7, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு
  2. பக். 3, A history of Malayalam Language and Literature, கிருட்டிண சைன்யா
  3. பக். 6, A History of Kerala
  4. கே.கே. குசும்பன், History of Trade and commerce in Travancore
  5. R.G. Alexander, Monumental remanis of Dutch East India
  6. [WorldStatesmen - India Princely States K-Z
  7. http://www.thefreedictionary.com/Princely+state
  8. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
  9. Princely States of India

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Travancore
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிதாங்கூர்&oldid=3780583" இலிருந்து மீள்விக்கப்பட்டது