விவிலியம்

இது யூதர் கிறிஸ்தவர்களின் புனித நூல் ஆகும்.
(திருவிவிலியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரிசுத்த வேதாகமம், விவிலியம் (திருவிவிலியம், Bible), என்பது யூதர் மற்றும் கிறிஸ்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.

அமெரிக்க காங்கிரஸ் நூலகத்திலுள்ள குட்டன்பெர்க் விவிலியம்

கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்றும் யூதர்களால் தனக் என்றும் அழைக்கப்படுகிறது. கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.(குறிப்பு: யூதர்கள் புதிய ஏற்பாடை நம்புவதில்லை)

உலகத்திலேயே பரிசுத்த வேதாகமம் எனும் 'திருவிவிலியம்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வேதாகமமானது/விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தகர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக எருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும், இணைத் திருமுறை நூல்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.

கிறித்தவ வேதாகமம்/விவிலியம் தொகு

கிறித்தவ வேதாகமம்/விவிலியம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

  • பழைய ஏற்பாடு (எபிரேயப் புனித நூல்கள்) மற்றும்
  • இயேசுவின் பிறப்புக்குப் பின்னரான காலத்தில் எழுதப்பட்டு, இயேசுவின் போதனைகளையும் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வையும் உள்ளடக்கிய புதிய ஏற்பாடு என்பனவாகும்.

பண்டைய மொழிகளான எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் எழுதப்பட்ட நூல்தொகுதியாகிய விவிலியத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆங்காங்கே மாறுபாடுகள் காணப்படுகின்றன.

வேதாகம/விவிலிய வரலாறு தொகு

விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கலாம்:

  1. கர்த்தர் (கடவுள்) உலகையும் அதிலுள்ள சகலத்தையும் படைத்தார். மனிதனை அவர் தம் சாயலாக, ஆணும் பெண்ணுமாகப் படைதார். உலகம் பாவமற்றிருந்தது. மனிதர் கடவுளைவிட்டு நீங்கி பாவம் செய்கிறார்கள்.
  2. மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கக் கர்த்தர் மனிதருக்கு விளங்கும் வகையில் தம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
  3. கர்த்தர் ஆபிரகாமை அழைத்து அவருக்குப் புதியதொரு நாட்டைக்கொடுக்கிறார். அவருக்குப் பெரிய சந்ததியைக் கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
  4. கர்த்தர் மோசே வழியாகச் சட்டங்களைக் கொடுக்கிறார். பிறகு யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இஸ்ரயேல்/இஸ்ரவேல் மக்கள் சென்றனர்.
  5. இஸ்ரயேல்/இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்வதும், பின்னர் கர்த்தரிடம் திரும்புவதுமாகச் சிலகாலம் கழிகிறது. அவர்கள் கர்த்தரின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
  6. இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோசேயின் சட்டங்களைத் தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தைக்கொடுக்கிறார்.
  7. இயேசுவின் சிலுவை மரணமும் அவருடைய உயித்தெழுதலும்.
  8. இயேசுவின் சீடரும் தொடக்ககாலக் கிறித்தவரும்.

பழைய ஏற்பாடு தொகு

 
தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் பக்கம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968 விழா மலரில்
 
1723 இல் தரங்கம்பாடியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் விவிலியம்

இது உலகம் படைக்கப்பட்ட வரலாறு தொடங்கி, இயேசு இவ்வுலகிற்கு வரும்வரையான காலப்பகுதியில் கர்த்தர் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் கூறுகிறது. இதில் காணப்படும் இணைத்திருமுறை நூல்களைச் சில கிறித்தவப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக ஏற்பதில்லை.

  • பொதுவான நூல்கள்: இவை எல்லாக் கிறிஸ்தவப் பிரிவினரின் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் காணப்படும் நூல்களாகும். மொத்தம் 39 நூல்கள் இதில் அடங்கும். சீர்திருத்தத் திருச்சபைகள் இந்நூல்களை மட்டுமே தமது பழைய ஏற்பாட்டில் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்கின்றன.
    • திருச்சட்ட நூல்கள் - 5
    • வரலாற்று நூல்கள் - 12
    • இலக்கிய நூல்கள் - 5
    • தீர்க்கதரிசிகள்/இறைவாக்கினர் நூல்கள் - 17
  • கத்தோலிக்க விவிலியம்: பொதுவான நூல்களுக்கு மேலதிகமாக சில நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தில் காணப்படுகின்றன. இவை மொத்தம் 7 நூல்களாகும். இவை எருசலேமின் இரண்டாவது கோவில் கால நூல்களாகும். பொதுவான நூல்களையும் சேர்த்து மொத்தம் 46 நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. மேலும், கத்தோலிக்க விவிலியத்தில், சீர்திருத்தத் திருச்சபைகள் பொதுவாகக்கொண்டுள்ள 39 நூல்களில் சில மேலதிக அதிகாரங்களும் காணப்படுகின்றன.
  • மரபுவழித் திருச்சபை விவிலியம் : இவை கத்தோலிக்கப் பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு மேலதிகமாக 5 நூல்களை ஏற்றுக்கொள்கின்றன. மொத்தம் 51 நூல்கள் மரபுவழிப் பழைய ஏற்பாட்டிலுண்டு.

புதிய ஏற்பாடு தொகு

புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் தொடங்குகிறது. இவ்வேற்பாட்டில் 27 நூல்கள் காணப்படுகின்றன. இவையனைத்திலும் இயேசுவே மையக்கர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டு விவிலியத்திலுள்ள நூல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

நூல்களின் கால அட்டவணை தொகு

இவற்றையும் பார்க்க தொகு

துணை நின்றவை தொகு

  • Berlin, Adele, Marc Zvi Brettler and Michael Fishbane. The Jewish Study Bible. Oxford University Press, 2003. ISBN 0-19-529751-2
  • Anderson, Bernhard W. Understanding the Old Testament (ISBN 0-13-948399-3)
  • Head, Tom. The Absolute Beginner's Guide to the Bible. Indianapolis, IN: Que Publishing, 2005. ISBN 0-7897-3419-2

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலியம்&oldid=3759907" இலிருந்து மீள்விக்கப்பட்டது