பழிச்சுதல்

மூன்று பாடல்

பழிச்சுதல் என்னும் துறையினவாகப் புறநானூற்றுத் தொகுப்பில் மூன்று பாடல்கள் [1] உள்ளன. அவை கைக்கிளை என்னும் திணையின் துறைகள். இவை சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானை பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் நேரில் கண்டு பாடியவை. இந்தப் புலவர் நக்கண்ணையார் போரிட்டு வென்ற சோழ அரசன் கிள்ளிமீது காதல் கொண்டிருந்தாள். நக்கண்ணையார் புலவரை அரசன் கிள்ளி விரும்பவில்லை. அதனால் இது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்னும் திணையின்பாற் பட்டது.

அவனை நினைத்து என் தோள் மெலிவதால் என் வளையல்கள் கழலுகின்றன என்றும், [2] நானே நேரில் கண்டதால் என் மனம் அவன்பால் நின்றது என்றும் [3] நக்கண்ணையாரே கூறுவதால் இவள் அவன்மேல் காதல் கொண்டிருந்தமை புலனாகிறது.

தொல்காப்பியம் கைக்கிளையை அகத்திணை என்று கூறுகிறது. இந்தப் பாடல்கள் புறத்திணைப் பாடல்களின் தொகுப்பாகிய புறநானூற்றில் வருகின்றன. புறப்பொருள் வெண்பாமாலை இதனை அகத்திணைப் படலம் எனத் தனியே ஒரு படலம் அமைத்துக்கொண்டு விளக்குகிறது. இவை பொருள் இலக்கணத்தில் காலப்பாதையில் வளர்ந்த பரிமாற்றங்கள்.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 83, 84, 85
  2. அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
    தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
    அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; (புறம் 83)
  3. 'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;
    'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;
    நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;
    அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
    முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,
    யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. (புறநானூறு 85)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழிச்சுதல்&oldid=1267573" இலிருந்து மீள்விக்கப்பட்டது