பெப்ரவரிப் புரட்சி

1917இன் பெப்ரவரிப் புரட்சி (உருசியம்: Февра́льская револю́ция, பஒஅ[fʲɪvˈralʲskəjə rʲɪvɐˈlʲʉtsɨjə]) அவ்வாண்டில் உருசியாவில் நிகழ்ந்த இரு புரட்சிகளில் முதலாவதாகும். இது அன்றைய நாளில் தலைநகராக விளங்கிய பெட்ரோகிராடை ஒட்டி (இன்றைய நாள் சென் பீட்டர்ஸ்பேர்க்), மார்ச்சு மாதத்தில் மகளிர் தினத்தன்று (யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக் கடைசி) நிகழ்ந்தது.[1] இந்தப் புரட்சி தலைநகரில் அதனைச் சுற்றியப் பகுதிகளில் மட்டுமே ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களுக்கே நிகழ்ந்தது. இந்தப் புரட்சியின்போது பெருந்திரளான மக்கள் மறியலும் காவல்துறைக்கும் சிறப்புக் காவல் படையும் உருசியப் பேரரசிற்கு நம்பிக்கையானவர்களாக கடைசிவரை விளங்கிய ஜென்டார்மெசுக்களுமிடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்தன. புரட்சியின் கடைசி நாட்களில் உருசிய படைத்துறையும் புரட்சியாளர்களுடன் இணைந்தனர். இந்தப் புரட்சியின் உடனடி நிகழ்வாக சார் மன்னராக விளங்கிய நிக்கலாஸ் II தமது மணிமகுடத்தைத் துறந்தார்; இதன்மூலம் உரோமானாவ் ஆட்சி முடிவுக்கு வந்ததுடன் உருசியப் பேரரசும் முடிவுற்றது. சார் மன்னருக்கு மாற்றாக இளவரசர் ஜார்ஜ் இல்வோவ் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. இந்த இடைக்கால அரசு தாராளவாதிகளும், அரசியல் சீர்திருத்தம் வேண்டிய சோசலிசவாதிகளும் இணைந்து உருவாக்கிய கூட்டணியாகும். இவர்கள் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித்துறையையும் உருசிய அரசமைப்பு மன்றத்தையும் அமைத்தனர். அதேநேரத்தில் சோசலிசவாதிகள் பெட்ரோகிராடு தொழிலாளர் பேரவையை உருவாக்கி இடைக்கால அரசுடன் இணைந்து ஆட்சி நடத்தியது; இது இரட்டை ஆட்சி முறைமை என அழைக்கப்பட்டது.

பெப்ரவரிப் புரட்சி
உருசியப் புரட்சி (1917) பகுதி

ஆயுதமேந்திய தொழிலாளிகளும் படைத்துறையினரும் பிடிபட்ட காவல்துறையினரை இழுத்துச் செல்லுதல் - பெட்ரோகிராடு, 1917
நாள் 8 – 12 மார்ச்சு 1917 [பழைய நாட்காட்டி 23 – 27 பெப்ரவரி]
இடம் பெட்ரோகிராடு, உருசியா
உருசியப் பேரரசின் மணிபகுடத் துறப்பு, உருசியக் குடியரசு உருவாக்கம்; உருசிய இடைக்கால அரசு மற்றும் பெட்ரோகிராடு (தொழிற்சங்கம்) சோவியத்தின் இரட்டை ஆட்சி
பிரிவினர்
உருசியா அரசுப் படைகள்
சிறப்புக் காவல்படை (ஜென்டார்மெசு)
உள்துறை அமைச்சின் காவல்படை
உருசிய அரசுப் படை
குடிமக்கள் (பெண் தொழிலாளிகள்)
செங்காவலர்கள் (வாசில்யெவ்சுகி தீவு)
உருசிய அரசுப்படை (பின்னாட்களில்)
தளபதிகள், தலைவர்கள்
உருசியா தளபதி செர்கி காபலோவ் (பெட்ரோகிராடு இராணுவ மாவட்டம்) அலெக்சாண்டர் சைலப்னிகோவ், பிறர்

எந்த தலைவரும் இன்றி முறையானத் திட்டமிடலும் இன்றி இந்தப் புரட்சி கலையத் தொடங்கியது. அக்காலகட்டத்தில் உருசியா பல பொருளியல் மற்றும் சமூக சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. இவை முதல் உலகப் போர் தாக்கங்களால் மேலும் மோசமடைந்தது. உணவுக்காகப் போராடியவர்களும் மறியலில் ஈடுபட்ட தொழிற்சாலை பாட்டாளிகளும் படைத்துறையிலிருந்து வெளியேறிய படைவீரர்களும் ஒன்று சேர்ந்தனர். படைத்துறையிலிருந்து மேலும் பலர் விலக, அரசருக்கு நம்பிக்கையான பாடைவீரர்கள் தொலைவில் உலகப்போரின் கிழக்கு முனையில் ஈடுபட்டிருக்க தலைநகரம் குழப்பத்தில் ஆழ்ந்தது. சார் மன்னரை எளிதில் வீழ்த்த முடிந்தது.

பெப்ரவரிப் புரட்சியை அடுத்து அதே ஆண்டில் அக்டோபர் புரட்சி உருவானது; இந்தப் புரட்சியில் போல்செவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் உருசியாவில் சமூக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன் சோவியத் ஒன்றியம் உருவாகவும் வழி வகுத்தனர்.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரிப்_புரட்சி&oldid=3251962" இலிருந்து மீள்விக்கப்பட்டது