மந்திரி பெசார்

மலேசியாவில் முதல் அமைச்சரைக் குறிப்பிடும் சொல்லாகும்.

மந்திரி பெசார் (மலாய்: Menteri Besar அல்லது Ketua Menteri; ஆங்கிலம்: Chief Minister); என்பது மலேசியாவில் பரம்பரை ஆட்சியாளர்களைக் கொண்ட ஒன்பது மாநிலங்களின் முதல் அமைச்சரைக் குறிப்பிடும் சொல்லாகும்.

பரம்பரை ஆட்சியாளர்கள் எனப்படும் சுல்தான்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், முதல் அமைச்சரை மந்திரி பெசார் என்று அழைக்கிறார்கள். சுல்தான்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் முதல் அமைச்சரை கெத்துவ மந்திரி என்று அழைக்கிறார்கள்.

பொதுவாக மலேசியாவில் உள்ள தமிழ், சீனம், ஆங்கிலம், கடசான் மொழி ஊடகங்களில் மந்திரி பெசார் எனும் சொல் மொழிபெயர்க்கப் படாமல் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.[1][2]

மலேசியாவில் உள்ள அனைத்து மந்திரி பெசார்களும்; முதலமைச்சர்களும் யாங் அமாட் பெர்ஹொர்மாட் (Yang Amat Berhormat); "மிகவும் மரியாதைக்குரியவர்" எனும் முன் சொல்லுடன் அழைக்கப்படுகிறார்கள்.

பொது தொகு

மலேசியாவில் மந்திரி பெசார் (Menteri Besar) எனும் சொல் வழக்கில், முதலமைச்சரைக் கொண்டுள்ள மாநிலங்கள்:

  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. நெகிரி செம்பிலான்
  5. பகாங்
  6. பேராக்
  7. பெர்லிஸ்
  8. சிலாங்கூர்
  9. திரங்கானு

மலேசியாவில் கெத்துவா மந்திரி (Ketua Menteri) எனும் சொல் வழக்கில் முதலமைச்சரைக் கொண்டுள்ள மாநிலங்கள்:

  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சபா
  4. சரவாக்

மாநில நிர்வாக அதிகாரம் தொகு

மலேசிய மலாய் மாநிலங்களின் ஒன்பது பரம்பரை ஆட்சியாளர்களும்; மற்ற நான்கு மாநிலங்களின் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும்; தங்கள் மாநிலங்களின் அரசியலமைப்புத் தலைவர்களாக பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் மாநில நிர்வாக அதிகாரம் மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர்களிடம் உள்ளது.

பொதுவாக, மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, பெரும்பான்மை பெற்ற கட்சியை, மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு மாநிலத்தின் ஆட்சியாளர் அழைப்பார். அதன் பின்னர் மாநில நிர்வாக ஆட்சி அமைக்கப்படும்.

மந்திரி பெசார் அல்லது முதலமைச்சரின் பதவிக் காலம் அதிகப் பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒரு மந்திரி பெசார் எத்தனை முறை வேண்டும் என்றாலும் மந்திரி பெசார் பதவியை வகிக்கலாம். இருப்பினும், அவர் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றவராக இருக்க வேண்டும்.

வரலாறு தொகு

1948-ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால், மலாயா கூட்டமைப்பு உருவாக்கப் பட்டதும், மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மந்திரி பெசார் பதவி உருவானது.

இருப்பினும், மந்திரி பெசார் பதவியை உருவாக்கிய முதல் மாநிலம் ஜொகூர் ஆகும். ஜொகூர் சுல்தான் அபு பக்கர் அவர்களால் அமல்படுத்தப்பட்ட ஜொகூர் மாநில அரசியலமைப்புக்கு (Undang-undang Tubuh Negeri Johor) உட்பட்டு, மந்திரி பெசார் பதவியும் உருவாக்கப் பட்டது.

அந்த வகையில் அரசியலமைப்பு முடியாட்சி முறையை ஏற்றுக்கொண்ட முதல் மலாய் மாநிலமாக ஜொகூர் மாநிலம் விளங்குகிறது. மந்திரி பெசாரும்; மாநில முதலமைச்சரும், வழக்கமாக மாநிலச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டு இருக்கும் கட்சியில் இருந்து தேர்வு செய்யப் படுகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரி_பெசார்&oldid=3925504" இலிருந்து மீள்விக்கப்பட்டது