யானை ஆண்டு (Year of the Elephant, அரபு மொழி: عام الفيل‎, ʿஆமு இ-ஃபில்) என்பது இசுலாமிய வரலாற்றில் அண்ணளவாக பொ.ஆ. 570 ஆம் ஆண்டைக் குறிக்கும் பெயர் ஆகும். இசுலாமிய வழக்கப்படி, இவ்வாண்டிலேயே இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்த முகம்மது நபி பிறந்தார்.[1] மக்கா நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை இவ்வாண்டின் பெயர் குறிக்கிறது: எதியோப்பியாவின் ஆக்சம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஏமனின் கிறித்தவ ஆட்சியாளர் அப்ரகா என்பவர்,[2][3] மக்கா நகரை அழிக்கும் நோக்கோடு ஒன்று அல்லது பல யானைப் படையுடன் காபாவை நோக்கி சென்றார். ஆனாலும், தலைமை தாங்கிச் சென்ற மகுமுது என்ற பெயர் கொண்ட யானை,[4] மக்காவைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிக்குச் சென்று அதனைத் தாண்டிச் செல்ல மறுத்து நின்று விட்டது. பெரியம்மை போன்ற தொற்றுநோயே அவரை மெக்காவைக் கைப்பற்ற முடியாமைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோட்பாடும் நம்பப்படுகிறது.[5] அராபியத் தீபகற்பத்தில் இவ்வாண்டு "யானையின் ஆண்டு" எனப் பெயரிடப்பட்டு ஆண்டுகளை அழைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. உமறு இப்னு அல்-கத்தாப்பின் ஆட்சிக் காலத்தில் (634-644) இசுலாமிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

தெற்கு அராபியாவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின்படி, யானை ஆண்டு கிபி 569 அல்லது 568 ஆக இருக்கலாம் எனப்படுகிறது. சசானியப் பேரரசு யெமனின் பைசாந்திய அரசை கிபி 570 இல் கைப்பற்றியது.[6] ஆனாலும், முகம்மது நபியின் பிறப்பிற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் என இன்றைய வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[7]

வரலாறு தொகு

அன்றைய காலகட்டத்தில் ஏமன் பிரதேசம் அபிசீனியாவின் (எதியோப்பியா) ஆட்சியின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் அதிகாரியாக இருந்தவர் அப்ரகா என்ற அபிசீனியராகும். முழு அரேபியாவினதும் யாத்திரைத் தலங்களில் உயரிடம் பெற்றிருந்த மெக்காவின் மகோன்னத நிலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அப்ரஹா, ஏமன் பிரதேசத்திலுள்ள சன்ஆ என்ற இடத்தில் மாபெரும் ஆலயமொன்றை நிறுவினார். அதில் ஷீபா அரசியின் கைவிடப்பட்டிருந்த மாளிகைகளிலிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றாலான சிலுவைகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் ஆகியற்றைக் கொண்டுவந்து நிறுவி, அந்த ஆலயத்தை மிகவும் அழகானதாக நிர்மாணித்தார். பின்னர் தனது அரசனான 'நஜ்ஜாசி' க்கு "மன்னவனே! உலகத்திலேயே எங்குமில்லாதவாறான மிக அழகானதோர் ஆலயத்தை நான் உனக்காக இங்கு உருவாக்கியுள்ளேன். அரபிகளின் புனித யாத்திரிகர்களை இந்த ஆலயத்தை நோக்கித் திருப்பும் வரை நான் ஓயமாட்டேன்,'' என்றொரு கடிதத்தை அனுப்பினார். இதைத் தெரிந்துகொண்ட அரேபியர்கள், அப்ரஹாவின் மீது பெரும் கோபம் கொண்டார்கள். முடிவில் அரேபியரில் ஒருவன் அப்ரஹா நிர்மாணித்த ஆலயத்தின் தூய்மையைக் கெடுக்கும் நோக்கத்தோடு அங்கு சென்று, இரவோடிரவாகத் தன்நோக்கத்தை நிறைவேற்றி பாதுகாப்பாகத் திரும்பிவிட்டான்.

நிகழ்ந்த சம்பவத்தை அறிந்த அப்ரஹா கடுமையான கோபத்தோடு, மக்காவிலிருக்கும் அரேபியர்களின் யாத்திரைத் தலமாகிய கஃபாவைத் தரைமட்டமாக்கத் திடசங்கற்பம் கொண்டு, முன்னிலையில் யானையொன்றை கொண்ட மாபெரும் படையைத் தயார் செய்தார். ஏமனில் வாழ்ந்த அரேபியர்கள் இதைக் கேள்விப்பட்டு படையெடுப்பைத் தடுத்து நிறுத்த முனைந்ததனால் அப்ரஹாவால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களின் தலைவனான நுபைல் என்பவன் தனது உயிருக்குப் பயந்து படையினருக்கு வழிகாட்ட ஒப்புக்கொண்டான்.

படையினர் அரேபியாவின் 'தாயிப்' என்ற இடத்தை அடைந்ததும், அங்கு வாழ்ந்திருந்த தகீப் கோத்திர அரேபியர்கள், தம்முடைய கோவிலை அப்ரஹாவின் படைகள் அழித்துவிடுமோ என்று அஞ்சினார்கள். அதனால் அவர்கள் படையினரைச் சந்தித்து, "நீங்கள் தேடி வந்த இடம் இதுவல்ல" என்று கூறி மக்காவைச் சென்றடைய வழிகாட்டி ஒருவனையும் கொடுத்துதவினார்கள். கூட்டிச்சென்ற வழிகாட்டி 'முகம்மிஸ்' என்ற இடத்தில் மரணித்ததனால் அவனின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வெறுப்புக் கொண்ட அரேபியர்கள் அவனுடைய அடக்கத்தலத்தின் மீது கல்லெறிந்து தமது வெறுப்புணர்வைக் காட்டினார்கள். இந்த வழக்கம் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றது.

முகம்மிஸில் தரித்து நின்ற அப்ரஹா, தனது குதிரைப் படையினரில் சிலரை மக்காவின் சுற்றுப்புறத்தை அவதானித்து வருமாறு அனுப்பினார். அவர்கள் தாம் செல்லும் வழியில் மக்களிடமிருந்து கைப்பற்றிய பொருட்களை அப்ரஹாவுக்கு அனுப்பி வைத்தனர். அவற்றுள் அப்த்-அல்-முத்தலிபுக்குச் சொந்தமான 200 ஒட்டகங்களும் அடங்கியிருந்தன. இவற்றை அறிந்த மக்காவாசிகள், தாம் அப்ரஹாவோடு யுத்தம் செய்தல் பிரயோசனமில்லாமல் போய்விடும் என்றும், அப்ரஹாவை அவருடைய இடத்திற்குப் போய்ச் சந்தித்தால் வீணே இரத்தம் சிந்துதல் தவிர்க்கப்படலாம் என்றும் நினைத்தனர். இது அப்ரஹா ஏற்கனவே எடுத்திருந்த 'கஃபாவை அழிப்பது மட்டுமே தனது நோக்கம் தாம் யுத்தம் புரிய வரவில்லை' என்ற முடிவுக்குச் சாதகமாக இருந்தது. மக்காவாசிகள் தம்முடைய கோத்திரங்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக அப்த்-அல்-முத்தலிபை அப்ரஹாவைச் சந்திப்பதற்காக அனுப்பினார்கள். அப்த்-அல்-முத்தலிபைக் கண்ட அப்ரஹா, இவர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கின்றார் என நினைத்து வினவுமாறு தமது மொழிபெயர்ப்பாளனுக்கு உத்தரவிட்டார். அந்தமொழிபெயர்ப்பாளனிடம் அப்த்-அல்-முத்தலிப், தங்களுடைய வீரர்கள் எனக்குச் சாெந்தமான 200 ஒட்டகங்களைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள். அவற்றை ஒப்படைக்கவும் என்று வேண்டிக்கொண்டார். அப்ரஹா " நான் உங்களுடைய யாத்திரைத் தலத்தை அழிப்பதற்காக வந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ அதை விடுத்து ஒட்டகங்களை ஒப்படைக்குமாறு கேட்கின்றீரே" என்று ஆச்சரியப்பட்டுக் கூறினார். அதற்கு அப்த்-அல்-முத்தலிப், "எனக்குச் சொந்தமானது இந்த 200 ஒட்டகங்கள்தான். கஃபா இறைவனுக்குச் சொந்தமானது. அதை அவன் பாதுகாப்பான்" என்றார். இதைக் கேட்ட அப்ரஹா வியப்புற்று 200 ஒட்டகங்களையும் திருப்பிக் கொடுத்து விடுமாறு கட்டளையிட்டார்.

மக்கா நகருக்குத் திரும்பிய அப்த்-அல்-முத்தலிப், நகரத்தாரிடம் அனைவரையும் நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஒளிந்து கொள்ளுமாறு கூறி, சமவெளியில் நடப்பவற்றை அவதானிக்கக் கூடியவாறு தானும் ஒரு மலையில் ஏறி நின்றுகொண்டார். மக்கா நகரினுள் புகுந்து கஃபாவை தகர்த்து முடிந்தவுடன் திரும்பிச் சென்று விடுவதான திட்டத்துடன் அப்ரஹா மறுநாள் காலையில் தமது படைகளை மக்கா நகரத்துக்கு மிகச் சமீபத்தில் நிறுத்தினார். படை புறப்படத் தயாரானதும், படையின் முன்வரிசையில் நின்றிருந்த யானை உடனே அமர்ந்து விட்டது. படையினர் எத்தனை முறை முயற்சி செய்தபோதும் அது எழுந்திருக்கவேயில்லை.

அவ்வேளையில் சடுதியாக சில சம்பவங்கள் நிகழ்ந்தன. மேற்கு வானம் இருளத் தொடங்கியது. விசித்திரமானதும், பயங்கரமானதுமான ஒலி படையினரின் காதுகளை துளைத்தது. இருளில் அவர்கள் மூழ்கியிருக்க அவ்வொலியும் அதிகரித்துக்கொண்டே வந்தது. படையினரது பார்வைக்கெட்டிய தூரம் வரை ஆகாயம் சிறு பறவைகளினால் நிரம்பியிருந்தது. பறவைகள் கொண்டு வந்த சிறிய கூழாங்கற்களை விசியடித்தன. அக்கற்கள் படையினரின் மீது பட்டவுடன் அவர்களின் தசைகள் அழுகத் தொடங்கின. அச்சத்தினால் நிலை குலைந்த படையினரும், அப்ரஹாவும் ஸன்ஆ வுக்குத் திரும்பினர். வழியில் படையினரில் அநேகர் இறந்து போயினர். அப்ரஹாவும் ஸன்ஆவுக்குப் போய்ச் சேர்ந்ததும் இறந்து விட்டார்.

இச்சம்பவம் நடைபெற்றபோது அப்த்-அல்-முத்தலிபின் மகன் அப்த்-அல்லாஹ் வர்த்தகம் செய்வதற்காக சிரியா, பலஸ்தீன் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில் யத்ரிப் (மெதீனா) நகரில் சுகவீனமுற்று மரணமானார். அதேநேரம் கர்ப்பமாக இருந்த அப்த்-அல்லாஹ்வின் மனைவி ஆமினாவுக்கு சில வாரங்களின் பின்னர் முகம்மது நபி பிறந்தார். அதன் காரணமாகவே முகம்மது நபி பிறந்த ஆண்டுக்கு யானை ஆண்டு என்ற பெயர் வழங்கலாயிற்று.

மேற்கோள்கள் தொகு

  1. Hajjah Adil, Amina, "Prophet Muhammad", ISCA, Jun 1, 2002, ISBN 1-930409-11-7
  2. "Abraha." பரணிடப்பட்டது 2016-01-13 at the வந்தவழி இயந்திரம் Dictionary of African Christian Biographies. 2007. (அணுக்கம் 11 ஏப்ரல் 2007)
  3. "Walter W. Müller, "Outline of the History of Ancient Southern Arabia," in Werner Daum (ed.), Yemen: 3000 Years of Art and Civilisation in Arabia Felix. 1987". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  4. ʿAbdu r-Rahmān ibn Nāsir as-Saʿdī. "Tafsir of Surah al Fil - The Elephant (Surah 105)". Translated by Abū Rumaysah. Islamic Network. Archived from the original on 20 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 March 2013. This elephant was called Mahmud and it was sent to Abrahah from Najashi, the king of Abyssinia, particularly for this expedition. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Marr JS, Hubbard E, Cathey, JT (2015). "The Year of the Elephant". Wikiversity Journal of Medicine 2 (1). doi:10.15347/wjm/2015.003. https://en.wikiversity.org/wiki/The_Year_of_the_Elephant. 
    In turn citing: Willan R. (1821). "Miscellaneous works: comprising An inquiry into the antiquity of the small-pox, measles, and scarlet fever, now first published; Reports on the diseases in London, a new ed.; and detached papers on medical subjects, collected from various periodical publi". Cadell. p. 488.
  6. William Montgomery Watt (1974), p.7
  7. Esposito (2003). The Oxford Dictionary of Islam, ISBN 0-19-512558-4, Oxford University Press
  • முகம்மது - மார்டின் லிங்ஸ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானை_ஆண்டு&oldid=3629628" இலிருந்து மீள்விக்கப்பட்டது