விக்கிரமன் (பெருங்கதை இலக்கியத்தில் அரசன்)

விக்கிரமன் என்னும் பெயர் கொண்ட அரசர்களில் இந்த விக்கிரமன் பெருங்கதை இலக்கியத்தில் வருகிறான். [1]

சேடகன் என்னும் மன்னனுக்குப் பத்து ஆண்மக்கள். அவர்களில் இளையவன் இந்த விக்கிரமன். மகள் மிருகாபதி. எனவே மிருகாபதியின் அண்ணன். சேடகன் காட்டுக்குச் சென்று தவம் மேற்கொண்டபோது தலைநகர் வைசாலியில் இருந்துகொண்டு சேதி நாட்டை விக்கிரமன் ஆண்டுவந்தான். அரசியலில் சலிப்பு தோன்றவே தன் தந்ததையைப் போலவே தவம் மேற்கொள்ள விரும்பினான். விக்கிரமனுக்குக் குழந்தைப் பேறு இல்லை. எனவே தவம் செய்துகொண்டிருந்த தன் தந்தையிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த உதயணனைக் கண்டு, தன் தங்கை மகன் எனத் தெரிந்துகொண்டு, அவனை அவனது தாயிடமும், வளர்த்த பிரமசுந்தர முனிவரிடமும் வேண்டிப் பெற்று, தன் நாட்டுக்கு அழைத்துவந்து அரசாட்சியை ஒப்படைத்துவிட்டுத் தந்தையிடம் சென்று அவரைப் போலவே தானும் தவம் மேற்கொண்டான்.

அடிக்குறிப்பு தொகு

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.