அளேபுரம் இலட்சுமி நரசிம்மர் கோயில்

அளேபுரம் இலட்சுமி நரசிம்மர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள அளேபுரம் என்னும் ஊரில் உள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும்.

கோயிலின் பழமை தொகு

நான்முகன் ஒகேனக்கல்லில் தான் மேற்கொண்ட வேள்வியை முடித்துக்கொண்டு திரும்பும்போது அளேபுரத்தில் நரசிம்மரின் திருவுருவை நிலை நிறுத்தியதாக தொன்மம் நிலவுகிறது. இக்கோயிலில் விஜயநகர மன்னனான அச்சுத தேவ ராயன் ஆட்சிக்காலத்திய கன்னடக் கல்வெட்டு இங்கு ஒரு பலகைக் கல்லில் உள்ளது. கி.பி 1534 ஆம் ஆண்டைச் சேர்ந்து இந்தக் கல்வெட்டைக் கொண்டு பார்க்கும்போது இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவருகிறது.[1]

கோயிலமைப்பு தொகு

இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, வேதமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. திருவுண்ணாழியில் நரசிம்மர் உக்கிர மூர்த்தியாக எட்டுக் கைகளோடு, ஒரு கையில் இரணியகசிபுவின் தலைலையும், மற்றொரு கையில் அவன் காலையும் பிடித்தபடியும், இரண்டு கைகளால் அவனது வயிற்றை கிழித்தபடியும், வேறு இரு கைகளில் அவனின் குடலை மாலைபோல பிடித்த நிலையில், மற்று இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் உள்ளார். மகாமண்டபத்தில் இடப்புறத்தில் இராமர், இலக்குவன், சீதை ஆகியோருக்கான திருமுற்றமும், வலப்புறத்தில் தெற்கு நோக்கிய ஆஞ்சனேயர் திருமுற்றம் ஆகியன உள்ளன.

தேர்த் திருவிழா தொகு

இக்கோயிலில் தேரோட்டமானது 42 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துவந்தது. இதனையடுத்து தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு 2018 சூன் 26 அன்று நடந்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 112. 
  2. "அளேபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்". செய்தி. தினமணி. 28 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2018.