குருதிக் கொடை

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3[சான்று தேவை] மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.[1][2][3]

இரத்ததானத்தின் தேவைகள் தொகு

அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.

  • ஒவ்வோர் ஆண்டும் நமது தேசத்தின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
  • இரத்தம் மனிதனின் வாழ்க்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
  • ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
  • ஒவ்வொரு நாளும் 38,000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
  • பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்
  • ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.
  • ஓர் ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் தொகு

  • இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
  • இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
  • எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
  • கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள் தொகு

  • இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  • இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
  • இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
  • தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
  • இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
  • இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

இரத்த வங்கி தொகு

 
நடமாடும் இரத்த சேமிப்பு ஊர்தி

தானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், குருதிக் கொடையளிக்க விரும்புபவர்களிடம் குருதியைத் தானமாகப் பெறவும் குளிரூட்டப்பட்ட குருதி சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குற்றச்சாட்டுக்கள் தொகு

  • இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகளுக்காக இரத்தம் பெறுவதற்கு ஏஜென்டுகளை நியமிக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காக இரத்தம் கொடுப்பவர்களை வைத்திருக்கிறார்கள். நடைமுறைகளைப் பின்பற்றாமலும் இரத்தம் கொடுப்பவரின் கடைசியாக கொடுத்த தேதி, உடல் தகுதி போன்றவற்றையெல்லாம் பின்பற்றுவதில்லை என்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்தியது.[சான்று தேவை]
  • சில சமூக அமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அவற்றிலிருந்து பெறப்படும் இரத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.[சான்று தேவை]

இவ‌ற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Frequently Asked Questions About Donating Blood". American Red Cross Blood Services. Archived from the original on 2021-04-18. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  2. M. E. Brecher, Editor (2005), AABB Technical Manual, 15th ed., Bethesda, MD: AABB, ISBN 1-56395-196-7, pp. 98–103
  3. "Directed Donation". Mayo Clinic. Archived from the original on 2008-05-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிக்_கொடை&oldid=3890200" இலிருந்து மீள்விக்கப்பட்டது