கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்

அருள்மிகு வாலைகுருசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:கொம்மடிக்கோட்டை
சட்டமன்றத் தொகுதி:திருச்செந்தூர்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:சித்தர்கள் ஸ்ரீவாலைகுரு , ஸ்ரீ காசியானந்தர்
தாயார்:அன்னை ஸ்ரீ வாலாம்பிகை (எ) ஸ்ரீ பாலா
சிறப்புத் திருவிழாக்கள்:ஆவணி,சித்திரை

’ஸ்ரீ வாலைகுருசுவாமி’ கோவில் (ஸ்ரீ பாலா சேத்திரம்) தல வரலாறு தொகு

வாலைகுருவின் வாலாம்பிகை:

கலியுகத்தில் நல்ல குரு கிடைப்பது மிக அரிதிலும் அரிது. இதை அறிந்து தான் ஸ்ரீ வாலாம்பிகை ஸ்ரீ வாலை குருவையும் ஸ்ரீ காசியானந்தரையும் இந்த புண்ணிய பூமிக்கு சுமார் 800 வருடங்களுக்கு ( ஏறத்தாழ 1200வது வருடம்) முன் தன்னோடு அழைத்து வருகிறாள். தன் மனதில் இடம் பிடித்த ஸ்ரீ வாலை குருவையும் ஸ்ரீ காசியானந்தரையும் பிரதான படுத்தி ஆலயத்தையும் இவர்களுக்கு அவளே வரைபடம் தந்து, வடிவமைத்து தருகிறாள். சாதாரண மனிதர்களுக்கு ஸ்ரீ வாலைகுருவே பூலோகத்தின் கடவுளாவார். பூமியில் உள்ள அசையும் பொருள் , அசையாத பொருட்கள் போன்ற அனைத்து அவதாரங்களையும் குருவே ஞானப் பாதையில் அழைத்து சென்று அவரவர்கள் அவதார நோக்கத்தை அறியச் செய்கிறார்கள். இதைதான் திருமூலரும் “குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி” என்கிறார் திருமந்திரத்தில்.

ஸ்ரீவித்யை (ஸ்ரீ பாலா) மார்க்கத்தை குரு முகமாகவே அடைய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஸ்ரீ வாலை ஞான பூஜையின் மகத்துவத்தை போகர் அவருடைய குரு நந்திசரிடம் இருந்து அறிந்து கொண்டதாக சொல்கிறார். போகர் வாலையின் மகத்துவத்தை கொங்கணர்க்கு சொன்னதாகவும், கொங்கணரும் அவர்தம் சீடர்களுக்கு வாலை பூஜையை விளக்கியதாகவும் சொல்கிறார். அதாவது போகரின் குரு நந்திசர், கொங்கணரின் குரு போகர், கொங்கணிரின் சீடர்கள் பலர் என்று போகர் பாடல்மூலமாக குருவின் மகத்துவத்தை விளக்குகிறார். ஸ்ரீ வாலைகுரு சுவாமியின் சிடர் ஸ்ரீ காசியானந்தர். இவர்கள் எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீ வாலைதான் ஆவாள். சித்தர்களின் மேலான தெய்வம் வாலைதான் என்பதையும் உறுதிபடுத்துகிறார்..

கொம்மடிக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ வாலைகுருசுவாமியும் அவர்தம் சீடர் ஸ்ரீ காசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று இங்கேயே ஜீவ சமாதி கொண்டுள்ளார்கள். தன் தாய் (வாலை) பெயரையே தன் பெயரில் பெற்றுள்ளார்கள். தான் உபாசித்த தாயை உலக மக்களும் உபாசித்து சுகம் பெற வேண்டி ஸ்ரீ வாலையம்பிகைக்கும் சன்னதி கண்டு மக்கள் அனைவரையுமே தன் தாயை(அன்னையை) வணங்க வைத்திருக்கிறார்கள்.

இந்த பாலா சேத்திரத்தில் ,ஸ்ரீ வாலையை பூஜை செய்வதற்கும் , வணங்குவதற்கும் குருவின் அனுக்கிரகம் கண்டிப்பாக வேண்டும். சித்தர்கள் அனைவரும் குருமுகமாகவே தீட்சை பெற்றே வாலையை அடைந்தனர்.

ஸ்ரீ வாலைகுருசாமியும் அவர் தம் சீடர் ஸ்ரீ காசியானந்தரும் ஒரே கருவரையில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் முழுமையாக சரண் அடைந்து, குருவின் அனுக்கிரகத்தை முதலில் பெற்று ஸ்ரீ வாலையை வணங்கினால் அனைத்து பாக்கியங்களையும் பெறுவது நிச்சயம். இது மகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபடவும். மகான்களின் ஆசி உண்டு. அனைத்தும் செயல்வடிவம் பெறும்.

குருவின் தரிசனமும் ஸ்ரீ வாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம். அன்பர்களுக்கெல்லாம் இரு பெரும் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள் பாலிப்பது ஸ்ரீ பாலாவின் லீலா வினோதம் தான்.

’வாலை’ அம்பிகை சன்னதி தொகு

’'வாலை ( Valai ) சித்தர்கள் வணங்கிய தெய்வம், சக்தி மிக்க ’பாலா’ என்னும் தெய்வம். ‘பாலா’ ( Bala ) உபாசனை சித்தர்கள் செய்தது. சித்தர்கள் ’பாலா தேவியை’ ‘வாலை’ என்பார்கள். சமஸ்கிருதத்தில் ’பாலா’. தமிழில் ‘வாலை’ - வாலாம்பிகை. ‘வாலையடி சித்தருக்கு தெய்வம் தெய்வம்’ என்பது வழிவழியாய் வந்த மொழி. வாலையை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான் மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீவித்தையில் எளிதானது ’பாலா’ மந்திரம் என்னும் வாலை மந்திரம்.

சித்தர்கள் வணங்கிய ’வாலை’ தொகு

- கொங்கணர் சித்தரின் வாலை கும்மி

கருவூரார் பூசாவிதி

- தன்வந்திரி சித்தர் நிகண்டு

- மஸ்தான் சாகிபு.

பாலா பத்து வயதுள்ள தேவி என்பார் கருவூரார். வாலை சித்தருக்கெல்லாம் தாய். ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தாத்தா’ என்பது மெய்யான போற்றுதல். சித்தர்கள் ‘வாலையை’ உயர்த்திப் பேசுவதில் தவறில்லை. உலகம் வாலையில் அடக்கம் என்பது அதைவிட உண்மை. வாலையை பூசிக்க முற்பிறவி நற்பலன் இருந்தால் தான் முடியும் என்பது உண்மை. வாலை’ பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும் அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தெரியும் எத்தனை அற்புத காட்சியெல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்பது. வாலையை வழிபடுவோர்க்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள். வல்லவர்க்கெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் கருவூரார் சித்தர் பெருமானார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி. நாத தத்துவத்தையும், சுத்த மாயயையும் , ஒங்கார நிலையையும் அவள் தன் உபாசகனுக்கு உணர்த்துவாள். ‘ஓங்கார சொருபிணி’ என்று சித்தர் கூட்டம் அவளையே போற்றும்.

அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும் (ஸதா - எப்போதும், நவவர்ஷா - ஒன்பது வயதினள்). லலிதாம்பிகையினுடய வில்லிலிருந்து தோன்றிய வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்கள் முப்பது பேரையும் அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ (74ம் நாமம்) மற்றும் ஸ்ரீபாலா லீலாவிநோதி நீ: (965ஆம் நாமம்) எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இவள் தன் இடக்கரத்தில் புத்தகத்தை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. (பங்கய வாசனப் பாலைக் கமலைப் பராசக்தியே – கமலை பராசக்தி மாலை) இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், (நிவஸதி ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா- பாலா தியான சுலோகம்) சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.

ஸ்ரீவராஹி அம்மன் சன்னதி ஸ்ரீ வாலாம்பிகை சன்னதியின் அருகிலே உள்ளது. ஸ்ரீ சுவர்ண ஆகார்ஸண பைரவர் சன்னதி கோவிலின் வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையிலே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் வெளி பிரகாரத்தில் மஞ்சணத்தி மரத்தடியில் ஸ்தலவிருட்ச வினாயகரும், உச்சிஸ்ட கணபதியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்கள்.

திருமாத்திரை தொகு

ஸ்ரீ வாலைகுரு சுவாமியே நேரில் வந்து திருமாத்திரையை கொடுத்து பக்தர் ஒருவரை பெரும் பிணியில் இருந்து காத்தருளியதாக ஐதிகம். அன்றுமுதல் அன்பர்கள் திருக்கோவிலில் உள்ள வேப்பிலை ,மஞ்சணத்தி இலை, வில்வம் இலை, புளிய இலை , எலுமிச்சை பழ சாறு இவற்றுடன் திருநீறு மற்றும் திருமண் சேர்த்து , திருக்கோவிலின் பிரகாரத்தில் உள்ள அம்மிகளில் அவரவர்களே அரைத்து, இறைவனின் திருவடியில் வைத்து பின் அருந்தி வருகிறார்கள். திருமாத்திரை அக மற்றும் புற நோய்களுக்கு அரு மருந்தாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை

ஸ்தலவிருட்சம் தொகு

கோவிலின் பிரகாரத்தில் உள்ள மஞ்சணத்தி மரமே ஸ்தலவிருட்சம். இந்த விருட்சத்தின் நிழலிலேயே ஸ்ரீ வாலைகுருசுவாமியும் ஸ்ரீ காசியானந்தரும் ஸ்ரீ வாலை பூஜை செய்து வந்ததாக நம்பப்படுகிறது. இந்த மரத்தின் இலை திரு மாத்திரையாகவும் பயன்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த மஞ்சணத்தின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மரம் பட்டுப் போனது. பக்தர்கள் மன கவலையுடன் இருந்தனர். புதிய மஞ்சணத்தி கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது. புதிய மரம் எதுவும் நட தேவையில்லை, ”பட்டமரம் துளிர்க்கும்” என இறைவனின் உத்தரவு கிடைத்தது. உத்தரவு கிடைத்து சில மாதங்களிலேயே அதே இடத்தில் மஞ்சணத்தி மரம் துளிர்த்து , மரமாகி பக்தர்களின் மனக்குறையை போக்கியது. இதுபோல் இன்னும் எத்தனையோ அற்புதங்கள் தினம் தினம் நடந்துகொண்டே இருக்கிறது..

திருக்கோவில் இருப்பிடம் தொகு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் கொம்மடிக்கோட்டை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. கொம்மடிக்கோட்டை கிராமம் திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி போன்ற ஊர்களில் இருந்து பேருந்து மார்க்கமாக 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் வழியில் 27 கி.மி தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை என்ற அழகிய சிறு கிராமம். கொம்மடிக்கோட்டை பாலா சேத்திரம் என்னும் ஞானியார்மடம் ஸ்ரீ வாலைகுருசுவாமி திருக்கோவில். திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி போன்ற ஊர்களில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையங்கள்

திருநெல்வேலி - 71 கி.மி , நான்குநேரி - 41 கி.மி , வள்ளியூர் - 46 கி.மி , திருச்செந்தூர் - 27 கி.மி

பூஜை விபரம்: தொகு

ஸ்ரீ வாலைகுருசுவாமி திருக்கோவிலில் தினசரி நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

பௌர்ணமி சிறப்பு பூஜை தொகு

பௌர்ணமி தோறும் கிழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

  • பகல் 12.30 மணி : உச்சிகால பூஜை தொடர்ந்து அன்னதானம்.
  • இரவு 06.30 மணி : சிறப்பு அபிசேகம்.
  • இரவு 07.30 மணி : ஸ்ரீ வாலாம்பிகை அம்பாள் ஊஞ்சல் எளுந்தருளல் தொடர்ந்து ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை- திருவிளக்கு பூஜை.
  • இரவு 07.30 மணி : ஸ்ரீ வாலாம்பிகை அம்பாள் பிரகார உலா வந்து காட்சி தந்தருளல்.
  • இரவு 09.30 மணி : அலங்கார தீபாராதனை.

அமாவாசை சிறப்பு பூஜை: தொகு

பகல் 12.30 மணி : உச்சிகால பூஜை தொடர்ந்து அன்னதானம்.

தேய்பிறை அட்டமி சிறப்பு பூஜை: தொகு

ஸ்ரீ சுவர்ணாகர்சண பைரவருக்கு மாலை 06.00 மணிக்கு சிறப்பு அபிசேகம் தொடர்ந்து பூஜை.

வெளி இணைப்புகள் தொகு