கோவூர் கிழார் (சங்ககாலம்)

கோவூர் கிழார் [1] சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்.கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். சங்கப்பாடல்களில் கோவூர் கிழார் பாடியதாக இருப்பவை 17 பாடல்கள். இவற்றில் 15 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன [2]. எஞ்சிய இரண்டில் ஒன்று குறுந்தொகையிலும் [3], மற்றொன்று நற்றிணையிலும் [4] உள்ளன.

இவர் சொல்லும் செய்திகள் தொகு

கோவூர் கிழார் காலத்துச் சோழர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்), கிள்ளிவளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்) ஆகிய நால்வரையும் இவர் நேரில் கண்டு பாடியுள்ளார்.

  • சோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆண்டுகொண்டிருந்த உறையூரைக் கைப்பற்ற முற்றுகையிட்டான்.[5] வெற்றிக்குப் பின்னர் உறையூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தான்.[6] நலங்கிள்ளியின் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம்.[7] பாண்டிய நாட்டிலிருந்த 'ஏழில் கதவம்' கோட்டையை வென்று தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான்.[8] பரிசில் வேண்டி வருபவர்களுக்கு தான் வென்ற வஞ்சி, மதுரை நகரங்களையே தருவானாம்.[9]
  • பகைநாட்டு மக்கள் தீக்கனா காணும்படி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிடுவானாம்.[10] விறகு வெட்டிக்குப் பொன்முடிச்சு கிடைப்பது போல இந்தக் கிள்ளிவளவன் புலவர்களுக்குப் பரிசில்களை வழங்குவானாம்.
  • சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கரை வென்றான். இதனால் வஞ்சிமுற்றம் [11] இவன் ஆளுகைக்கு உட்பட்டது. முற்றத்திலிருந்து வீட்டுக்குள் நுழைவது போல இவன் சேரரின் குடநாட்டையும் வென்றான்.[12]

வேந்தனுக்கு அறிவுரை தொகு

  • நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார்.[5] இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
  • நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினா.[13]
  • சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார். புறநானூறு 46

பிற பாடல்கள் தொகு

  • உலகியலை நன்கு உணந்த இவர் பொருளும் இன்பமும் சிறப்புக்குரியவை. என்றாலும் அவை அறத்தைப் பின்பற்றும் எனக் குறிப்பிடுகிறார்.[7]
  • பகை மன்னன் வெல் வீரன் மார்பில் பாய்ந்தது. வீரன் வேல் பகைமன்னனின் பட்டத்து யானைமேல் பாய்ந்தது. இதனைக் கண்ட பகைமன்னனின் களிறுகளெல்லாம் அவற்றின் பிடிகள் [14] நாணும்படிப் புறங்கொடுத்தன - என்று கூறும் இவரது மூதின் முல்லைப் பாடல் குடிமக்களின் அக்காலக் கடமையைப் புலப்புத்துகின்றன.
  • இவரது அகத்திணைப் பாடல்கள் இரண்டில் ஒன்று முல்லைத்திணைப் பாடல்.[15] ஆண் பெண் மான்கள் மருவி விளையாடுவதைப் பார்த்துக் காதலர் விரைந்து வந்துவிடுவார் எனத் தோழி தலைவியைத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
  • மற்றொரு பாடலில் [16] வானத்து எரிமீனைக் குறிப்பிடும் அழகிய உவமை ஒன்று உள்ளது. கானவன் யானைகளை ஓட்ட ஞெகிழியை [17] வீசுவானாம். அது எரிமீன் விழுவது போலத் தோன்றுமாம்.

கோவூர் கிழார், நான்கு சோழ மன்னர்களின் காலத்தில் வாழ்ந்தவர்

  • சோழன் நலங்கிள்ளியைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 31, 32, 33, 302 மற்றும் 400) உள்ளன.
  • சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது என ஐந்து பாடல்களும் (புறம் 41, 46, 68, 70 மற்றும் 386) உள்ளன.
  • சோழன் நலங்கிள்ளியின் தம்பி “மாவளத்தான்” ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 44) உள்ளன.
  • சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடியது என ஒரு பாடலும் (புறம் 46) உள்ளன்.
  • சோழன் குளமுற்றத்து துஞ்சிய துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கால்களால் இடறிக் கொல்ல இருக்கையில், கோவூர் கிழார் தடுத்துப் பாடி உய்யக்கொண்டது என ஒரு பாடலும் (புறம் 46).
  • சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் எனும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் ஒற்றன் என நினைத்து கொல்லப்புகும் நேரத்தில், கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியை பாடி, இளந்தத்தனை உய்யக்கொண்டது என ஒரு பாடல் (புறம் 47).
  • சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனை கருவூரெறிந்தானைப் பாடியது என ஒரு பாடலும் (புறம் 373) உள்ளது.

இந்த ஐந்து பாடல்களும் தனித்தனி நிகழ்வுகளைக் குறிப்பிட்டு இயற்றப்பட்டுள்ளது. (முற்றுதல் எனில் முற்றுகையிடல், துஞ்சுதல் எனில் போர்களத்தில் வீரமரணம் அடைதல், எறிதல் எனில் கைப்பற்றுதல் என்று பொருள்).

கோவூர் கிழார் காலத்திய சமகால புலவர்கள்

  • கோவூர் கிழாரால் பாடப்பட்ட சோழன் மாவளத்தானை தாமப்பல் கண்ணனாரும் பாடியிருக்கிறார். (புறம் 43)
  • சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும் மற்றும் ஆலத்தூர் கிழாரும் பாடி உள்ளனர்.
  • சோழன் குள முற்றத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் உட்பட ஒன்பது புலவர்கள் பாடியுள்ளனர்.

கோவூர் கிழார் தடுத்த சோழர்களின் சகோதர சண்டை

நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சகோதரச் சண்டை நடக்கிறது. அந்த சண்டை சமபலம் கொண்ட்தாக இல்லை. நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நெடுங்கிள்ளி அரண்மனைக்குள் இருக்கிறான். இந்த நல்லதல்ல என எண்ணிய கோவூர் கிழார் உலகத்து இயற்கையையும் நாட்டு நடப்பையும் சுட்டிக்காட்டி போரைத் தவிர்க்க வேண்டுகிறார். உன்னோடு போரிட வந்திருக்கிறவன் பனம்பூ மாலை அணிந்த சேரன் அல்லன். வேப்பம் பூமாலை அணிந்த பாண்டியன் அல்லன். நிவீர் இருவரும் அத்திமாலை அணிந்த சோழர்களே. உங்களில் எவர் தோற்பினும், சோழர் குலத்திற்கு இழிவு எனப்பாடி சகோதர போரைத் தவிர்த்தார் கோவூர் கிழார்.

அடிக்குறிப்பு தொகு

  1. ஊரின் பெயரில் காணப்படும் ஒப்புமையை எண்ணி கோவூர் கிழார், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ”கோவூர்” கிராமம், பிறந்த ஊராக இருக்கலாம் என கூறப்படுகிறது. புலவர் சோழநாட்டினர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்
  2. புறநானூறு 31, 32, 33, 41, 44, 45, 46, 47, 68, 70, 308, 373, 382, 386, 400 ஆகிய பாடல்கள் இவரால் பாடப்பட்டவை
  3. குறுந்தொகை 65
  4. நற்றிணை 392
  5. 5.0 5.1 புறநானூறு 45
  6. வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. (புறம் 32) குடுமி = உச்சிப்பிள்ளையார் கோயில் மலை. இது குயவர் குழந்தைகள் மட்பாண்டம் செய்யச் சக்கரத்தில் வைத்த பசுமண் போல இருந்ததாம்
  7. 7.0 7.1 புறநானூறு 31
  8. தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - புறநானூறு 33
  9. புறநானூறு 32
  10. புறநானூறு 41
  11. கருவூர்
  12. புறநானூறு 373
  13. புறநானூறு 47
  14. பெண்யானைகள்
  15. குறுந்தொகை 65
  16. நற்றிணை 393
  17. தீப்பந்தத்தை

வெளி இணைப்புகள் தொகு