தர்மராஜ இரதம், மாமல்லபுரம்

தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் கோயிலானது, மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற பஞ்சபாண்டவர் இரதங்கள் எனப் பரவலாக அறியப்படுகின்ற ஒற்றைக் கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளமொன்றில் காணப்படுகின்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இதன் பெயர் ஸ்ரீ அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம் என அறியப்படுகின்றது. இதன் மூலம் இது "ஸ்ரீ அத்யந்தகாமா" என்னும் விருதுப்பெயர் கொண்ட பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டது என்பது தெளிவு. எனினும் இவ்விருதுப்பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட பல்லவ மன்னர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இராஜசிம்மன் எனப்படுகின்ற இரண்டாம் நரசிம்மனே இங்குள்ள கற்றளிகளைக் கட்டுவித்தவன் எனச் சிலரும், இவை முதலாம் நரசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது என வேறு சிலரும் நிறுவ முயன்றுள்ளனர்.

தர்மராஜ இரதம்

அமைப்பு தொகு

 
தர்மராஜ இரதத்தின் இன்னொரு தோற்றம்

மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலில் மூன்று தளங்கள் உண்டு. மூன்று தளங்களிலுமே உண்ணாழிகள் உள்ளன. மேற்பகுதிகள் நிறைவு பெற்ற நிலையில் இருந்தாலும், கீழ்த்தள வேலைகள் அரை குறை நிலையிலேயே காணப்படுகிறது. உண்ணாழியைச் சுற்றிய சுவர்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சுவரில் நரசிம்ம பல்லவனின் சிற்பமும் உள்ளது.[1]

குறிப்புகள் தொகு

  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.69, 70.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு