திருத்தண்கா

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது. ஆச்சாரியர் " வேதாந்த தேசிகன்" அவதாரம் செய்த திருத்தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில் [1]
புவியியல் ஆள்கூற்று:12°49′28″N 79°42′20″E / 12.824437°N 79.705501°E / 12.824437; 79.705501
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தண்கா, தூப்புல்
பெயர்:திருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில் [1]
அமைவிடம்
ஊர்:தூப்புல்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)
தாயார்:மரகதவல்லி
தீர்த்தம்:சரஸ்வதி தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
விமானம்:ஸ்ரீகர விமானம்
கல்வெட்டுகள்:உண்டு
தொலைபேசி எண்:+91- 98944 43108

பெயர்க்காரணம் தொகு

தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று.

தல வரலாறு தொகு

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞானத்தால் உணர்ந்த பிரம்மன், உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சமாக்கினார். தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்கினி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. அக்கினி வடிவில் யாகத்தை அழிக்க வந்த அசுரனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார்.

இறைவன், இறைவி தொகு

இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், என்னும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறார். இறைவி பெயர் மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானம் ஸ்ரீகர விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.[3] மேலும் இலக்குமி, ஆண்டாள், வேதாந்த தேசிகர் மற்றும் ஆழ்வார் சிலைகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஹயக்கிரீவருக்கு தனிக் கோயில் உண்டு.

மங்களாசாசனம் தொகு

திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் பாடல்பெற்ற தலமாகும்[4]:

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
  மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
  அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில்
  வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்தனால் பயன்பெற்றேன் வருக என்று
  மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே!
                - திருநெடுந்தாண்டகம் 14

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://temple.dinamalar.com/New.php?id=270
  2. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
  3. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
  4. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=291

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தண்கா&oldid=3641261" இலிருந்து மீள்விக்கப்பட்டது