திருமலை பத்மநாதன்

திருமலை ரீ. பத்மநாதன் (இறப்பு: நவம்பர் 18, 2017) ஈழத்து மெல்லிசை மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பத்மநாதன் இசையாசிரியர் சங்கரலிங்கம் என்பவரிடம் முறையாகக் கருநாடக இசை பயின்றார். சித்தார் இசைக் கலைஞர் ஜெயரத்தினா என்பவரிடம் இந்துஸ்தானி இசையைப் பயின்றார்.[1] திருகோணமலையில் சாம்சன் என்பவரிடம் மேற்கத்திய இசையையும் கற்றுக் கொண்டு, 1964-ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற பெயரில் ஓர் இசைக்குழுவை தனது 22வது அகவையில் ஆரம்பித்து நடத்தி வந்தார்.

1966 இல் திருகோணமலைக் கலைஞர்கள் சிலர் சிரிப்பு மன்றம் ஒன்றை உருவாக்கி கொழும்பில் பல நிகழ்ச்சிகளை நடத்தினர். அந்நிகழ்ச்சிகளில் பத்மநாதன் குழுவினரின் இசைநிகழ்ச்சிகளும் தவறாமல் இடம்பெற்று வந்தன.[1] இந்நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த நாடகக் கலைஞர் ஏ. ரகுநாதன் தான் தயாரித்த நிர்மலா (1968) திரைப்படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை பத்மநாதனுக்கு வழங்கினார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். இப்படத்தில் இடம்பெற்ற கண்மணி ஆடவா .. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் டொக்டர் வேதநாயகம் தயாரிப்பில் வெளியான தென்றலும் புயலும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற சந்திர வதனத்தில் இந்த நீலப்பூ.., அவள்தான் எனதுயிர்க் காதலி உட்பட அனைத்துப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இலங்கை வானொலியின் பல மெல்லிசைப் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பல சிங்களப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.[1]

திருமலை பத்மநாதனின் மகள் மதுமதி பத்மநாதன் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2021 இல் வெளிவந்த ஏலே தமிழ்த் திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 தேவதாஸ், தம்பிஐயா (27-12-2015). "இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள்". வீரகேசரி. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_பத்மநாதன்&oldid=3119087" இலிருந்து மீள்விக்கப்பட்டது