நோக்கர் (Nokkar) (பொதுவாக சாதிப்பிள்ளை என்று அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1]

மக்கள் தொகை

தமிழகத்தில் இவர்கள் 7 ஆயிரத்து 559 பேர் வசிக்கின்றனர். தமிழ், தெலுங்கு கலப்பினமாக இவ்வினத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தெலுங்கையும், பிறரிடம் பேசும்போது தமிழையும் பயன்படுத்துகின்றனர்.

வாழும் பகுதிகள்

தமிழகத்தில் இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், சேலம், தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய வடமாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

இதரபெயர்கள்

இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.

கல்வி சமூக நிலை

சமூக நிலையில் கல்வி விழிப்புணர்ச்சியில் மிகுந்த பின்னடைவில் உள்ள சமூகம். கிட்டத்தட்ட கல்வியறிவு என்பதே இல்லாத சமூகம், தொடர்ச்சியான இடம்பெயர்ந்தே வாழ்வதால் இம்மக்களால் கல்வியறிவு பெற இயலவில்லை என்றாலும், இவர்களுக்கென சொந்த ஊரும் அதில் நிலபுலண்களும் இருப்பதுண்டு. வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் இம்மக்கள் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலைச் செய்து வந்தனர். மக்களிடையே பித்தளைப் பாத்திரத்தின் பயன்பாடு குறைந்து வருவதால் அத்தொழில் நலிவடைந்து, தற்போது கிடைக்கின்ற கூலி வேலையைச் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி(மன்னிக்கவும் இப்போ இது கிட்டத்தட்ட பிச்சை மாதிரி) கேட்க மாட்டார்கள், மேலும் இது வரி வசூல் போன்ற அதிகார தோரணையாகவே இருக்கும். அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்.

சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர்.[2]

வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம்.

வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு, தவளை, காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர். இவ்வின மக்கள் ஆண்டில் பாதி நாட்களுக்கு மேல் வரி வசூலிப்பதற்காக இடம் பெயரும் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்வதால், இவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாமல் போய்விடுகிறது.

வரலாறு

இவர்கள் தொடர்பான ஒரு கதை உண்டு, வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் மலையாள தேசத்தில் சென்று மிகப்பெரிய நிலையை அடைவார் நிறைய செல்வங்களை சேர்த்துக்கொள்வார், அங்கேயே வேற்று சாதி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் அதனால் அவரை சொந்த ஊரில் வன்னியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பின் அவ்வூர் கோவில் கட்டுவதற்கு நிலைப்படி வைக்கும் போது ஒவ்வொரு நாளும் அது விழுந்துவிடும், இது விழாமல் நிற்க கர்ப்பிணி பெண்ணை பலி கொடுக்க வேண்டுமென்பார்கள், அதற்கு வேறு யாரும் ஒத்துக்கொள்ளாததால் இவர் தன் மனைவியை பலி தர ஒத்துக்கொள்வார், ஆனால் அதற்கு பதில் தன் சந்ததிகளுக்கு வன்னியர்களின் வாழ்விலும் சாவிலும் பங்கிருக்க வேண்டுமென சடங்கு நடத்தும் உரிமையையும் வரிவசூல் உரிமையையும் கேட்பார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட பின், நிறைமாத கர்ப்பிணியை பலிகொடுக்க கோவில் நிலைப்படி நிலையாக நிற்கும். இது ஒரு கதை இதன் உண்மைதன்மை தெரியவில்லை.

வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது. தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு, இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. இது சேலம் மாவட்டம் மல்லிகுந்தம் இராம கவுண்டன் என்பவரிடம் உள்ளதாக தொல்லியல் அறிஞர் நடனகாசிநாதன் குறிப்பிடுகிறார். இப்பட்டயம் 1708 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும். உடையார்பாளையம் சமீன்தாரால் இது வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செப்பேடுகள் ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் உள்ளாதாகவும் அறியமுடிகிறது. அறுபத்துநான்கு அடிகள் கொண்ட இரண்டுபக்க செப்பேட்டில் அது வழங்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டயமும் விருதும் கொண்டுவரும் சாதிப் பிள்ளைக்கு தடையில்லாமல் தலைக்கட்டு ஒன்றுக்கு முக்குறுணி அரிசியும் ஊருக்கொரு ஆடும் பண்ணியும் கொடுக்க வேண்டியது. அப்படி கொடாமல் யாதாமொருவர் தடை செய்தவர்கள் கங்கைக் கரையில் காறாம் பசுவைக் கொன்ற தோசத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்

  1. "எம்.பி.சி., பட்டியலில் உள் ஒதுக்கீடு: சமூக சமத்துவப்படை கோரிக்கை". தினமலர்
  2. "சாதியச் சமூகம்: குடிப்பிள்ளை (சாதிப்பிள்ளை)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கர்&oldid=2973929" இலிருந்து மீள்விக்கப்பட்டது