பல்லாவரம் குடைவரை

பஞ்சபாண்டவர் குடைவரை எனவும் மக்களால் அழைக்கப்படும் பல்லாவரம் குடைவரை, சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்னும் ஊருக்குக் கிழக்கேயுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குடைவரை ஆகும். தாம்பரத்துக்கும் சென்னைக்கும் இடையே சென்னையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாவரம் அமைந்துள்ளது. இக்குடைவரை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. தற்போது இதை முசுலிம்கள் ஒரு தர்காவாகப் பயன்படுத்து வருகின்றனர். இந்தக் குடைவரை உயரமான இடத்தில் குடையப்பட்டதால் அதை அடைவதற்குப் படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.[1]

நுழையும் பகுதியில் ஒரு மேடை போன்ற அமைப்பும் அதற்கு அப்பால் மண்டபமும் அமைந்துள்ளது. மண்டபத்தினுள் இரண்டு தூண் வரிசைகள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு முழுத்தூண்களும், சுவரை அண்டி இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. மண்டபத்தின் பின்புறச் சுவரில் ஐந்து கருவறைகள் குடையப்பட்டு உள்ளன. இக்குடைவரையில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் சிலவும் உள்ளன.

இக்குடைவரை இப்போது வேறு தேவைகளுக்குப் பயன்படுவதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் புதிய கட்டுமானங்கள் காணப்படுவதுடன், தீந்தையும் பூசப்பட்டிருப்பதால் இதில் பழமையைக் காண முடியாது உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 22-24
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாவரம்_குடைவரை&oldid=3065794" இலிருந்து மீள்விக்கப்பட்டது