புரந்தரதாசர்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

புரந்தரதாசர் (பொ.ஊ. 1470–1564) கருநாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[1] இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார். மாயாமாளவகௌளை என்னும் இராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே.

புரந்தரதாசர்
பிறப்பு1470
இறப்பு1564 (அகவை 94)
அம்பி
பணிஇசையமைப்பாளர், கவிஞர்
பாணிகருநாடக இசை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

புரந்தரதாசர் பொ.ஊ. 1470 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில் [சான்று தேவை] பிரபல்யமான செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் விட்டலர் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் எனும் பெயரும் வழங்குதலாயிற்று. தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார். இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள விட்டலர் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்த பின் வயிற்று வலி நீங்கியது. தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525 ம் ஆண்டு விஜயராச சுவாமிகளினதும், சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார்.இவர் சங்கீத பிதாமகர்,ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார்.[2]

இசைப் பணி தொகு

இவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளது.[சான்று தேவை] இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் உருப்படிகளை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும். இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார். இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார்.

இறப்பு தொகு

இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீர்த்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 21, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்
  2. "Sri Purandara Dasa". Archived from the original on 2019-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரந்தரதாசர்&oldid=3794077" இலிருந்து மீள்விக்கப்பட்டது