புர்ரகதை

ஒரு நாட்டுப்புற காவிய கதை கலை வடிவம்

புர்ரகதை (Burrakatha) பர்ரகதை என்றும் உச்சரிக்கப்படும் இது ஜங்கம் கதை பாரம்பரியத்தில் ஒரு வாய்வழி கதை சொல்லும் நுட்பமாகும். இது ஆந்திரப் பிரதேசம் , தெலங்காணா ஆகிய மாநிலங்களின் கிராமங்களில் நிகழ்த்தப்படுகிறது. குழுவில் ஒரு முக்கிய நடிகரும், இரண்டு சக-நடிகர்களும் இருப்பர். இது பிரார்த்தனைகள், தனி நாடகம், நடனம், பாடல்கள், கவிதைகள், நகைச்சுவைகளை உள்ளடக்கிய ஒரு கதை பொழுதுபோக்காகும். தலைப்பு இந்து புராணக் கதையாகவோ ( ஜங்கம் கதை) அல்லது சமகால சமூகப் பிரச்சினையாகவோ இருக்கும்.[1] 1930-1950 தொடக்கத்தில் தெலங்காணா கிளர்ச்சியின் போது இது பிரபலமான கலை வடிவமாக மாறியது.

பழங்குடியினமான ஜங்கம் நாட்டுப்புறக் கலைஞர்கள்

தோற்றம் தொகு

 
புர்ரகதை சொல்லிகள்

புர்ரகதையின் நவீன வடிவம் குண்டூர் மாவட்டத்தில் 1942ஆம் ஆண்டில் கிராமங்களில் கல்வியறிவற்ற மக்களிடையே அரசியல் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.[2]

சொற்பிறப்பியல் தொகு

"புர்ரா" என்பது தம்புரா என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வெற்று ஓடு கொண்ட இசைக் கருவியாகும். "கதை" என்றால் கதை சொல்லுதல்.

புர்ரா என்றால் தெலுங்கில் மூளை என்று பொருள். தம்புரா மனித மண்டை ஓட்டை ஒத்திருக்கிறது. இது சுட்ட களிமண் அல்லது உலர்ந்த பூசணி அல்லது பித்தளை அல்லது தாமிரத்தால் ஆனது. இசைக்கருவி வீணையைப் போலவே தோற்றமளிக்கும். இசைக்கலைஞர் இதன் நரம்புகளை இழுத்தும் அழுத்தியும் இசையை உருவாக்குவார்.

வரலாறு தொகு

பர்ரகதை நாடோடி மக்களின் பக்திப் பாடல்களாகத் தொடங்கி பிரபலமான கலை வடிவமாக மாறியது. ஆந்திரப் பிரதேசத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒலிபரப்பப்படுகிறது. ஜங்கம் கதை என்று அழைக்கப்படும் நாடக நிகழ்ச்சிக்கு இது 20 ஆம் நூற்றாண்டின் பெயர். ஜங்கம் லிங்காயத்துகள் சிவபெருமானை வணங்கி பாடி அலைந்து திரிந்தனர். இந்த நாடகங்களில் கதைசொல்லியும் அவரது மனைவியும் என இரண்டு கலைஞர்கள் பங்கேற்பர். சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களுடன், மதச்சார்பற்ற அம்சம் இந்த வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நவீன வடிவத்தில் அனைத்து பாலினத்திலும் மூன்று கலைஞர்களைக் கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தொகு

பெண்டியாலா வெங்கடேசுவரராவ், சுங்கர ஸ்ரீ கிருஷ்ண மாதவ ராவ், பருச்சூரி ராமகோடய்யா, சிரிவிசெட்டி சுப்பாராவ், கோசூரி புன்னய்யா, கோவர்த்தனன், காக்குமானு சுப்பாராவ், தவுலுரு, சிந்தலால் சூர்யநாராயணா, புடகஜங்கலா மோடே பாப்பையா, புடகஜங்கலா மொட்டேக் போன்ற பிரபல இந்து கலைஞர்கள் இவ்வகை நடனத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். பெண்களும் குழுக்களை உருவாக்கினர், எ.கா., மோடூரி உதயம், சிந்தலா கோடேசுவரம்மா, மகான்காளி லட்சுமி, ஸ்ரீதேவி சகோதரிகள் போன்றவர்கள். இந்து அல்லாத பிரபல கலைஞர்களில் ஆபிரகாம் பாகவதர், மனோகர கவி, காதர் கான் சாகிப், சேக் நாசர் போன்றவர்களை குறிப்பிடலாம்.

சேக் நாசர் பல்வேறு சமகால பிரச்சினைகளில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் அங்கீகாரம் பெற்றார். அவர் "புர்ரகதையின் தந்தை" என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

முக்கியத்துவம் தொகு

புர்ரகதை என்பது கிராமங்களில் ஒரு பொழுது போக்கு நிகழ்வு. நவராத்திரி நோன்பு அல்லது மகர சங்கராந்தி பண்டிகை காலங்களில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், கம்போசராசன் கதை, சின்னம்மா கதை, முகுருமோரடிலா கதை போன்ற அரசர்களின் சில சிறந்த மற்றும் ஒழுக்கக் கதைகளையும் விவரிப்பது இப்போதும் காணப்படுகிறது.

தற்போது தொகு

புர்ரகதை சொல்பவர்கள் புடகஜங்கலு என்று அழைக்கப்படுகிறார்கள். நவீன வாழ்க்கையில் இணையம் மற்றும் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் புர்ரகதைகள் பார்க்கப்படுவதில்லை. இதை வளர்க்கவும் கலையை மேம்படுத்தவும் யாரும் இல்லை. கடந்த காலத்தில் இந்த புர்ரகதையை சொல்பவர்கள் கிராமங்களில் முக்கியமானவர்களாக இருந்தனர். இப்போது அவர்களின் கலைக்கு எந்த பதிலும் இல்லை.

எனவே இந்த புர்ரகதை சொல்பவர்கள் தங்கள் பாரம்பரிய கலையை விட்டுவிட்டு பிச்சைக்காரர்களாக அல்லது தினக்கூலிகளாக மாறிவிட்டனர். இந்த நவீன காலத்திலும், இந்த பழங்குடியினரில் படித்தவர்கள் இல்லை. அவர்களின் வளர்ச்சிக்கான பழங்குடி சாதிச் சான்றிதழ்கள் கூட அவர்களிடம் இல்லை.

கர்நாடகாவைச் சேர்ந்த தாரோஜி எர்ரம்மா புர்ரகதை கலைஞர் ஆவார்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Burrakatha loses sheen sans patronage". 14 January 2013. Archived from the original on 14 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.
  2. Lectures, Bangalore University Dept of Publications and Extension (1977-01-01) (in en). Vidya Bharathi. https://books.google.com/books?id=g4U5AAAAIAAJ. 

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்ரகதை&oldid=3669058" இலிருந்து மீள்விக்கப்பட்டது