மண்டல ஊரக வங்கி

மண்டல ஊரக வங்கி (Regional Rural Bank) இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் உள்ளகநிலை வங்கிகளாகும். இவை முதன்மையாக சிற்றூர் பகுதிகளில் வங்கியின் அடிப்படை சேவைகளையும், நிதிச் சேவைகளையும் வழங்கிட அமைக்கப்பட்டவையாகும். இருப்பினும் ஊரக வங்கிகளின் கிளைகள் நகரப்பகுதிகளிலும் அமைந்துள்ளன.

செயற்பாடுகள் தொகு

ஊரகத்திலும், பகுதி ஊரகப் பகுதிகளிலிருந்தும் நிதிய மூலங்களைப் பெற்று, வேளாண்மைத் தொழிலாளர்களுக்கும், கைப்பொருள் வினைஞர்களுக்கும் கடன் வழங்குவதே இவற்றின் முதன்மை நோக்கம். தவிரவும், இவை ஊரகப் பகுதிகளுக்கு வங்கிச் சேவைகளை வழங்குகின்றன. அரசின் மக்கள்நலத் திட்டங்களின் வழங்கல் வசதியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழான ஊதியம், முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குகின்றன. மேலும், பாதுகாப்பு பெட்டகம், கடனுதவி அட்டை, பற்று அட்டை ஆகிய வசதிகளையும் அளிக்கின்றன.

இது குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு உட்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்கும். இவை எந்தப் பகுதிக்குள் இயங்க வேண்டும் என்பதை இந்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இவை மாவட்டத்துக்கு ஒன்றாகவோ, இரண்டு மாவட்டங்களுக்கு ஒன்றான அளவிலோ இயங்குகின்றன.

வரலாறு தொகு

இவை 1975-ஆம் ஆண்டில் செப்டம்பர் 26ல் இயற்றப்பட்ட அரசாணையின் மூலம் உருவாக்கப்பட்டன; இவை மண்டல ஊரக வங்கிச் சட்டம் 1976 மூலம் சட்டவிதிக்குட்படுத்தப்பட்டன. இந்தச் சட்டம் விவசாயத்திற்கும் ஏனைய ஊரகத் தொழில்களுக்கும் போதுமான வங்கி/நிதி வசதிகளை வழங்குவதற்காக இயற்றப்பட்டது. இவை இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சியில் நரசிம்மம் பணிக்குழுவின் பரிந்துரைப்படி நிறுவப்பட்டன.[1] அக்டோபர் 2, 1975இல் முதல் மண்டல வங்கியாக பிரதமா வங்கி செயற்படத் துவங்கியது. அக்டோபர் 2, 1976இல் மேலும் ஐந்து மண்டல ஊரக வங்கிகள் நிறுவப்பட்டன; முதலில் ரூ. 100 கோடி ($ 10 மில்லியன்) முதலீடும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டு 500 கோடி ($ 50 மில்லியன்) முதலீடும் செய்யப்பட்டன.

இவை நடுவண் அரசுக்கும், புரவலர் வங்கிகளுக்கும் உடமையாக இருந்தன. ஐந்து வணிக வங்கிகள்-- பஞ்சாப் தேசிய வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி -- புரவலர் வங்கிகளாக விளங்கின. நடுவண் அரசு 60 சதவீதமும், மாநில அரசு இருபது சதவீதமும் புரவலர் வங்கிகள் 20 சதவீதமும் பங்குகளை முதலீடாக வழங்கின. முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி இவை வழங்கும் கடன்களின் வட்டிக்கான வரம்பை நிர்ணயித்தது. ஆகத்து 1996இலிருந்து ரிசர்வ் வங்கி இந்தக் கட்டுப்பாட்டை நீக்கியது; தற்போது இவை வழங்கும் கடன்களுக்கான வட்டியின் வீதம் 14-18%ஆக உள்ளது.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டல_ஊரக_வங்கி&oldid=3223570" இலிருந்து மீள்விக்கப்பட்டது