முதலாம் பிருதிவிபதி

முதலாம் பிருதிவிபதி என்பவன் கங்க மன்னர்களில் ஒருவனாவான். இவன் கி.பி.880 இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் நடந்த போரில் இறந்தான்

அரசுரிமைப் போர்கள் தொகு

ஒன்பதாம் நூற்றான்டின் பிற்பகுதியில் கங்கர்கள் மிகவும் வலுவிழந்திருந்தனர். அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிளவுகள் இதனை மிகுதிப்படுத்தி இருந்தன. அவர்களுக்குள் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி அவர்களை இரு மரபுகளாக்கியது. இப்பகுதி சிற்றரசர்களையும் இரு பிரிவுகளாக்கி இருந்தது. கங்க அரசுரிமையாளர்களில் ஒருவனே முதலாம் பிருதிவிபதி இவனைப் பாணரும், வைடும்பரும் ஆதரித்தனர். இன்னொருவன் முதலாம் இராசமல்லன் இவனை நுளம்பரும்,தெலுங்குச் சோடரும் ஆதரித்தனர். இவர்களுக்குள் நடந்த உட்பகைப் போர்கள் பல இப்போர்களின் இறுதியில் (கி.பி.878) வென்றவர்கள் பிருதிவிபதியும் அவன்தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்துவிடவில்லை.

திருப்புறம்பியம் போர் தொகு

இவ்வூர் குடந்தைக்கு அருகில் உள்ளது இங்கு கி.பி.880இல் நடந்த இந்தப் போர் தென்னாட்டு வரலாற்றில் பெரு முக்கியத்துவம் வாய்ந்த போராகும். சோழப் பேரரசு வளர்வதற்கு வித்திட்டப் போர். இப்போரின்போது பல்லவ பேரரசனாயிருந்தவன் நிருபதுங்கவர்மன் அவனுடன் அவன் மகன் அபராசிதன் ஆட்சியில் பங்குகொண்டிருந்தான். பல்லவருக்கு ஆதரவாக முதலாம் பிருதிவிபதியும், சோழன் ஆதித்தனும் பல்லவர் பக்கம் நின்று பாண்டியன் வரகுணனை எதிர்த்துப் போரிட்டனர். பிருதிவிபதி பாண்டியர் படைகளைச் சூறையாடினான். இதைக்கண்ட பாண்டியன் சீற்றம்கொண்டு அவன்மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால் மாள்வதற்குள் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்திற்கே வெற்றியளித்துவிட்டான். கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டி, 'தன் உயிர் விட்டும் அபராசிதனை (வெல்ல இயலாதவன் என்பது அப்பெயரின் பொருள்) அபராசிதனாகவே ஆக்கிவிட்டான் என்று குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவிபதியை அடக்கம்செய்து நிறுவப்பட்ட பள்ளிப்படைக் கோயில் உள்ளதாகத் தெரியவருகிறது. திருப்புறம்பியம் போரில் முதலாம் பிருதிவிபதி இறந்ததினால் இராசமல்லன் மரபு மீண்டும் வலுவுறத்தொடங்கியது.

கருவி நூல் தொகு

தென்னாட்டுப் போர்க் களங்கள்,க. அப்பாதுரை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பிருதிவிபதி&oldid=3533395" இலிருந்து மீள்விக்கப்பட்டது