அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் என்பது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு நூலகமாகும். முழுக்க முழுக்க மாநில அரசு நிறுவனமான இதற்கும் சென்னைப்பல்கழகத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் இச் சுவடி நூலகத்திற்கு இடம் தரவேண்டும் என ஆணையிட்டு அதற்காக ஒரு தொகையையும் அப்போதைய ஆங்கில அரசு உத்தரவிட்டது.

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன.[1]

இந் நூலகம் ஆராய்ச்சிக் கருவூலமாகத் திகழ்வதைக் கருத்திற்கொண்டு முனைவர் சு.சௌந்தரபாண்டியனின் முயற்சியால் ’அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுத் தற்போது இப்பெயரிலேயே இது இயங்கிவருகிறது.

இம் மையத்தில் தற்போது தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாரசீகம், அரபு, உருது, சிங்களம் ஆகிய மொழிகளிற் சுவடிகள் உள்ளன. சுவடிகளில் ஓலைச்சுவடிகளும் தாட் சுவடிகளும் அடங்கும்.

காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்புக்களே இந் நூலகம் உருவாவதற்கு ஆதாரமாகும். இம்மையத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, தத்துவம், அறிவியல், வானியல் முதாலன பிரிவுகளைச் சேர்ந்த சுவடிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திர மாநில வரலாறுகளைக் கூறும் கைபீதுகளும் (Kaifyats) இருக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் - உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம்!". கட்டுரை. கல்வி மலர். 1 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2018. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு