ச. இராமதாசு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ச. இராமதாசு (Ramadoss, பிறப்பு: சூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார்.[1][2] இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் "அய்யா" என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றார்.
மருத்துவர் ச. இராமதாசு | |
---|---|
பிறப்பு | 25 சூலை 1939 கீழ்சிவிரி, விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம், தமிழ்நாடு |
கல்வி | மருத்துவம் |
பணி | அரசியல்வாதி, மருத்துவர் |
அறியப்படுவது | நிறுவனர் பாட்டாளி மக்கள் கட்சி |
அரசியல் கட்சி | ![]() ![]() |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சரசுவதி |
பிள்ளைகள் | ஸ்ரீகாந்தி, கவிதா, அன்புமணி ராமதாஸ் |
வரலாறு
இவர் 1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவிரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக் கவுண்டர், தாயார் நவநீத அம்மாள் ஆவார். இவர் உடன்பிறந்தோர் நான்கு பேர், ஒருவர் சகோதரி, மூவர் சகோதரர் ஆவர்.
கல்வியும் தொழிலும்
சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை மருத்துவம் கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார் இராமதாசு.[3]
1965 ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.[3]
1980இல் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
திருமணமும், குடும்பமும்
இவர் சரசுவதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஸ்ரீகாந்தி, கவிதா என இரண்டு மகள்களும், அன்புமணி என்னும் ஒரு மகனும் உள்ளனர்.
பணிகளும் பிறசேவைகளும்
- இவர் மது விலக்கிற்காகவும் தமிழக மக்களின் மீது திணிக்கப்படும் மது மற்றும் அதன் கேடுகளில் இருந்து விடுவிக்கவும் கடந்த 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்.
- தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக கல்வி வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.
- தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். இதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்.
- தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர்.
- பசுமைத் தாயகம் என்னும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ ‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ - ராமதாஸ் அறிவிப்பு, இந்து தமிழ் திசை, 10 ஏப்பிரல் 2025
- ↑ "From a sectarian leader, Ramadoss has come a long way". Rediff.com. Retrieved 2009-08-18.
- ↑ 3.0 3.1 ராணி, 14-2-2016, பக்கம் 34-35