இராமநாதபுரம் அரண்மனை

இராமநாதபுரம் அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரண்மனையில் இருந்துதான் சேதுபதிகள் சேது நாடு என அந்நாளில் அழைக்கப்பட்ட (தற்போதைய இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்) நிலப்பரப்பை தன்னுரிமை பெற்று ஆண்டு வந்தனர்.

இராமநாதபுரம் அரண்மனை, இராமலிங்க விலாசம்
இராமநாதபுரம் அரண்மனை - ஆங்கிலேயர் வரைந்த ஓவியம்

கடந்த 300 ஆண்டுகளுக்குமே மேலாக பெரிய மாற்றங்களுக்கு உட்படாமல் உள்ளது இந்த அரண்மனை. இதன் வளாகத்தில் இராமலிங்க விலாசம், சங்கர விலாசம், கௌரி விலாசம், அந்தப்புரம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப்பாதை, இராஜராஜஸ்வரி கோயில், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், சரசுவதி மகால் போன்றவை உள்ளன.

வரலாறு தொகு

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை நாயக்கர்கள் இராமேசுவரம் கடற்கரையைக் காக்கவும், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலிக்கு சென்றுவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் விரும்பினர். எனவே, இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள புகழூரை ஆண்ட ரெகுநாத சேதுபதி என்னும் சடைக்கத் தேவருக்கு பொ.ஊ. 1601ஆம் ஆண்டில் அப்பணியை நிறைவேற்றும் பொறுப்பை வழங்கினர். [1] சேதுவை பாதுகாப்பவர்கள் என்பதால் இந்த மரபினர் சேதுபதி என அழைக்கப்பட்டனர். இந்த மரபினர் மதுரை நாயக்கர்களின் கீழ்பட்டு இராமநாதபுரம் பகுதியை ஆண்டுவந்தனர். அடுத்தடுத்த தலைமுறைகளில் தங்களை வலுப்படுத்திக்கொண்ட சேதுமதி மன்னர்கள் மதுரை நாயக்கரின் மேலாண்மையில் இருந்து விடுபட்டு சுதந்திர ஆட்சியாளர்களாக மாறினர்.

 
ரெகுநாத கிழவன் சேதுபதி

கிழவன் சேதுபதிக்கு மேற்கிலிருந்து மதுரை நாயக்கர்களும், வடக்கில் தஞ்சாவூர் மராத்தியரும், தெற்கில் சாயல்குடி வட்டகை பாளையக்காரர்களும் தொல்லை தந்துவந்தனர். எனவே இவர் சேதுநாட்டின் தலைநகரை புகலூரில் இருந்து எட்டுகல் தொலைவில் பாண்டியர் கால மண்கோட்டையும், அக்கோட்டைக்குள் மன்னர் தங்கும் இடமும் இருந்த[2] இராமநாதபுரத்திற்கு மாற்றினர். அந்நகரைச் சுற்றி இருந்த மண்கோட்டையை அகற்றி, கருங்கல் கோட்டையைக் கட்டினார். [3] இக்கோட்டையானது 27 அடி உயரமும், 5 அடி அகலமும், 42 கொத்தளங்களும், இரண்டுகல் சுற்றுப் பரப்பளவு கொண்ட அகழியால் சூழப்பட்டு, கிழக்கு பக்கமாக ஒற்றை வாயிலைக் கொண்ட செவ்வக வடிவிலான கற்கோட்டையை அமைத்தார். அக்கோட்டைக்குள் இராமலிங்க விலாசம் என்னும் அரசவை மண்டபம் (தர்பார் மண்டபம்), ஆயுதக்கிடங்கு, குடியிருப்புக் கட்டிடங்கள், நிலவறை, தனியறைகள் [4] கெளரி விலாசம் என்னும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை ரெகுநாத கிழவன் சேதுபதி 1690க்கும் 1694க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டினார்.[5]

அதன்பிறகு பல போர்களைக் கண்ட கோட்டையும் அரண்மனையும் பெரியதாக எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை. 1772 சூன் 3 அன்று இக்கோட்டையை ஆங்கில தளபதியான ஜோசப் ஸ்மித் கைப்பற்றினார். தமிழ்நாட்டு பாளையக்காரர்களை ஒடுக்கிய ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியினர் பாளையக்காரர்களின் மறைவிடமாக மீண்டும் கோட்டைகள் மாறக்கூடாது என்று எண்ணி அவற்றை தகர்த்துவிட 19ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் முடிவு செய்தனர். அந்த முடிவின்படி 18031804 ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றி இருந்த கற்கோட்டை இடித்துத் தள்ளப்பட்டது. [3] அரண்மனையின் சில பகுதிகள் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. அழிக்கபட்ட கோட்டையின் தென் மேற்கு மூலையில் ஒன்பது பீரங்கிகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்ட கொத்தளம் மட்டும் கோட்டையின் எச்சமாக இன்று உள்ளது.[5]

நுழைவாயில் தொகு

இந்த நுழைவாயாலானது இராஜேஸ்வரி கோயிலுக்கு தெற்கே அரண்மனை திடலுக்கு மேற்கே அழண்மனையின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயில் செவ்வக வடிவில் நீண்டுயர்ந்துள்ளது. இந்த நுழைவாயில் கட்டடத்தை மறைக்கும் வகையில் கடைகள் வணிகவளாகங்கள் போன்றவை தற்போது உள்ளன. நுழைவு வாயிலில் உள்ள கட்டத்தில் சில அரசு அலுவலகங்கள் இயங்கிவருகின்றன.[5]

இராமலிங்க விலாசம் தொகு

இராமலிங்க விலாசம் என்பது சேதுபதி மன்னர்கள் கொலு வீற்றிருந்த அத்தானி மண்டபம் ஆகும். இது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சேதுபதி குடுப்பத்தினரின் சொத்தாக இது 1978ஆம் ஆண்டுவரை இருந்தது. அதன்பிறகு தமிழ்க தொல்லியில் துறையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. இதில் ஒரு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.[5]

சங்கர விலாசம் தொகு

அரண்மனையின் வடமேற்கு மூலையில் சங்கர விலாசம் அமைந்துள்ளது. இதை பாசுகர சேதுபதி தன் ஓய்வு மாளிகையாக பயன்படுத்தியுள்ளார். 1772ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் பிரதிந்தியாக நியமிக்கட்ட மார்டின் இந்த மாளிகையில் தங்கி இருந்தார். அதனால் இதை கர்னல் மாளிகை என்று மக்கள் அழைக்கின்றனர்.[5]

கௌரி விலாசம் தொகு

இராமலிங்க விலாசத்துக்கு எதிரே தென்வடலாக விருந்தினர் மாளிகையான கௌரி விலாசம் அமைந்துள்ளது. இதில் தற்போது கல்வி நிலையங்களும் வணிக வளாகங்களும் இயங்கிவருகின்றன.[5]

இராஜராஜஸ்வரி அம்மன் கோயில் தொகு

இராமலிங்க விலாசத்துக்குத் தெற்கே அரண்மணை வளாகத்தின் மையத்தில் இக்கோயில் உள்ளது. இந்த அம்மனை சேதுபதிகள் தங்கள் குலதெய்வமாக ஏற்று வழிபட்டு வந்துள்ளனர்.[5]

பிற கட்டங்கள் தொகு

இராமலிங்க விலாசத்துக்கும் இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ள பாதையைக் கடந்து சென்றால் ஆயுதக் கிடங்கு என்னும் செவ்வக கட்டிடம் உள்ளது. இதற்கு தெற்கே மணிவாயில் என்னும் கட்டிடம் உள்ளது. ஆயுதக் கிடங்குக்கு மேற்கே கல்யாண மண்டபமும் அதன் எதிரே சரசுவதி மகாலும் அமைந்துள்ளன. கல்யாண மண்டபத்துக்குத் தெற்கே மூன்று முற்றங்களையும் அவற்றை ஓட்டிய கட்டடங்களில் அந்தப்புரம் அரண்மனையின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ அரண்மனையின் பரப்பளவில் பதியளவு பரந்துள்ளது.[5]

தற்கால நிலை தொகு

இராமநாதபுரம் அரசுக் கல்லூரியும் இராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லூரியும் வெவ்வேறு காலகட்டங்களில் சிறிதுகாலம் இங்கே செயற்பட்டன. தற்பொழுது அரண்மனையின் முகப்புப் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. உள்ளே ஒருபகுதியில் சேதுபதி குடும்பத்தினர் வாழ்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

 
1784 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்


வெளி இணைப்பு தொகு

Jaishankar C., Ramnad Palace: well preserved building பரணிடப்பட்டது 2013-04-15 at the வந்தவழி இயந்திரம்

சான்றடைவு தொகு

  1. வேதாசலம் முனைவர் வெ., இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியில் துறை சென்னை, 2007, பக்.5
  2. வேதாசலம் முனைவர் வெ., இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியில் துறை சென்னை, 2007, பக்.7,8
  3. 3.0 3.1 வேதாசலம் முனைவர் வெ., இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகக் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியில் துறை சென்னை, 2007, பக்.8
  4. Jaishankar C., Ramnad Palace: well preserved building, The Hindu dated 2009/06/11
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 ராமநாதபுரம் அரண்மனை (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். பக். 181-187. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_அரண்மனை&oldid=3793464" இலிருந்து மீள்விக்கப்பட்டது