ச. பொன்னுத்துரை

(எஸ்.பொன்னுத்துரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (4 சூன் 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

ச. பொன்னுத்துரை
பிறப்புசண்முகம் பொன்னுத்துரை
(1932-06-04)4 சூன் 1932
நல்லூர், யாழ்ப்பாணம்
இறப்புநவம்பர் 26, 2014(2014-11-26) (அகவை 82)
சிட்னி, ஆத்திரேலியா
தேசியம்அவுஸ்திரேலியா
மற்ற பெயர்கள்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஆசிரியர், எழுத்தாளர்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

யாழ்ப்பாணம், நல்லூரில் சண்முகம் என்பவருக்குப் பிறந்த இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்துலகில் தொகு

தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.[1]

இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.[1] புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ. அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.[1]

சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.[1]

ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.

விருதுகள் தொகு

இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

படைப்புகள் தொகு

  • வீ (சிறுகதைகள்)
  • ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
  • தீ (நாவல்)
  • சடங்கு (நாவல்)
  • அப்பையா
  • எஸ்.பொ கதைகள்
  • கீதை நிழலில்
  • அப்பாவும் மகனும்
  • வலை + முள்
  • பூ
  • தேடல்
  • முறுவல்
  • இஸ்லாமும் தமிழும்
  • பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
  • மத்தாப்பு + சதுரங்கம்
  • ?
  • நனவிடை தோய்தல்
  • நீலாவணன் நினைவுகள்
  • இனி ஒரு விதி செய்வோம்
  • வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
  • ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
  • மாயினி
  • மணிமகுடம்
  • தீதும் நன்றும்
  • காந்தீயக் கதைகள்
  • காந்தி தரிசனம்
  • மகாவம்ச (மொழிபெயர்ப்பு)

மறைவு தொகு

எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்[2]. இவரது ஒரு மகன் ஈழப்போரின் போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த விடுதலைப் புலிப் போராளி ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 முருகபூபதி, லெ. (26 நவம்பர் 2014). "சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ". பதிவுகள். Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2014.
  2. "Es Po passes away in Australia". தமிழ்நெட். 26 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._பொன்னுத்துரை&oldid=3586805" இலிருந்து மீள்விக்கப்பட்டது