ஒசூர் வட்டச்சாலை

ஒசூர் வட்டச்சாலை என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் நகரின் வட்டச்சாலையைக் குறிப்பதாகும். ஒசூரில் ஏற்கனவே உள் வட்டச்சாலை அமைந்துள்ளது. வெளி வட்டச்சாலை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒசூர் உள் வட்டச்சாலை
ஒசூர் உள்வட்டச்சாலையின் ஒரு பகுதி

உள் வட்டச்சாலை தொகு

ஒசூர் நகரில் உள்ளவட்டச் சாலையை ஒசூர் சீதாராம் நகரில் கன்னியாகுமரி - வாரனாசி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி இராயக்கோட்டை சாலை, தொடர்வண்டி நிலைய சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை ஆகியவற்றை இணைத்தவாறு ஈஎஸ்ஐ மருத்துவமனையருகில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணையுமாறு இச்சாலை உள்ளது. இச்சாலையை அமைக்க 1990 களின் துவக்கத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கி நடந்துவந்த நிலையில் நிதிப்பற்றாக்குறையால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. 2010 களின் துவக்கத்தில் மீண்டும் பணிகளைத் துவக்கி இரண்டு கட்டங்களாக 2014 இல் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.[1] இந்தச் சாலையால் இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் வாகனங்கள் ஒசூர் நகரினுள் நுழையாமல் செல்ல இயலும்.

வெளி வட்டச்சாலை தொகு

ஒசூர் நகரில் இருந்து இருந்து கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதிகளுக்குச் செல்லவும், தமிழகத்தின் பாகலூர், பேரிகை போன்ற பகுதிகளுக்குச் செல்லவும் பாகலூர் சாலை என்னும் ஒரேயொரு பாதை மட்டுமே உள்ளது. அதுவும் ஒசூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ளதால் எந்த நேரமும் இப்பகுதி போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் நிலையுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சூசூவாடி முதல், பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வரை 18.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படும் எனவும், இச்சாலை ஒசூர் வட்டம் சூசூவாடி, அனுமப்பள்ளி அக்ரகாரம், பேகேப்பள்ளி, நல்லூர், எலுவப்பள்ளி, ஆவலப்பள்ளி, கெலவரப்பள்ளி, சின்னகுள்ளு, பெத்தகுள்ளு, மோரனப்பள்ளி ஆலூர் ஆகிய 11 கிராமங்களின் வழியாக அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைப் பணிக்காக 60.16 ஹெக்டேர் அளவுக்கு நில எடுப்புப் பணிகள் 215 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.[2] இந்த வெளிவட்ட சாலை திட்டத்தினால் ஓசூர் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவது மட்டுமல்லாது, மேற்கண்ட இந்த கிராமங்களின் நிலமதிப்பு உயரும் எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "ஓசூர் ரிங்ரோடு பணியில் அலட்சியம்! விபத்து ஏற்படும் அபாயத்தால் பீதி". தினமலர். 31 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016.
  2. "சென்னை 'பெரிய வட்டச்சாலை' அமைக்கும் சாத்தியக்கூறு ஆய்வு: முதல்வர் ஜெயலலிதா தகவல்". மக்கள் குரல். 12 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசூர்_வட்டச்சாலை&oldid=3576802" இலிருந்து மீள்விக்கப்பட்டது