ஒட்டகப்புலம்

ஒட்டகப்புலம், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்.[1] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியின் இருபுறமும், வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடையில் உள்ளது. எலும்பு முறிவு தொடர்பான உள்ளூர் மருத்துவத்துக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெயர் பெற்ற இவ்வூரின் மக்களில் மிகப் பெரும்பாலானோர் ரோமன் கத்தோலிக்கர் ஆவர்.

வரலாறு தொகு

இந்த ஊர் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் உருவானதாகத் தெரிகிறது. வசாவிளான் கோயிற்பற்றைச் சேர்ந்த வடமூலை என்னும் ஊரில் இருந்து வந்த சில குடும்பங்கள் இபகுதியில் முதன் முதலாகக் குடியேறி இந்தக் குடியேற்றத்தை உருவாக்கின. காலப்போக்கில் இது வளர்ந்து 1980களில் ஏறத்தாழ 125 குடும்பங்களைக் கொண்ட ஒரு ஊராக இருந்தது. 2009 வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் இவ்வூரும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1990ல் பலாலி இராணுவ முகாமைச் சுற்றியிருந்த பகுதிகளை அரசாங்கப் படைகள் கைப்பற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியபோது ஒட்டகப்புலமும் அதற்குள் அடங்கியது. மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

நிறுவனங்கள் தொகு

இவ்வூரில் அமல உற்பவ மாதா தேவாலயம் பெயர்பெற்றது. போர்க் காலத்தில் பெரும் சேதத்துக்கு உள்ளான இது, 2010ல் திருத்தப்பட்டது. மக்களுடைய நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படாவிட்டாலும், இத்தேவாலயம் மக்களுடைய பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டகப்புலம்&oldid=2854173" இலிருந்து மீள்விக்கப்பட்டது