காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர். பல்லவர்களோடு தொடர்புடைய இவர்கள் கடலூர் பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.

முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பலக் கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள். பல்லவமல்லன் என்றழைக்கப்பட்ட நந்திவர்மன் II 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான்.

காடவராயர் என்பது கள்ளர் சாதியின் குடும்பப்பெயர்களில் ஒன்றாகும்.[1][2]

வளர்ச்சி

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி

காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் பார்க்க

உசாத்துணை

  1. K. S. Singh,p.1386 (1919). Communities, Segments, Synonyms, Surnames and Titles. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-563357-3. https://books.google.com/books?id=bfAMAQAAMAAJ&pg=PA1386. 
  2. Vinaitheerthan Karuppaiyan,p.154 (1990). Kinship and Polity: A Study in Socio-political Organization. https://books.google.com/books?id=sRZuAAAAMAAJ&q=kadavarayar+kallar. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடவர்&oldid=3889974" இலிருந்து மீள்விக்கப்பட்டது