காடவராயர்கள்

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய குறுநில மன்னர்கள் சேந்தமங்கலத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் தங்களை பல்லவர் வழி வந்தவர்கள் என தங்களின் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.[1]

காடவராயர்களின் தோற்றம் தொகு

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய குறுநில மன்னர்களில் சேந்தமங்கலம் என்னும் பகுதிகளில் காணப்பட்ட காடவராயர்கள். அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நடுநாடு, திருமுனைப்பாடி நாடு எனும் பகுதிகளில் தற்போதைய விழுப்புரம்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றனர்.

சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி இவர்கள் பல்லவர்களின் வழி தோன்றல்கள் என்றும், வேறுசிலர் இவர்கள் வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டத்தின் கிழக்கு பகுதியைச் சார்ந்த பூர்வீக மக்கள் என்றும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கி.பி. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் ஆட்சி நடத்தினார்கள். பல்லவ குல கடைசி மன்னன் அபராசித வர்மனை முதலாம் ஆதித்த சோழன் போரில் தோற்கடித்து பல்லவப் போரரசிற்கு ஒரு முடிவு கட்டினான். சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் என்றும் சுயம்புவராயர்கள் திருவண்ணாமலையைத் தலைநகராமாக வைத்து ஆட்சி புரிந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தை தலைநகராக வைத்து ஆட்சி புரிந்தனர். இவர்கள் இருவரும் சோழர்களின் மேலாதிக்கத்தின் கீழ் சிறு அதிகாரிகளாகவும், அரசியலில் வேலை ஆட்களாகவும் இருந்து வந்தனர்.

காடவர்கள் அரசை நிறுவுதல் தொகு

கி.பி.12 நூற்றாண்டின் தொடக்கத்தில்கெடிலம் நதியின் தென்கரையில் உள்ள திருமாணிக்குழி வட்டாரத்தில் வளந்தனார் என்ற காடவராயர், சோழரின் ஆணையராய் ஆட்சி நடத்திவந்தார். அவரையடுத்து அவர் வழியைச் சேர்ந்தவர்களான ஆட்கொல்லி அரசநாராயணன் கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப்படும் மணவாளப் பெருமாள் ஆகியோர் சோழர்களின் கீழ் ஆணை செலுத்தி வந்தனர்” அவர் வம்சத்தவரின் கல்வெட்டுகள் விருத்தாசலம்[2] , திருவெண்ணெய்நல்லூர் [3] ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் காணப்படுகின்றன.

வீரசேகரின் வழியில் வந்த காடவ அரசன் மணவாளப் பெருமாள் என்றழைக்கப்படும் காடவராயன் கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை வட்டம் அருகே பாயும் கெடிலம் நதிக்கு, தென் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனக்கெனத் தனி நாட்டை உருவாக்கினான். சேந்தமங்கலத்தில் அவன் பெயரிலேயே வாணிலைக் கண்டேசுவரம் (கூடல் ஏழிசை மோகனான மணவாளப் பெருமாள் வாணிலைக் கண்டனான் காடவராயன்) என்ற சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். காடவராயர்களில் இவன் சிறந்த வீரனாக விளங்கியதால் சோழ மன்னர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனி அரசு அமைத்தான்.

மேலும் காடவகுல மன்னன் மணவாளப் பெருமாள் தன்னுடைய தலைநகரை கி.பி.1195ல் தோற்றுவித்தான் என்று அவனது 5ம் ஆம் ஆண்டு கல்வெட்டுக் கூறுகிறது.[4] இதை 1995 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் சேந்தமங்கலத்தில் நடத்திய தொல்பொருள் ஆய்வின் மூலம் கிடைத்த சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. மணவாளப் பெருமாள் என்ற காடவராயனுக்குப் பிறகு அவனது மகனான கோப்பெருஞ்சிங்கன் என்ற காடவ அரசன் ஆட்சிக்கு வந்தார்.

கோப்பெருஞ்சிங்கன் என்ற காடவ அரசர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. வரலாற்று ஆசிரியர் வேங்கட சுப்பையர் கூற்றப்படி காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் என்றும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்றும் கூறுகிறார். ஆனால் இவரின் கருத்தை கோப்பெருஞ்சிங்கன் என்ற வரலாற்று நூலை எழுதிய எஸ்.ஆர். சுப்பிரமணியம் மறுத்துக்கூறி மணவாளப் பெருமாளுக்குப் பின் அவரது மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்கு வந்தார் என்றும், அதன்பின் இவரது காடவகுமரன் ஆட்சிக்கு வந்தார் என்றும் திருவண்ணாமலைக் கல்வெட்டுச் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு எடுத்துரைக்கின்றார்.

சோழ வரலாறு என்ற நூலை எழுதிய வரலாற்று ஆசிரியர் கே.கே. அவர்கள் கூற்றுப்படி கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை ஆட்சிபுரிந்தான் என்று கூறுவதன் மூலம் கோப்பெருஞ்சிங்கன் என்பவனாக இருக்கக்கூடும் எனக் கருதலாம். மேலும் இந்த காலத்தில்தான் மூன்றாம் ராஜராஜசோழனை தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்து தன்னுடைய தலைநகரான சேந்தமங்கலத்தில் சிறைச் செய்தான் இதிலிருந்து இவனே, சேந்தமங்கலத்தை ஆட்சி செய்த காடவராய கோப்பெருஞ்சிங்கன் எனக் கூறலாம்.

 
கோட்டை அரண் சுவர்

கோப்பெருஞ்சிங்கனின் போர்ச் செயல் தொகு

மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் குறு நில மன்னனாக விளங்கிய முதலாம் கோப்பெருஞ்சிங்கன் வீரமும் சூழ்ச்சியும் மிக்கவன்.பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் கி.பி 1231ல் நடந்த யுத்தத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் இராஜராஜ சோழனை வென்று முடிகொண்ட சோழபுரத்தில் வெற்றிவிழா கொண்டாடினான்.தோல்வியுற்ற மூன்றாம் இராஜராஜ சோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231 ல் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து மூன்றாம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான். மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மற்றும் சகல வித்யா சக்ரவர்த்தியினுடைய கத்யகர்ணாமிர்தம் மூலம் அறியலாம்.[5] [6]மீண்டும் மூன்றாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான்.மீண்டும் கி.பி 1253 ல் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான்.கி.பி 1255 ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டான்.இதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.ஆனால் கி.பி 1279ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழ நாடு,திருமுனைப்பாடி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது.அவனோடு காடர்குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

காடவராயர்களின் ஆட்சி எல்லை தொகு

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து, காவிரிக்கரை வரை என ஆட்சியைப் பரப்பி ஆட்சிபுரிந்து வந்தனர். கி.பி.1279ல் வீழ்ச்சியடைந்தது.

காடவராயர்களின் நிர்வாகமுறை = தொகு

ஊர், நகரம், நாடு முதலிய பல பகுதிகளும் செவ்வனே ஆளப்பட்டு வந்தன. இப்பகுதியில் சுய ஆட்சி முறையே கையாளப்பட்டது. பெருங்குறி என்ற பொது மக்கள் சபையும், ஆளும் கணத்தார் என்ற நிர்வாகக் குழுவும் நிர்வாகத்தை நடத்திவந்தன.

 
காடவராயர்களின் கோவில்

நாணயங்களும் அளவை முறைகளும் தொகு

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கழஞ்சு, காசு, மாடை, நெல்லூர், மாடை முதலிய பல நாணயங்கள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன.

சேந்தமங்கலம் கோட்டை கோயில் தொகு

 
குதிரை வடிவ இசைச் சிற்பம்

சேந்தமங்கலம் கோட்டை கோயில் கட்டடக் கலையில் ஒருப்புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தன்ர்.கோயில் திருச்சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மற்றுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்பட்டுள்ளது.கோயில் கோட்டையைச் சுற்றி அகழியுண்டு.இக்கோட்டையிலுள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கி கெடிலம் நதியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இக்கோயிலில் பல்வேறு வகைச் சிற்பங்களும்,கோயில் சாளரங்கள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். கோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு காணப்படுகிறது. இந்தக் கோட்டைக் கோயிலின் மேற்கே நீராழிக் குளம் என்ற பெயருடைய ஒரு குளமும் உள்ளது. இக்குளத்தின் நீர் சிவனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்படிருக்கிறது. இக்குளத்தின் வடகரையில் இரண்டு குதிரைச் சிலைகள் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கின்றன. இக்குதிரைகள் இசைச் சிற்பமாகும். இக்குதிரையின் ஒவ்வொரு பாகத்திலும் தட்டிப்பார்க்கும்போது பல்வேறு இசைகளை தருவது இதன் சிறப்பாகும்.

 
கோவிலின் உள்தோற்றம்

வாணிலைக் கண்டேசுவரம் ஆலயம் தொகு

 
வாணிலைக் கண்டேசுவரம் ஆலயம்

சேந்தமங்கலத்தில்வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவில் ஒன்றைக் கட்டினார். இக்கோயிலிலுள்ள சிவன் ஆபத்தசகாயேசுவரர் என அழைக்கப்படுகிறார். அதன் அருகிலேயே திருக்காமக்கோட்ட நாச்சியார் திருச்சன்னதியும் உருவாக்கினார்.

காடவராயர்களின் சமய நிலை தொகு

வைணவம் தொகு

திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில், ஏழிசைமோகன் மணவாளப் பெருமாலின் மனைவி, அழகியப்பல்லவ விண்ணகர் எம்பெருமான் கோயிலை எடுப்பித்தார் என்று கல்வெட்டு கூறுகிறது.[7] [8] அக்கோயில் கலனாகிவிட்ட காரணத்தால் மீண்டும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் மீண்டும் கோயில் அமைத்துள்ளான் எனக் கல்வெட்டு கூறுகிரது. இக்கோயில் வைகுந்த பெருமாள் கோயில் என்றும் அழகிய பல்லவ விண்ணகரம் என்றும் அழைக்கப்படுகின்றது.[9]

சமணம் தொகு

உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள திருநறுங்கொண்டை என்ற ஊரில் அமைந்துள்ள பார்சுவப் பெருமான் கோயிலுக்கு ஆளப்பிறந்தான் மோகன், வீரசேகர காடவராயர் கூடல் ஆளப்பிறந்தான் மோகன் கச்சிராயன் என்ற காடவராய மன்னர்கள் தான தருமங்களை செய்துள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. காடவர் வன்னியர் வரலாறு நடன.காசிநாதன்,வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம் பக்கம்:7
  2. S.I.I. Vol XII, No.263 (A.R.E 74 of 1918)
  3. Ibid,No.264 (A.R.E 463 of 1921)
  4. A.R.E 480/1902
  5. Epi.Indica,Vol.VII,160 ff
  6. காடவர் வன்னியர் வரலாறு நடன.காசிநாதன்,வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம் பக்கம்:52
  7. A.R.E 484/1921
  8. A.R.E 487/1921
  9. காடவர் வன்னியர் வரலாறு நடன.காசிநாதன்,வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம் பக்கம்:32
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடவராயர்கள்&oldid=3892948" இலிருந்து மீள்விக்கப்பட்டது