சிங்கராயர் தாவீது

கலாநிதி தாவீது அடிகள் என அழைக்கப்படும் வண. சிங்கராயர் தாவீது (சூன் 28, 1907 - சூன் 2, 1981) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர்.

தாவீது அடிகள்
பிறப்புசிங்கராயர் தாவீது
(1907-06-28)சூன் 28, 1907
தும்பளை, யாழ்ப்பாணம்
இறப்புசூன் 2, 1981(1981-06-02) (அகவை 73)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுதமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

யாழ்ப்பாணம் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவீது அடிகள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்று பின்னர் லண்டன் மெட்ரிக்குலேஷன் சோதனையில் சித்தி அடைந்து அதன் பின் லண்டன் பல்கலைக்கழக இளங்கலைமாணிப் பரீட்சையில் தோற்றி சிறப்புத்தரத்தில் சித்தியடைந்தார்.[1].

புனித பேர்னாட் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அங்கு குருத்துவக் கல்வியை முடித்த பின் 1931 திசம்பர் 19 இல் கொழும்பு பேராயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு அப்போஸ்தரிக்க பணியாளனாக குருத்துவப் பணியை ஆரம்பித்தார். தன் தந்தையார் படிப்பித்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிலேயே 1936 தொடக்கம் 1967 ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]

தமிழாய்வு தொகு

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் உந்துதலால் சமஸ்கிருத மொழியைக் கற்று புலமை அடைந்து அதில் முதுகலைமாணிப் பட்டத்தினை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கீழைத்தேசத்தில் முக்கியமாக வாழும் மொழிகளையும் மேலைத்தேசத்தில் முக்கிய வாழும் மொழிகளையும் கற்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியை மையமாக வைத்து மற்றைய மொழிகளோடு ஒப்பீடு ஆய்வு செய்து, சுவாமி ஞானப்பிரகாசர் ஆரம்பித்து வைத்த ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளைப் பின்பற்றி தானும் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் பல பாகங்களாக வெளியிட்டுள்ளார். அவற்றை விடத் தனி நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று "We stand for...' என்பதாகும்.[1]

மறைவு தொகு

ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தன் வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் தான் கற்பித்த பத்திரியார் கல்லூரியிலேயே மேல்மாடியில் ஓர் அறையில் தங்கி இருந்தார். 1981 மே 31-சூன் 1 நள்ளிரவில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற பின் அடிகளார் உறக்கத்திற்குச் சென்றார். நித்திரைக்குச் சென்ற அவர் அடுத்தநாள் 1981 சூன் 2 விடியற்காலை காலமானார். நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியினாலேயே அடிகளார் உயிர் நீத்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 யாழ்.பொதுநூலகம் தீயில் பொசுங்கிய செய்தி எமனாக வந்து பறித்துச் சென்ற அடிகளாரின் உயிர்[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், சூன் 9, 2011, பார்த்த நாள்: சூன் 11, 2011

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கராயர்_தாவீது&oldid=3367280" இலிருந்து மீள்விக்கப்பட்டது