அமரகோசம், அமரசிம்மன் எனும் சமசுகிருத அறிஞர் இயற்றிய சமசுகிருத மொழி அகராதியாகும். அமரகோசம் என்பது அழிவில்லாத புத்தகம் என்பது பொருளாகும். 'அமரம்' என்றால் அழிவு இல்லாதது. 'கோசம்' என்றால் புத்தகம் என்று புரிந்து கொள்ளலாம். அமரகோசம் அகராதியை தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தார் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். [1]

தற்கால அமரகோச நூலின் அட்டைப் படம்

இதற்கு நாமலிங்கானுசாசனம் என்ற பெயரும் உண்டு. இது அமரசிம்மன் என்கிற பௌத்த மன்னனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அகராதிகள் என்று பார்த்தால் மிகப் பழமையானதும் இந்தியாவில் தோன்றிய மதங்களைச் சேர்ந்த, எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட சமஸ்கிருத நூல் இந்த அமரகோசம் ஆகும். சமஸ்கிருதத்தில், ஒரு வார்த்தைக்கு ஈடான மற்ற வார்த்தைகளையும் தரும் நூல் இது.

ஆங்கிலத்தில் தெசாரஸ் (Thesaurus) உருவாக்கிய பி.எம்.ரோகெக் (P.M. Roget) அமரகோசத்தைக் குறிப்பிடுவதால், இந்த நூல் ஆங்கில தெசாரஸ் உருவாக ஒரு தாக்கமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது. [2]

நூலின் அமைப்பு தொகு

அமரகோசம் என்ற இந்நூலானது, வடமொழியில் 'அனுஷ்டுப்' சந்தத்தில் இயற்றப் பட்டுள்ளது. மொத்தம் 1608 ஸ்லோக வரிகள் உள்ளன. அவ்வரிகள் மொத்தமாக, 11580 சொற்களால் உருவாக்கப் பட்டுள்ளன. இந்நூலின், ஒரு சொல்லை எடுத்தால் அதற்கு ஈடான வேறு பல சொற்களையும் (synonyms – பர்யாய சப்தம்), ஒரு சொல்லுக்குரிய பல்வேறு பொருட்களையும் (நாநார்த்த சப்தம்) தருவது, இதன் சிறப்பாக கருதப்படுகிறது. இவற்றில் திரும்ப திரும்ப இடம்பெற்ற சொற்களைத் தவிர்த்தாலும், மொத்தம் 9031 சொற்கள் உள்ளன. இந்நூல் மூன்று பிரிவுகளாகப் (காண்டங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன.

  1. பிரதம காண்டம் – 2465 சொற்கள்
  2. துவிதிய காண்டம் – 5827 சொற்கள்
  3. திருதிய காண்டம் – 3288 சொற்கள்

உட்பிரிவுகள் தொகு

ஒவ்வொரு காண்டமும், பல உட்பிரிவுகளாக (வர்க்கங்கள்) கீழ்கண்டவாறு தொகுக்கப் பட்டுள்ளது.

  • ஸ்வர்க³ வர்க்கம் (ஸ்வர்கத்தில் இருப்பவற்றின் பெயர்கள்)
  • வ்யோம வர்க்கம் (ஆகாயம்)
  • தி³க்³ வர்க்கம் (திசைகள்)
  • காலவர்க்கம் (காலம்)
  • தீ⁴ வர்க்கம் (அறிவு/ஞானம்)
  • சப்த வர்க்கம் (ஓசை, இசை)
  • நாட்ய வர்க்கம் (நாடகம்)
  • பாதாளபோகி வர்க்கம் (பாதாள உலகம்)
  • நரக வர்க்கம் (நரகம்)
  • வாரி வர்க்கம் (நீர்)
  • பூமி வர்க்கம் (பூமி)
  • புரவர்க்கம் (நகரங்கள், ஊர்கள்)
  • சைல வர்க்கம் (மலைகள்)
  • வநௌஷதி வர்க்கம் (காடு, மூலிகைகள்)
  • சிம்ஹ வர்க்கம் (மிருகங்கள்)
  • மனுஷ்ய வர்க்கம் (மனிதர்கள்)
  • பிரம்ம வர்க்கம் (மனிதர்கள்)
  • க்ஷத்ரிய வர்க்கம் (மனிதர்கள்)
  • வைஸ்ய வர்க்கம் (மனிதர்கள்)
  • சூத்ர வர்க்கம் (மனிதர்கள்)
  • விசேஷ்யநிக்ன வர்க்கம்
  • சம்கீர்ணவர்க்கம் (மற்றவை)
  • நாநார்த்த வர்க்கம் (ஒரே சொல்லுக்கு ஈடான பல சொற்கள்)
  • அவ்யய வர்க்கம்
  • லிங்காதி சங்கிரக வர்க்கம் (ஆண்பால்/பெண்பால்)

இதன் தழுவல்களும், மொழிபெயர்ப்புகளும் தொகு

பொருள் செறிவு நெரிந்த இந்நூலுக்கு, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு அறிஞர்கள், விளக்க உரைகள் எழுதி உள்ளனர். அமரகோசத்திற்கு கிட்டத்தட்ட அறுபது உரைகள் எழுதப்பட்டுள்ளன. இது தவிர சீனம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டு உரைகள் எழுதப்பட்டுள்ளன.கி.பி. 1700 ஆம் ஆண்டு காலத்தில் ஈசுவர பாரதி என்பவரால் அமரகோசம் தமிழில் “பல்பொருட் சூடாமணி” என்னும் பெயரில் தமிழ் விருத்தப் பாக்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழறிஞர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின், “நிகண்டு சொற்பொருட்கோவை” என்னும் நூலின் மூலம் தெரியவருகிறது. இது தவிர லிங்கய்ய சூரியின், லிங்க பட்டீயம் என்கிற அமரகோச உரையைத் தழுவி, திருவேங்கடாசாரி கி.பி. 1915 வருடத்தில், கிரந்த எழுத்தில் சமஸ்க்ருதமும், தமிழும் கலந்து ஒரு நூலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆண்டு, தஞ்சை சரசுவதிமகால் நூலகம், இந்த அமரகோசத்தை எளிய தமிழில், பொருளுடன் பதிப்பித்து உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. அமரகோசம், தமிழ் மொழிபெயர்ப்பு நூல்
  2. http://ir.nul.nagoya-u.ac.jp/jspui/bitstream/2237/19194/1/5_SAMBHASA-16.pdf

உயவுத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரகோசம்&oldid=3919074" இலிருந்து மீள்விக்கப்பட்டது