ஜான்சி கோட்டை

ஜான்சியில் உள்ள கோட்டை

ஜான்சி கோட்டை அல்லது ஜான்சி கா கிலா வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பங்கிரா என்ற பெரிய மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இது 11 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை பல்வந்த் நகரில் உள்ள சந்தேல மன்னர்களின் கோட்டையாக செயல்பட்டது.

எப்படி அடைவது தொகு

ஜான்சி நகரத்தின் நடுவில் ஜான்சி கோட்டை அமைந்துள்ளது. இது ஜான்சி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் குவாலியர் ஜான்சியிலிருந்து 103 கி.மீ. [1] தொலைவில் உள்ளது. ஜான்சி அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தில் இறங்கி கோட்டையை அடையலாம். [2]

வரலாறு தொகு

ஜான்சி கோட்டையின் கட்டுமானம் 1613 ஆம் ஆண்டில் பண்டேலா ராசபுத்திர தலைவர் மற்றும் ஓர்ச்சா வீர் சிங் ஜு தியோ பண்டேலா ராச்சியத்தின் ஆட்சியாளருக்கு உரியது என கூறப்படுகிறது. இது பண்டேலர்களின் கோட்டைகளில் ஒன்றாகும். 1728 இல் முகலாய மன்னர் முகமது கான் பங்காஷ், மகாராஜா சத்ராசலைத் தாக்கினார். பேஷ்வா பாஜிராவ் [3] முகலாய இராணுவத்தை தோற்கடிக்க மகாராஜா சத்ராசலுக்கு உதவினார். நன்றியுணர்வின் அடையாளமாக, மகாராஜா சத்ராசல் ஜான்சி உட்பட, தனது மாநிலத்தின் ஒரு பகுதியை, பேஷ்வா பாஜிராவ்க்கு வழங்கினார். 1742 ஆம் ஆண்டில் நரோசங்கர் ஜான்சியின் சுபேதாராக நியமிக்கப்பட்டார். அவர் தனது 15 ஆண்டு காலப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜான்சி கோட்டையை மட்டுமல்லாமல், மற்ற கட்டிடங்களையும் கட்டினார். 1757 ஆம் ஆண்டில், நரோசங்கரை பேஷ்வா திரும்ப அழைத்த பிறகு, மாதவ் கோவிந்த் ககிர்தே, பாபுலால் கனாஹாய் ஆகியோர் ஜான்சியின் துணைத் தலைவர்களாக இருந்தனர். 1766 முதல் 1769 வரை விஸ்வாஸ் ராவ் லட்சுமன் ஜான்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் ரகுநாத் ராவ் நெவல்கர் ஜான்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் மிகவும் திறமையான நிர்வாகியாக இருந்தார். மாநிலத்தின் வருவாயை அதிகரித்தார். மேலும் மகாலட்சுமி கோயில் மற்றும் ரகுநாத் கோயில் இரண்டையும் கட்டினார்.

சிவராவ் இறந்த பிறகு அவரது பேரன் ராம்சந்திர ராவ் ஜான்சியின் துணைத் தலைவரானார். அவர் ஜான்சியை மோசமாக நிர்வகித்தார். அவரது பதவிக்காலம் 1835 இல் அவரது மரணத்துடன் முடிந்தது. அவரது வாரிசான மூன்றாம் ரகுநாத் ராவ் 1838 இல் இறந்தார். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கங்காதர் ராவை ஜான்சியின் ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். மூன்றாம் ரகுநாத் ராவின் திறமையற்ற நிர்வாகம் ஜான்சியை மிகவும் மோசமான நிதி நிலையில் வைத்தது.

இருப்பினும், அவருக்குப் பிறகு ராஜா கங்காதர் ராவ், மிகச் சிறந்த நிர்வாகியாக இருந்தார். அவர் மிகவும் தாராளமாகவும், மற்றவர்களை ஈர்ப்பவராக இருந்ததால், ஜான்சியின் உள்ளூர் மக்கள் திருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. 1842 ஆம் ஆண்டில் ராஜா கங்காதர் ராவ், மணிகர்னிகா தம்பேவை மணந்தார், அவருக்கு லட்சுமி பாய் என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது. அவர் 1851 ஆம் ஆண்டில் தாமோதர் ராவ் என்ற ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாமோதர் ராவ் நான்கு மாதங்களுக்குப் பிறகு இறந்தார். [4] மகாராஜா கங்காதர் ராவ் இறப்பதற்கு முன்னர், உறவினரான கமாதர் ராவின் மகன் ஆனந்த் ராவ் என்ற குழந்தையை மகாராஜா தாமோதர் ராவ் என்று பெயர் மாற்றி தத்தெடுத்தார். தத்தெடுப்புக்கு பின்னர் பிரித்தானிய அரசியல் அதிகாரிக்கு, மகாராஜாவிடம் இருந்து ஒரு கடிதம் வழங்கப்பட்டது. அதில் குழந்தையை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், ஜான்சியின் அரசாங்கம் அவரது மனைவிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நவம்பர் 1853 இல் மகாராஜாவின் மரணத்திற்குப் பிறகு, தாமோதர் ராவ் (பிறப்பு ஆனந்த் ராவ்) ஏற்றுக்கொள்ளப்பட்டதால், கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவின் கீழ் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், அவகாசியிலிக் கொள்கையினைப் பயன்படுத்தி, தாமோதர் ராவின் அரியணைக்கான கூற்றை நிராகரித்து, ஜான்சியின் பிரதேசங்களை இணைத்தது மாநிலம் ஆக்கியது. மார்ச் 1854 இல், லட்சுமிபாய்க்கு ஆண்டு ஓய்வூதியம் ரூ. 60,000 வழங்கி அரண்மனை மற்றும் கோட்டையை விட்டு வெளியேற உத்தரவிட்டது. ஜூன் 1857 இல் கிளர்ச்சி வெடித்தது, லட்சுமிபாய் கோட்டையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார் மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக ஜான்சி படைகளை வழிநடத்தினார். [5]

மார்ச் மற்றும் ஏப்ரல் 1858 இல் ஜெனரல் ஹக் ரோஸின் நிறுவனப் படைகளால் ஜான்சி முற்றுகையிடப்பட்டு 1858 ஏப்ரல் 4 இல் கைப்பற்றப்பட்டது. இராணி லட்சுமி பாய் தைரியமாக போராடி ரோஸின் துருப்புக்களால் நகரம் கொள்ளையடிக்கப்படுவதற்கு முன்பு கோட்டையிலிருந்து குதிரையில் துணிச்சலாக தப்பினார். [5] [6] [7]

1861 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு ஜான்சி கோட்டையையும் ஜான்சி நகரத்தையும் குவாலியரின் மகாராஜாவான ஜியாஜி ராவ் சிந்தியாவுக்கு வழங்கியது, ஆனால் ஆங்கிலேயர்கள் ஜான்சியை குவாலியர் மாநிலத்திலிருந்து 1868 இல் திரும்ப எடுத்துக் கொண்டனர்.

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
  2. https://www.neotravellers.com/jhansi-fort-worth-a-visit/[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Baji Rao I
  4. "On Rani Lakshmibai's Birth Anniversary, Here Are Rare Facts About Queen Of Jhansi - News Nation". NewsNation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  5. 5.0 5.1 World, Republic. "PM Narendra Modi pays tributes to Rani Lakshmi Bai on her birth anniversary". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  6. Vishnubhat Godse has recorded what he knew of this in his Maza Praavas.
  7. "Rani Laxmi Bai Birth Anniversary: All you need to know about the queen who became an icon of the freedom struggle". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்சி_கோட்டை&oldid=3573074" இலிருந்து மீள்விக்கப்பட்டது