ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்

ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck, பிறப்பு: பெப்ரவரி 21, 1980) என்பவர் வாங்சுக் குடும்பத்தைச் சேர்ந்த பூட்டானின் டிரக் கியால்ப்போ என்று அழைக்கப்படும் ஐந்தாம் மன்னரும் அரசுத்தலைவரும் ஆவார்.[1] உலகிலேயே மிகவும் குறைந்த அகவையுடைய நாட்டுத் தலைவர் இவர் ஆவார். இவரின் தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக் 9 டிசம்பர் 2006இல் தனது பதவியினை இவருக்காகத் துறந்தார். வாங்சுக் குடும்பம் பூட்டானை ஆளத்தொடங்கியதன் நூறாம் ஆண்டும், நற்குறியுள்ள ஆடாகவும் கருதப்பட்ட 2008இல் இவருக்கு முடிசூட்டப்பட்டது.

ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
Jigme Khesar Namgyel Wangchuck
பூட்டானின் 5வது மன்னர்
King Jigme Khesar Namgyel Wangchuck (edit).jpg
ஆட்சிடிசம்பர் 14, 2006 – இற்றைவரை
முடிசூட்டு விழாநவம்பர் 6, 2008
முன்னிருந்தவர்ஜிக்மே சிங்கே வாங்சுக்
மரபுவாங்சுக் மாளிகை
தந்தைஜிக்மே சிங்கே வாங்சுக்
தாய்த்செரிங் யாங்டன்

குடும்பம்தொகு

கேசார், பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்கிற்கும்ம் அவரது மூன்றாவது மனைவிக்கும் பிறந்த மூத்த மகன் ஆவார். இவருக்கு ஒரு சகோதரியும், தகப்பனின் மற்றைய இரு மனைவிகளுக்கும் பிறந்த மேலும் நான்கு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். கேசார் தனது 31 ஆம் வயதில் 2011 ஒக்டோபர் 13 ஆம் நாள் ஜெட்சுன் பெமா என்பவரைத் திருமணம் புரிந்தார்.

கல்விதொகு

ஆரம்பக் கல்வியை பூட்டானில் கற்ற கேசர் உயர் கல்வியை ஐக்கிய அமெரிக்காவிலும், பட்டப்படிப்பை ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்றார். அரசியலில் பட்டப்பின்படிப்பும் பெற்றார் [2].

முடிசூடல்தொகு

டிசம்பர் 2005 இல் மன்னர் சிங்கே தான் பதவி விலகிக் கொண்டு தனது மூத்த மகனான கேசரை 2008 இல் மன்னராக்க முடிவு செய்து அறிவித்தார். அதன் படி தனது அதிகாரங்கள் பலவற்றை மகனுக்கு மாற்றி நாட்டில் ஜனநாயக ஆட்சியை அறிமுகப்படுத்தினார்[3]. 2006 டிசம்பர் 14 இல் தனது பதவியைத் துறந்து ஜிக்மே கேசரை மன்னராக்கினார்[4]. மார்ச் 2008 இல் அங்கு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

நவம்பர் 6 2008 இல் அதிகாரபூர்வமாக முடிசூடும் நிகழ்வு திம்புவில் உள்ள தங்க அரண்மனையில் நிகழ்ந்தது. இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு நவம்பர் 6 ஆம் திகதியே மிகச் சிறந்ததென சோதிடர்கள் கணித்துக் கொடுத்ததற்கமைய முடிசூட்டு விழா நடைபெற்றது.

முடிசூட்டு விழாவில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்[5]. புதிய மன்னர் முடிசூடியதைக் கொண்டாட நவம்பர் 6 முதல் ஒரு வாரத்துக்கு பூட்டானில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "Bhutan's new king committed to democracy". 2007-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. His Royal Highness Crown Prince Dasho Jigme Khesar Namgyal Wangchuck
  3. Bhutan king announces abdication
  4. Bhutanese king steps down early
  5. Lavish coronation for Bhutan king

வெளி இணைப்புகள்தொகு