டார்ட்டாக்ளியா

இத்தாலிய கணிதவியலாளர்

டார்ட்டாக்ளியா (Niccolò Fontana Tartaglia, 1499 - டிசம்பர் 13, 1557) வெனிசு, ப்ரெஸ்சியா ஆகிய இத்தாலிய நகரங்களில் கணித ஆசிரியராக இருந்தவர். எண் கணிதம், வடிவவியல், இயற்கணிதம் மூன்றிலும் பாடபுத்தகங்கள் எழுதியவர். அவை 1556 இலிருந்து 1560 வரையில் பல மறுபதிப்புகளைப் பார்த்தன.

டார்ட்டாக்ளியா
பிறப்புc. 1499
பிரேசியா மாகாணம்
இறப்பு13 திசம்பர் 1557 (அகவை 58)
வெனிசு
பணிகணிதவியலாளர்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்கணிதம்

வரலாற்றில் இடம் தொகு

 
General trattato de' numeri et misure, 1556

அக்காலத்தில், அதாவது, 15வது நூற்றாண்டின் நான்காவது பாகத்திலும் 16 வது நூற்றாண்டின் முற்பாதியிலும் முதன்முதல் கணித புத்தகங்கள் அச்சில் வரத் தொடங்கின. அதற்கு முன் கையால் எழுதப்பட்ட சில பிரதிகளே கையாளப்பட்டுவந்தன. பல ஆசிரியர்கள் தங்களுடைய நிறுவல்களை வெளியிட்டுவிடாமல் ரகசியமாகவே வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கணிதப் பிரச்சினைக்கு தீர்வுகள் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் சவால்கள் ஏற்றுக்கொண்டு பொது அரங்கில் விவாதிப்பது வழக்கம். தீர்வுகளை ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றால் அவர் அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்று சபதம் செய்துகொடுப்பதும் உண்டு.

அப்படித்தான் கார்டானோ (1501-1576) என்ற இன்னொரு இத்தாலியக் கணித இயலர் தன்னிடமிருந்து முப்படியச் சமன்பாட்டின் தீர்வைப் பெற்றதாகவும் ஆனால் அவருடைய Ars Magna என்ற நூலில் (1545 இல் நியூரென்பெர்க்கில் பிரசுரிக்கப்பட்டது) அதைப் பிரசுரித்து தான் கொடுத்த சொல்லையே மீறிவிட்டதாகவும், டார்ட்டாக்ளியா 1546 இல் வெனீஸ் நகரில் அச்சாகிய தன் நூலில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து இரு கணித ஆசிரியர்களுக்கும் நடந்த வாக்குவாதமும், தரக்குறைவான பேச்சுகளும் கணித வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாகி விட்டன. மேடைகளில் இதற்காக பட்டிமன்றங்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டார்ட்டாக்ளியாவுக்கு ப்ரெஸ்சியாவில் கிடைக்க இருந்த கணித ஆசிரியர் வேலையில் ஒரு கண் இருந்ததால் அதை மனதில் கொண்டு ஒரு பொதுச் சொற்போருக்கு ஒப்புக்கொண்டார். அச்சொற்போருக்கு கார்டானோ தன் மாணவரான ஃபெறாரியை அனுப்பி சொற்போரில் வென்றார். இருந்தும், இதன் காரணமாகவோ என்னவோ, சில காலம் கணிதப் பொது மக்கள் டார்ட்டாக்ளியாவைத் தான் அத்தீர்வின் உரிமையாளர் என்று மதித்து வந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல கார்டானோ தான் அதன் உரிமையாளர் என்று கணித உலகம் மதிக்கத் தொடங்கியது. எனினும் 20வது நூற்றாண்டில் எழுதப்பட்ட ,[1] நூலில் டார்ட்டாக்ளியாவை ஆதரித்து எழுதப்பட்டிருக்கிறதும் உண்மையே.

பெயர்க்காரணம் தொகு

டார்ட்டாக்ளியாவின் சொந்தப்பெயர் ஃபாண்ட்டானா (Fontana). அவர் 12வது வயதில் ஒரு பிரென்சு போர்வீரனால் அவருடைய தாடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு கத்திக்காயத்தால் அவருடைய பேச்சுத்திறனில் மாசு படிந்ததால், 'திக்குவாயன்' என்று பொருள் தரும் 'டார்ட்டாக்ளியா' என்ற பெயர் அவருக்கு நிலைத்து விட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Cajori: History of Mathematics. Macmillan. New York. 1919

துணை நூல்கள் தொகு

  • Paul J. Nahin. An Imaginary Tale: The story of  . Princeton University Press, New Jersey, 1998.pp. 14–16
  • Heinrich Tietze. Famous Problems of Mathematics. Graylock Press. Baltimore. 1965. pp. 214–215.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ட்டாக்ளியா&oldid=2733631" இலிருந்து மீள்விக்கப்பட்டது