தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உடல்நலத்தில் பல் மற்றும் வாய் தொடர்பான நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய பல் மருத்துவக் கல்லூரிகள், இக்கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கின்றன. இக்கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் 100 மாணவர் சேர்க்கைக்கான இடங்களுடைய அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம், தக்கவாடி, இளையாம்பாளையம் ஆகிய ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு, சென்னையிலுள்ள உத்தண்டி, குன்றத்தூர், வண்டலூர் ஆகிய இடங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம், கணபதி ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மேல்மருவத்தூர், பாடூர், நாவலூர், சின்ன கோளம்பாக்கம் ஆகிய இடங்களிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள நாகமங்கலம், மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை, கொடிக்குளம் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாண்டூர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாடநிலம் எனுமிடத்திலுமாக மொத்தம் 18 சுயநிதிக்கல்லூரிகள் உள்ளன.இந்த சுயநிதிக் கல்லூரிகளில் 1520 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசு கல்லூரியில் 100 இடங்கள் மற்றும் சுயநிதிக்கல்லூரி இடங்கள் 1520 என மொத்தம் 1620 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இவை தவிர தமிழ்நாட்டிலுள்ள 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலுள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் 560 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இதுபோல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது.