திருச்சிராப்பள்ளி மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
திருச்சிராப்பள்ளி
தமிழக மாவட்டங்கள்
திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கத்தைப் பிரிக்கும், காவேரி ஆறு

திருச்சிராப்பள்ளி மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் திருச்சிராப்பள்ளி
பகுதி மத்திய மாவட்டம்
ஆட்சியர்
எம். பிரதீப் குமார்
இ. ஆ. ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

மருத்துவர். பா.மூர்த்தி
இ. கா. ப.
மாநகராட்சி 1
நகராட்சிகள் 5
வருவாய் கோட்டங்கள் 4
வட்டங்கள் 11
குறுவட்டங்கள் 43
பேரூராட்சிகள் 16
ஊராட்சி ஒன்றியங்கள் 14
ஊராட்சிகள் 404
வருவாய் கிராமங்கள் 507
சட்டமன்றத் தொகுதிகள் 9
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 4,403.83 ச.கி.மீ.
மக்கள் தொகை
27,22,290 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
620 xxx மற்றும் 621 xxx
தொலைபேசிக் குறியீடு
0431
வாகனப் பதிவு
TN-45, TN-48, TN-81
பாலின விகிதம்
1013 /
கல்வியறிவு
83.23%
இணையதளம் tiruchirappalli

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (Tiruchirappalli district, திருச்சி மாவட்டம்) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருச்சிராப்பள்ளி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள 4-ஆவது பெரிய நகரம் ஆகும். இந்த மாவட்டம் 4,403.83 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

வரலாறு

தென்னகத்தின் மத்தியில், திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும், குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, முத்தரையர், பாண்டியர், விஜய நகரப் பேரரசாலும், பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம், திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பின்னர், 2007 நவம்பர் 23-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்

வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 507 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[1]

கோட்டங்கள்

வட்டங்கள்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள்

இம்மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும், 3 நகராட்சிகளும், 15 பேரூராட்சிகளும் கொண்டது.[2]

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்

இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களும்[3], 404 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[4]

மக்கள் வகைப்பாடு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19018,07,320—    
19118,76,070+0.82%
19219,12,177+0.40%
19319,18,342+0.07%
194110,35,927+1.21%
195111,84,158+1.35%
196113,04,039+0.97%
197116,50,768+2.39%
198119,00,566+1.42%
199121,96,473+1.46%
200124,18,366+0.97%
201127,22,290+1.19%
சான்று:[5]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,22,290 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 13,52,284 பேர் ஆண்கள் மற்றும் 13,70,006 பேர் பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 83.23% ஆகும்.

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 83.73% ஆகவும், கிறித்தவர்கள் 9.04% ஆகவும், இசுலாமியர்கள் 7.01% ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவும் உள்ளனர்.

அரசியல்

இம்மாவட்டத்தின் பகுதிகள் திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுடன் இணைந்துள்ளன. மேலும் இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[6]

எல்லைகள்

வடக்கில் பெரம்பலூர் மாவட்டமும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் கரூர் மாவட்டமும் மற்றும் வடகிழக்கில் அரியலூர் மாவட்டமும், வடமேற்கில் நாமக்கல் மாவட்டமும், தென்கிழக்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களும், தென்மேற்கில் திண்டுக்கல் மாவட்டங்களையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

புவியியல்

ஆறுகள்

 
முக்கொம்பு - மேலணை

திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும், இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில், முக்கொம்பு எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு, திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.

கல்லணை

 
கல்லணை

கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. பொ.ஊ. முதல் நூற்றாண்டின் இறுதியில், கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.

கல்லணையிலிருந்து பிரியும் ஆறுகள்

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, புதுஆறு என்ற நான்கு ஆறுகள் பிரிந்து செல்கின்றன.

மேலணை

மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.

கோரையாறு

கோரையாறு கருப்பூா் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. புத்தாநத்தம், விராலிமலை, மலைக்குடிப்பட்டி, தென்னலூா், இலுப்பூா் மற்றும் துவரங்குறிச்சி வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் கோரையாற்றில் பாய்கிறது. கோரையாறு சுமார் 632 ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியில் அதிக அளவிலான ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ளன.

அரியாறு

அரியாறு மணப்பாறை பகுதி பள்ளிவெளிமுக்கு பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கடவூா் மற்றும் செம்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வைரம்பட்டி, குளத்தூா், மணப்பாறை வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் அரியாற்றில் பாய்கிறது. அரியாறு சுமார் 832ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டவை ஆகும்.

வேளாண்மை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மை பெரும் பங்கு வகிக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகித மக்களுக்கு வேளாண்மை மற்றும் வேளாண் சார்பு தொழில்களே வாழ்வாதாரமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் மத்திய பகுதியில் 4,40,383 எக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 எக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 எக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 எக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது. வேளாண்மைத் துறை விவசாயிகளின் வேளாண் சார் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கி வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற இன்றியமையாத பணிகளை தனது குறிக்கோளாக கொண்டு வேளாண் துறை பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் நடுப் பகுதியில் 4,40,383 எக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 எக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 எக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 எக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் பன்னிரண்டில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அமைந்துள்ளது. துறையூா் வட்டத்தில் அமைந்துள்ள பச்சைமலை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதியாக அறியப்படுகிறது. மணல்சாரியான செம்மண் வகையினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பெருவாரியான பகுதியில் காணலாம். மேலும், பிற பகுதிகளில் களிமண் வகையும் காணப்படுகிறது. பருவநிலை அடிப்படையில் தமிழகம் ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் காவிரி டெல்டா மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நிலவி வருகிறது. மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு 818 மி.மீ. ஆகும். மாவட்டத்தில் பெறப்படும் மழையளவில் பெரும்பகுதி வடமேற்கு பருவ காலங்களில் பெறப்படுகிறது.[7]

பயிர்கள்

இந்த மாவட்டத்தில் நெல், வாழை, சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள், கரும்பு, பருத்தி, காய்கறி மற்றும் மலர்கள் பெருவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சராசரியாக 60,600 ஹெக்டேர் பரப்பளவில் நெல், 44,700 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள், 22,200 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்துப் பயிர்கள், 19,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி, 14,500 ஹெக்டேர் பரப்பளவில் பயறுவகைப் பயிர்கள், 9,167 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, 6,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி, 3,410 ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம், 2080 ஹெக்டேர் பரப்பளவில் மா, 1,995 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய், 800 ஹெக்டேர் பரப்பளவில் பூக்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

முதன்மை தொழிலகங்கள்

சுற்றுலா

திருச்சியைச் சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகள் வருமாறு:-

ஆடிப்பெருக்கு விழா

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. திருச்சி மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம்
  2. திருச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  3. "திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  4. திருச்சி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்
  5. Decadal Variation In Population Since 1901
  6. திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்
  7. https://tiruchirappalli.nic.in/departments/agriculture/

வெளி இணைப்புகள்