தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா

தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமசீலா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இப் பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சிலுவை வடிவில் அமைந்த இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த அருங்காட்சியகக் கட்டிடத்தில் பாலர் காலத்து அரும்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அளவுத்திட்டத்திற்கு அமையச் செய்யப்பட்ட, அகழ்வாய்வு செய்யப்பட்ட களத்தின் மாதிருயுரு ஒன்றும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிலத்தளத்தில் பௌத்த, இந்து மதங்களைச் சேர்ந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. பௌத்த மதத்தைச் சேர்ந்த, புத்தர், போதிசத்வர், அவலோகிதேசுவரர், லோகநாதர், சம்பாலர், மரீசி, தாரா, அபராசிதர் ஆகியோரின் சிற்பங்களும், இந்துமதத்துக்குரிய, சிவா, பார்வதி, கணேசர், கார்த்திகேயர், சமுனா, மகிசாசுரமர்த்தனி, கிருட்டினர், சூரியன், திருமால் ஆகியோரின் சிலைகளும் இங்குள்ள சிற்பங்களில் அடங்குகின்றன.

இவற்றைவிட, அணிகலன்களுக்குரிய மணிகள், பதக்கங்கள், மோதிரங்கள், களிமண்ணால் செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்கள் மட்பாண்டங்கள் போன்றவற்றையும் இங்கே பார்க்கமுடியும்.

இதனையும் காண்க தொகு

வெளியிணைப்புக்கள் தொகு