பூலாபாய் தேசாய்

பூலாபாய் தேசாய் (Bhulabhai Desai ) (1877 அக்டோபர் 13 - 1946 மே 6) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், பாராட்டப்பட்ட வழக்கறிஞருமாவார். இரண்டாம் உலகப் போரின்போது தேசத் துரோகம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய தேசிய இராணுவ வீரர்களை இவர் பாதுகாத்ததற்காகவும், முசுலிம் லீக்கின் லியாகத் அலி கானுடன் இரகசிய அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்ததற்காகவும் இவர் நன்கு நினைவுகூரப்படுகிறார்.

பூலாபாய் தேசாய்
1939 ஏப்ரலில் நடந்த காங்கிரசு மாநாட்டில் ஜவகர்லால் நேரு, பூலாபாய் தேசாய் பாபு ராஜேந்திர பிரசாத் (மையம்)
பிறப்பு(1877-10-13)13 அக்டோபர் 1877
இறப்பு6 மே 1946(1946-05-06) (அகவை 68)

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் குசராத்தின் வல்சாடு என்ற ஊரில் பிறந்தார். ஆரம்பத்தில் தனது தாய்வழி மாமாவின் உதவியால் பயின்ற இவர் வல்சாட்டில் உள்ள அவபாய் பள்ளியிலும், மும்பையிலுள்ள பர்தா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். அங்கிருந்து 1895 இல் மெட்ரிக்குலேசனில் முதலிடம் பிடித்தார். அவர் பள்ளியில் இருந்தபோதே இச்சாபென் என்பவரை மணந்தார். இவர்களுக்கு திருமாய் என்ற ஒரு மகன் பிறந்தார். ஆனால் இச்சாபென் 1923 இல் புற்றுநோயால் இறந்தார். பின்னர் இவர் மும்பையிலுள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கிருந்து ஆங்கில இலக்கியத்திலும்,வரலாற்றிலிலும் உயர் தர வரிசையில் பட்டம் பெற்றார். இவர் வேர்ட்ஸ்வொர்த் பரிசையும், வரலாறு, அரசியல் பொருளாதாரத்தில் முதலிடம் வகிப்பதற்கான உதவித்தொகையையும் வென்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலையை முடித்தார். அகமதாபாத்தில் உள்ள குசராத் கல்லூரியில் ஆங்கிலத்தையும், வரலாற்றையும் கற்பிக்கும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கற்பிக்கும் போதே சட்டத்தையும் பயின்றார். பின்னர், இவர் 1905 இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்து நகரத்திலும், பின்னர் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரானார்.

அரசியல் வாழ்க்கை தொகு

அன்னி பெசண்டின் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்ததன் மூலம் இவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிரித்தானிய லிபரல் கட்சியில் சேர்ந்தார். பிரிட்டிசாரின் தாக்கங்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வகுக்க பிரிட்டிசரால் 1928 இல் அமைக்கப்பட்ட அனைத்து ஐரோப்பிய சைமன் குழுவை எதிர்த்து வந்தார். 1928 இல் பர்தோலி சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து பிரிட்டிசு அரசாங்கம் நடத்திய விசாரணையில் குசராத் விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தியபோது இந்திய தேசிய காங்கிரசுடனான இவரது தொடர்பு தொடங்கியது. சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் பஞ்ச காலத்தில் அடக்குமுறை வரிவிதிப்புக் கொள்கைகளை எதிர்த்து குசராத் விவசாயிகள் மேற்கொண்ட பிரச்சாரமே சத்தியாக்கிரகம். இவர் விவசாயிகளின் வழக்கை வலிமையாக பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் போராட்டத்தின் வெற்றிக்கு இது முக்கியமானது.

இவர் முறையாக 1930 ல் காங்கிரசில் சேர்ந்தார். வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிப்பதன் செயல்திறனைப் பற்றி உறுதியாக நம்பிய இவர், இந்திய வெளிநாட்டு நிறுவனங்களின் புறக்கணிப்பைக் கட்டும் நோக்கத்துடன் சுதேசி சபையை உருவாக்கி, 80 நெசவாலைகளை ஒன்றுசேர தூண்டினார். இந்த சபை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இவர் தனது நடவடிக்கைகளுக்காக 1932 இல் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, இவர் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சுகாதார அடிப்படையில் விடுவிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றார். காங்கிரசு செயற்குழு மறுசீரமைக்கப்பட்டபோது, சர்தார் வல்லபாய் படேலின் வற்புறுத்தலின் பேரில் இவர் அக்குழுவில் சேர்க்கப்பட்டார்.

நவம்பர் 1934 இல், இவர் குசராத்திலிருந்து மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாகாண சுயாட்சியை அனுமதிக்கும் இந்திய அரசு சட்டம் 1935, சட்டமன்றங்களில் காங்கிரசு பங்கேற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது. இவர் மற்றவர்களுடன் காங்கிரசின் பங்கேற்பை ஆதரித்தார். இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அதிக சுயாட்சியையும், அரசியல் உரிமைகளையும் சுட்டிக்காட்டினார். மத்திய சட்டமன்றத்தில் காங்கிரசு நுழைந்தபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காங்கிரசுகாரர்களின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் பெரும்பான்மை தலைவரானார். காங்கிரசின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை வலுக்கட்டாயமாக வழிநடத்துவதன் மூலம் இவர் அதிக மரியாதையையும் நிலைப்பாட்டையும் கட்டியெழுப்பினார்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், இந்தியாவையும், இந்திய வீரர்களையும் தன்னிச்சையாக போர் முயற்சியில் சேர்ப்பதை காங்கிரசு எதிர்த்தது. உலகுக்கு காங்கிரசு அணுகுமுறையை தெளிவுபடுத்த மத்திய சட்டமன்றத்தைப் பயன்படுத்துவது முக்கியமானது என்று இவர் கருதினார். இவர் 1940 நவம்பர் 19 அன்று சபையில் உரையாற்றினார், "... இது இந்தியாவின் போர் இல்லையென்றால், நீங்கள் இந்தியாவின் ஆதரவைப் பெறுவது சாத்தியமில்லை" என்று ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்தார். மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற இவர், திசம்பர் 10 ஆம் தேதி, இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏர்வாடா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் 1941 செப்டம்பரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவர் பங்கேற்பதையும் பாதித்தது.

தேசாய்-லியாகத் ஒப்பந்தம் தொகு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியும் முழு காங்கிரசின் செயற்குழுவும் கைது செய்யப்பட்டிருந்தாலும், 1942 முதல் 1945 வரை, காங்கிரசு தலைவர்களில் ஒருவரான இவர் ஒருவராக இருந்தார். அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இவர் முசுலிம் லீக்கின் இரண்டாவது மிக முக்கியமான தலைவரான லியாகத் அலிகானுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். எவ்வாறாயினும், இந்த கூற்றை சர் சிமான் லால் செடல்வாட் போன்ற பிற பிரபலங்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள் அப்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து காந்தி முழுவதுமாய் அறிந்திருந்தார் கூறியுள்ளனர். எதிர்கால கூட்டணி அரசாங்கத்திற்கான ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இது இந்திய சுதந்திர அரசாங்கத்திற்கு இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் ஒரு ஐக்கிய தேர்வுக்கு உதவும். இந்த ஒப்பந்தத்தில், அமைச்சர்கள் குழுவில் முசுலிம்கள் முதல் இந்துக்கள் வரை சமமாக இருப்பதற்கு தனி முசுலிம் அரசு என்ற கோரிக்கையை லியாகத் கைவிட்டார். முசுலிம்களின் பிரதிநிதியாக லீக்கை ஒப்புக் கொண்டு, பெரும்பான்மை இந்துக்களுடன் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு சமமான இடத்தை வழங்கிய இவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் போது சுதந்திரத்திற்கான இந்தியாவின் பாதையை விரைவுபடுத்தும் ஒரு சிறந்த இந்திய கூட்டணியை உருவாக்க முயன்றார். காந்தி, படேல், ஜவகர்லால் நேரு அல்லது வேறு எந்த காங்கிரசு தலைவருக்கும் தெரியாமல் இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கான் இந்த ஒப்பந்தத்தை தனது தலைவரான முகம்மது அலி ஜின்னாவிடமிருந்து ஒரு ரகசியமாக வைத்திருந்தார்.

1945 இல் ஒரு பத்திரிகை அறிக்கை இந்த ஒப்பந்தத்தை கசியவிட்டபோது, அந்தந்த கட்சிகள் அச்சமடைந்தன. இவர் காந்தியிடம் முழு தகவல்களையும் வழங்கியபோது, ஜின்னாவும், லீக்கும் இந்த ஒப்பந்தங்களை வெளிப்படையாக நிராகரித்தனர். மேலும் அத்தகைய ஒப்பந்தம் பேச்சுவார்த்தையாக நடத்தப்படுவதை லியாகத் அலிகான் மறுத்தார். ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இவர் கூறியது லீக்கால் கேலி செய்யப்பட்டது. அதே நேரத்தில் காங்கிசு தலைவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியதற்காக இவர் மீது கோபமடைந்தனர். செல்வாக்கற்ற போர் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க இவர் 1945 மார்ச்சில் ஒரு பெரிய முயற்சியை வழிநடத்த நினைத்தார். ஆனால் தேசாய்-லியாகத் ஒப்பந்தத்தின் வீழ்ச்சி காரணமாக இவர் தனது சொந்த கட்சியில் அரசியல் நிலைப்பாட்டை இழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக இந்திய அரசியலமைப்பு சபைக்கான தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் காங்கிரசு தலைவர்கள் சிறையில் இருந்தபோது இவர் தனது சொந்த சக்தியையும் புகழையும் முன்னேற்றிக் கொண்டிருந்தார் என்ற காங்கிரசின் உணர்வுகள் காரணமாகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவர் மரண படுக்கையில் இருந்தபோது, காந்தி இவரைச் சந்திக்கச் சென்றார், இவருடைய "மௌனவிரதம்" காரணமாக இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய தேசிய ராணுவ வீரர்களின் விசாரணை தொகு

கைப்பற்றப்பட்ட இந்திய தேசிய ராணுவ அதிகாரிகள், தளபதி, ஷா நாவாஸ் கான், பிரேம் குமார் சாகல், குர்பாக் சிங் தில்லான் ஆகியோர் தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, காங்கிரசு இவர் உட்பட 17 வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு பாதுகாப்புக் குழுவை அமைத்தது. நீதிமன்ற-தற்காப்பு விசாரணை அக்டோபர் 1945 இல் செங்கோட்டையில் தொடங்கியது. இவர் பாதுகாப்புக்கான முன்னணி ஆலோசகராக இருந்தார். மோசமான உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த, இவர் குற்றம் சாட்டப்பட்ட வீரர்களைப் பாதுகாப்பதில் உறுதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான வாதத்தை முன்வைத்தார். இவ்வழக்கு மூன்று மாதங்கள் நீடித்தது. இவர் தனது வாதங்களில் சர்வதேச சட்டத்தை மேற்கோள் காட்டி, சுபாஸ் சந்திர போஸ் நிறுவிய தற்காலிக அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு சுதந்திரம் பெற ஆயுதங்களை எடுக்க உரிமை உண்டு என்றும், இது ஒரு சில இறையாண்மை அரசாங்கங்களின் அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது என்றும், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிட்டார். ஆயினும் நீதிபதி மூன்று அதிகாரிகளையும் குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரனைகளின் போது 1947 இல் முழு சுதந்திரத்திற்கு வழிவகுத்த இந்திய சுதந்திர போராட்டத்தை ஆதரித்தனர்.

இறப்பு தொகு

இவர் 1946 மே 6 அன்று இறந்தார். இவரது அபரிமிதமான செல்வாக்கு மும்பையில் பூலாபாய் நினைவு நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது.

மரபு தொகு

எம்.சி.செடல்வாட் என்பவர் இவரது வாழ்க்கை வரலாற்றை 'பூலாபாய் தேசாய்' என்ற பெயரில் எழுதியுள்ளார். மும்பையில் சாலை ஒன்றுக்கு இவரது பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலாபாய்_தேசாய்&oldid=3285754" இலிருந்து மீள்விக்கப்பட்டது