ரேவதி (எழுத்தாளர்)
ரேவதி என்ற புனைப்பெயரில் எழுதிய ஈ. எஸ். ஹரிஹரன் (இறப்பு:9 மே 2025) ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளர். சிறுவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் சிறுகதை, புதினம், நாடகம் உட்பட 92 நூல்களை வெளியிட்டவர். குழந்தைக் கதைகள் என்றாலே நீதிக் கதைகள் என்பதில் இருந்து மாறுபட்டு கதைக் கருவையும், கதை எழுதும் வடிவத்திலும் மாறுபட்ட பாணியைக் கொண்டவராக இருந்தார்.[1]
ரேவதி | |
---|---|
பிறப்பு | ஈ. எஸ். ஹரிஹரன் பாலக்காடு, கேரளம் |
இறப்பு | 9 மே 2025 |
தொழில் | பத்திரிகை ஆசிரியர், குழந்தை எழுத்தாளர் |
தேசியம் | ![]() |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கொடிகாட்ட வந்தவன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்ய அகாதெமி பால புரஸ்கார் விருது (2013) |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஹரிஹரன் கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வந்தார்.[2] மின்சார வாரியத்தில் தமிழ் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிய இவர், கோகுலம் சிறுவர் இதழின் ஆசிரியராக 11 ஆண்டு காலம் பணியாற்றினார். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் துணைச்செயலர், பொதுச்செயலர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.[3]
எழுத்தாளராக
தொகுஹரிஹரன் சிறுவயதிலிருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். குழந்தை இலக்கியக் கழகம் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டார். அங்கு பூவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் அளித்த பயிற்சியினால் பாட்டு வாத்தியார் என்ற கதையை எழுதினார். அக்கதை 1952-இல் வெளியானது. இவ்வாறு தன் 16-ஆவது வயதிலேயே ஹரிஹரன் எழுத்தாளரானார்.[1]
ஹரிஹரன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்த இவரைச் சந்தித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பெரியவர்களுக்கு எழுத பலர் உள்ளனர். ஆனால் குழந்தைகளுக்கு எழுத மிகக் குறைவானவர்களே உள்ளனர். அதனால் குழந்தைகளுக்கு எழுதுமாறு ஊக்குவித்து ரேவதி என்ற புனைபெயரைப் பரிந்துரைத்தார். அதன்பிறகு ரேவதி என்ற பெயரில் சிறார்களுக்காக எழுதத் தொடங்கினார்.[1]
மாணவராக இருக்கும் போதே கல்கண்டு, பூஞ்சோலை ஆகிய இதழ்களில் எழுத ஆரம்பித்தார். 'கொடி காட்ட வந்தவன்' (புதினம்), இக்கதை 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பூந்தளிர் என்ற சிறுவர் இதழில் வாண்டுமாமாவுக்கு உதவியாசிரியராக இருந்தார். பின்னர் கோகுலம் இதழில் ஆசிரியராகச் சேர்ந்தார். தினமணியில் சிறுவர் மணி இணைப்பில் மூன்று ஆண்டுகள் தலையங்கம் எழுதினார்.[3]
விருதுகள்
தொகுமத்திய, மாநில விருதுகள் உட்பட 35-இற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
- 2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற 30-ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருதை அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி வழங்கினார்.
- இவர் எழுதிய ராம் ரசாக் என்ற படைப்பிற்குத் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விருது கிடைத்தது.
- இவர் எழுதிய 'பவளம் தந்த பரிசு' என்ற சிறுவர் இலக்கியத்திற்காக 2013 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமியின் குழந்தைகள் இலக்கியம் (பால புரஸ்கார்) விருது (ரூ. 50,000) வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "சிறார் இலக்கியத்தின் பெருஞ்சுடர்". இந்து தமிழ். Retrieved 15 மே 2025.
- ↑ 2.0 2.1 "2013-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது: எழுத்தாளர்கள் ரேவதி, கதிர்பாரதி தேர்வு". தினமணி. 2013 ஆகத்து 24. http://dinamani.com/tamilnadu/2013/08/23/2013-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE/article1748650.ece. பார்த்த நாள்: 2013 ஆகத்து 24.
- ↑ 3.0 3.1 குழந்தை எழுத்தாளர் ரேவதியுடன் நேர்காணல், தென்றல்