லலித்கிரி (Lalitgiri) (ஒடியா: ଲଳିତଗିରି) (நல்திகிரி என்றும் அழைப்பர்), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரத்தின் அருகில் மலையில் அமைந்த பண்டைய பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள், புத்தரின் சிற்பங்கள் கொண்ட தொல்லியல் வளாகம் ஆகும். உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கு அருகில் உள்ள லலித்கிரியில் பண்டைய பௌத்த புஷ்பகிரி பல்கலைக்கழகம் அமைந்திருந்தது.[1][2][3][4] உதயகிரி, கந்தகிரி, லலித்கிரி எனும் மூன்று வளாகங்கள் வைர முக்கோணம் என அழைக்கப்படுகிறது.[5] [4] இவ்விடத்தில் பண்டைய தாந்திரிக பௌத்த சமயப் பிரிவினர் இருந்தனர்.[6] தற்போது லலித்கிரி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.[7]

லலித்கிரி
கடும் தவத்தால் எலும்புக் கூடான கௌதம புத்தரின் சிற்பம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்20°35′22″N 86°15′02″E / 20.5894°N 86.2506°E / 20.5894; 86.2506
சமயம்பௌத்தம்
மண்டலம்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
மாநிலம்ஒடிசா
செயற்பாட்டு நிலைபராமரிக்கப்படுகிறது

அமைவிடம் தொகு

 
லலித்கிரி வளாகத்தின் முழுப் பரப்பளவுக் காட்சி

லலித்கிரி, ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தின் மகாங்கா வருவாய் வட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும்,[3][5] கட்டக் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், உதயகிரி குகைகளிலிருந்து 5 கி மீ தொலைவிலும லலித்கிரி அமைந்துள்ளது. [4]

வரலாறு தொகு

லலித்கிரி தொல்லியல் களம் முதலில் 1905ல் எம். எம். சக்கரவர்த்தி என்பவரால் கண்டறியப்பட்டது. பின்னர் லலித்கிரியின் தொல்லியல் எச்சங்கள் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின் தொல்லியல் அறிஞர் ஆர். பி. சந்தா என்பவராலும், பின்னர் 1927 மற்றும் 1928ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தாலும், லலித்கிரியின் தொல்லியல் எச்சங்கள் ஆவணப்படுத்தப்பட்டது.

1937ல் இந்திய அரசு லலித்கிரி பௌத்த தொல்லியல் களம், பாதுக்காக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தது. 1985 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் மீண்டும் லலித்கிரி தொல்லியல் களத்தை, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதன் முடிவுகளின் படி, லலித்கிரி பௌத்த தொல்லியல் களம் மௌரியர் காலத்திலிருந்து (கிமு 322–185) 13ஆம் நூற்றாண்டு வரை பராமரிக்கப்பட்டது எனக் கண்டறிந்தனர்.[3].[8]

1985ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், புஷ்பகிரியை மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்த போது, புஷ்பகிரி பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.[9]

லலித்கிரியில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள் தொகு

 
லலித்கிரி பெருந்தூபி

லலித்கிரி அகழ்வாராய்ச்சியின் போது பெருந்தூபிகளும், பிக்குகள் பிரார்த்தனை செய்யும் சைத்தியங்களும், பிக்குகள் தங்கும் நான்கு விகாரங்களும், கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவரான அவலோகிதரின் கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

மேலும் குசானர்கள் காலத்திய பிராமி எழுத்து கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டது. லலித்கிரியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைக் கொண்டு, லலித்கிரியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

 
விகாரையின் நுழைவு வாயில்
 
லலித்கிரியின் மைய அமைப்பு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. PUSHPAGIRI UNIVERSITY
  2. Hoiberg & Ramchandani 2000, ப. 175–176.
  3. 3.0 3.1 3.2 3.3 "Excavated Buddhist site, Laitagiri". Archaeological Survey of India.
  4. 4.0 4.1 4.2 Goldberg Decary2012, ப. 387.
  5. 5.0 5.1 "Lalitgiri". Government of Odisha: Department of Tourism. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08.
  6. Biswas 2014, ப. 58.
  7. Excavated Buddhist site, Laitagiri
  8. Sinha & Das 1996, ப. 74.
  9. "ASI hope for hill heritage – Conservation set to start at Orissa site". The Telegraph. 29 January 2007.

ஆதார நூற்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்கிரி&oldid=3570123" இலிருந்து மீள்விக்கப்பட்டது