விதிசாவின் நாகர்கள்

முதல் நூற்றாண்டில் விதிஷாவில் ஆட்சி செய்த நாகர்கள்

விதிசாவின் நாகர்கள் ( Nagas of Vidisha ) மத்திய இந்தியாவில் உள்ள விதிஷாவின் நாக வம்சம் பற்றி புராணங்களிலிருந்து அறியப்படுகிறது. மேலும் இவர்கள் கிமு முதல் நூற்றாண்டில் ஆட்சி செய்திருக்கலாம். வம்சத்தின் கல்வெட்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வரலாற்றாசிரியர் கே.பி.ஜெயஸ்வால் மதுராவின் தத்தா ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட சில நாணயங்களை இந்த வம்சத்திற்கு ஆதாரமாகக் கூறினார். ஆனால் பின்னர் வரலாற்றாசிரியர்கள் இவரது கோட்பாட்டை மறுத்துள்ளனர்.

ஆட்சியாளர்கள் தொகு

இவர்கள் கிமு முதல் நூற்றாண்டில் நாகர்கள் விதிஷாவில் ஆட்சி செய்திருக்கலாம். [1] புராணங்களின்படி, பின்வரும் நாக மன்னர்கள் வைதிஷத்தை (விதிஷாவின் இராச்சியம்) ஆண்டனர்: [2] [3]

  1. போகி என்ற போகின்
    • இவர் தனது எதிரிகளின் நகரங்களை வென்று தனது வம்சத்தின் நிலையை உயர்த்தியதாக கூறப்படுகிறது
  2. சத-சந்திரன் என்கிற சந்திராம்சன் (சந்திரன்) அல்லது வாம-சந்திரன் ( விஷ்ணு புராணத்தில் இராம-சந்திரன் [4] )
    • இவர் இரண்டாவது நகவந்த் என்று விவரிக்கப்படுகிறார் (ஒரு கோட்பாட்டின் படி, இந்த வார்த்தை "நகபானர்" என்பதன் மாறுபாடு ஆகும். மேலும் இது மேற்கு சத்ரபதி ஆட்சியாளரான நகபானரைக் குறிக்கிறது [5] )
  3. தன-தர்மம் (தன-தர்மன் அல்லது தன-வர்மா)
  4. வங்காரன்
  5. பூதி-நந்தன்

போகியின் தந்தையாக நாக மன்னன் சேஷனை ("சேஷ நாகராஜா") புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் வரலாற்றாசிரியர் ஏ. எஸ் . அல்டேகர், சேசன் ஒரு புராண உருவம் என்று கருதுகிறார் ( ஆதிசேஷன் மற்றும் நாகராஜாவைப் பார்க்கவும்), ஏனெனில் புராணங்கள் வங்காரனை வம்சத்தின் நான்காவது அரசர் என்று வெளிப்படையாக விவரிக்கின்றன. ( சேஷன் ஒரு வரலாற்று மன்னராக இருப்பின், வங்காரன் ஐந்தாவது மன்னராக இருக்கலாம்). [2]

விதிஷாவின் இந்த மன்னர்களைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, புராணங்கள் சிஷு-நந்தி (சிசுநந்தி) மற்றும் சுங்க வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சி செய்த அவரது சந்ததியினரைக் குறிப்பிடுகின்றன. [5] ஒரு விளக்கத்தின்படி, சிசுநந்தி மற்றும் அவரது வாரிசுகள், இதில் நந்தி-யஷாஸ் (நந்தியாஸ்) மற்றும் சிசுகா (ஷிசுகா) ஆகியோர் விதிஷாவின் நாக அரசர்கள் ஆவர். [6]

நாணயங்கள் தொகு

வம்சத்தின் கல்வெட்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. [7] "-தத்தா" என்று முடிவடையும் மன்னர்களால் வெளியிடப்பட்ட பல நாணயங்கள் மதுரா மற்றும் அதன் அண்டை இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மன்னர்களில் சேஷ-தத்தா, இராம-தத்தா, சிசு-சந்திர-தத்தா, சிவ-தத்தா, புருஷ-தத்தா, உத்தம-தத்தா, காம-தத்தா மற்றும் பவ-தத்தா ஆகியோர் அடங்குவர். இந்த அரசர்கள் பொதுவாக தனித்துவமான தத்தா வம்சத்தின் உறுப்பினர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். இருப்பினும், வரலாற்றாசிரியர் கே.பி. ஜெயஸ்வால், இந்த மன்னர்கள் உண்மையில் விதிஷாவின் நாக ஆட்சியாளர்கள் என்று கருதுகிறார். அவர் சேஷ-நாகராஜாவை சேஷ-தத்தா, இராம-சந்திரனை இராம-தத்தா, மற்றும் சிஷு-நந்தியை சிஷு-சந்திர-தத்தா என்று அடையாளம் காட்டினார். [8] இந்த நாணயங்கள் மதுராவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜெயஸ்வால் வாதிட்டார். ஏனெனில் அந்த நகரம் பழங்காலத்திலிருந்தே நாணயங்களின் முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. [2] அவர் நாணயங்களில் "-தத்தா" என்பதற்குப் பதிலாக "-தரவு" ("தானம் செய்பவர்") என்று குறிப்பிடப்பட்டுள்ள பின்னொட்டையும் படித்தார். மேலும் "இராம-தத்தா" என்பது "பிரபலமான நன்கொடையாளர்" என்று படிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். [8] புராணங்கள் விதிஷாவின் நாக அரசர்களை " விரிஷா " ( "காளை" ) என்று விவரிக்கின்றன என்றும், மதுரா நாணயங்களில் சிவனின் வாகனமான நந்தியின் சின்னம் இருப்பதாகவும் ஜெயஸ்வால் மேலும் வாதிட்டார். [4]

வரலாற்றாசிரியர் ஏ. எஸ். அல்டேகர் பல வாதங்களின் அடிப்படையில் ஜெயஸ்வாலின் கோட்பாட்டை மறுத்தார்:

  • மதுராவில் கிடைத்த நாணயங்கள் விதிஷாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. [8]
  • டி. ஆர். பண்டார்கர் தலைமையிலான அகழ்வாராய்ச்சியின் போது, பிற்கால நாக ஆட்சியாளர்களான பீம-நாகன் மற்றும் கணபதி-நாகனின் ஐந்து நாணயங்கள் விதிஷாவில் உள்ள பெஸ்நகர் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தத்த மன்னர்களின் மதுரா நாணயங்களுடன் ஒப்பிடும்போது இந்த நாணயங்கள் அளவில் சிறியவை. ஆனால் மன்னரின் பெயருடன் "-நாகா" எனச் சேர்க்கத் தவறவில்லை. மறுபுறம், மதுராவின் பெரிய நாணயங்களில் "-நாகா" என்ற பின்னொட்டைச் சேர்க்க போதுமான இடம் உள்ளது. ஆனால் அவை எதிலும் அவ்வாறு செய்யவில்லை. [8]
  • எந்த வரலாற்று கல்வெட்டுகளும் அல்லது நூல்களும் "-தரவு" என்ற பின்னொட்டை ஒரு மன்னரின் பெயருடன் இணைக்கவில்லை, அவர் ஒரு பிரபலமான நன்கொடையாளர் என்பதைக் குறிக்கிறது. [6]
  • வாயு புராணத்தின் சில கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே விதிஷாவின் நாக மன்னர்களை "விரிஷா" என்று விவரிக்கின்றன: மற்ற கையெழுத்துப் பிரதிகள் "நிரிபா" ( nṛpa, "மன்னன்") என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. " விரிஷா " என்பது சில கையெழுத்துப் பிரதிகளில் எழுத்துப் பிழையாகத் தோன்றுகிறது. [4]
  • அனைத்து மதுரா நாணயங்களிலும் காளையின் சின்னம் காணப்படவில்லை. இது இராம-தத்தாவால் வெளியிடப்பட்ட ஒரு வகையான நாணயங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. [4]
  • மதுரா நாணயங்களில் தோன்றும் அலை அலையான அல்லது நேர் கோடுகளை 'நாக' (பாம்பு) சின்னமாக விளக்க முடியாது: அவை மரம் போன்ற பிற பொருட்களைக் குறிக்கின்றன அல்லது அலங்கார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், பத்மாவதியின் நாகர்கள் போன்ற நாகர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சியாளர்களின் நாணயங்களில் பாம்பு சின்னம் இல்லை. [9]
  • மதுராவின் "தத்த" மன்னர்கள் விதிஷாவின் நாக மன்னர்கள் என்றால், அவர்கள் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பார்கள். இருப்பினும், புராணங்களின் நாக மன்னர்களுடன் சில தத்த மன்னர்களை மட்டுமே ஜெயஸ்வால் அடையாளம் காண முடிந்தது. அதுவும் அவர்களின் பெயர்களுடன் "கணிசமான சுதந்திரம்" பெற்ற பிறகு. [6]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிசாவின்_நாகர்கள்&oldid=3401576" இலிருந்து மீள்விக்கப்பட்டது