அயனாவரம் காசி விசுவநாதர் கோவில்

காசி விசுவநாதர் கோவில் தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், அயனாவரம், வசந்தா நகர், கே.வி.கோயில் தெருவில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இதனை அடுத்து அயனாவரம் பேரூந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸின் குஜராத்தி சமூகத்தைச் சேர்ந்த டக்கர் குலப்பிரிவால் கட்டப்பட்டது. [1] [2][3]சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் நீதியரசர் இ. பத்மநாபன் கமிட்டியால் பட்டியலிடப்பட்ட 400 பாரம்பரிய கட்டமைப்புகள் மற்றும் கோவில்களுள் ஒன்றாகும்.[4][5]

வரலாறு தொகு

தக்கர் இனத்தவர்கள் குஜராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள கெடா (Kheda) என்னும் ஒரு பிரபலமான பகுதியைச் சேர்ந்தவர்கள். கெடா பகுதியைச் சேர்ந்த சில குஜராத்தி குடும்பங்கள் 1700 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு மாநிலத்திற்கு குடிபெயர்ந்தனர்.[1] [2] [3] [5] முதலில் இவர்கள் தஞ்சாவூரில் குடியேறினர். இவர்களுக்குத் தஞ்சாவூர் குஜராத்திகள் என்றும் பெயருண்டு. இங்கிருந்து திருச்சி, திருநெல்வேலி, மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்குப் பரவினர். திருச்சியை மையாமகக் கொண்டு இரத்தினம் மற்றும் நகை வணிகத்தில் ஈடுபட்டுப் புகழ் பெற்றனர். புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் ஜார்ஜ் டவுன் உருவான காலத்தில் இவர்கள் இங்கும் குடியேறினர். ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் அக்ராகரம் அருகே குடியேறினர். இப்பகுதி சௌகார்பேட்டையாயிற்று. இவர்கள் வைர வியாபாரத்தில் தங்கள் முத்திரையைப் பதித்தனர். டி.ஆர். டாக்கர் & சன்ஸ் ஒரு தேசிய நகைக்கடை நிறுவனமாக உயர்ந்தது.[6][1] [2] [3]

தங்களின் அந்தஸ்திற்கேற்ப மவுண்ட் ரோட்டில் செயல்பட்ட வணிக நிறுவனத்திற்காக, புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் ஹென்றி இர்வின் வடிவமைப்பில் அரண்மனை போன்ற கட்டடத்தைக் வடிவமைத்தனர். 1890 களில் டி மணவாள செட்டி என்ற முன்னணி ஒப்பந்தக்காரர் இந்தோ சராசெனிக் கலைப்பாணியில் வடிவமைத்த கட்டிடமும் குறிப்பிடத்தக்கது.[1]

மற்றொரு குடும்பம் ஏகாம்பரேஸ்வரர் அக்ராகரம் மற்றும் அயனாவரம் ஆகிய இடங்களில் பல அறக்கட்டளைகள் உருவாக்கினர். அயனாவரத்தில் அமைந்துள்ள தக்கர் சத்திரம் இக்குடும்பத்தின் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட அறநிறுவனம் ஆகும். செல்வச்செழிப்புள்ள இந்தத் தக்கர் குடும்பத்தைச் சேர்ந்த ராம்கோர் பாய் மற்றும் ரத்னா பாய் என்ற இரண்டு பெண்கள் சௌகார்பேட்டையில் வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கிபி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாரணாசிக்கு புனித யாத்திரை சென்றனர். வாரணாசியில் இருந்து இரண்டு சிவலிங்கங்களைக் கொண்டுவந்தனர். இவற்றுள் ஒன்றை அயனாவரத்தில் காசி விசுவனாதருக்காக் ஒரு கோவில் அமைத்து நிறுவினர். மற்றொன்றை சவுகார்பேட்டையில் உள்ள மொட்டை உத்தராவில் ஒரு சிறு சன்னிதி அமைத்து நிறுவினர். இந்த மொட்டை உத்தராவை ஸ்ரீ நிகேதன் என்றும் அழைப்பர்.[6] ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள கெடவால் குஜராத்திகளின் சமூக மையம் இதுவாகும். அயனாவரத்தில் அமைக்கப்பட்ட காசி விசுவநாதர் கோவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது கட்டப்பட்ட கோவில் என்பதால் இக்கோவில் சிறப்புப் பெற்றது.[1][5]

கோவில் அமைப்பு தொகு

இக்கோவிலின் கிழக்குப் பார்த்த நுழைவாயிலில் முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரத்தைக் காணலாம். மொட்டைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், மூலவர் கருவறைக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.[3]

இக்கோவில் கருவறை, அந்தரளம் மற்றும் அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூலவர் விமானம் முத்தள வேசர விமான வகையைச் சேர்ந்தது. அதிட்டானம் பாதபந்த வகையைச் சேர்ந்தது. கருவறையின் வெளிப்புறச் சுவர்க் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய தெய்வங்கள் நிறுவப்பட்டுள்ளன. விமான தளங்களின் பத்ர, கர்ணப் பகுதிகளில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவ கிரீவத்தின் நான்கு திசைகளிலும் கிரீவ கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூலவர் காசி விஸ்வநாதர் கருவறையில் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். இது காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட சிவலிங்கமாகும். கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தில் நடராசர் மற்றும் பிட்சாடனர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கான சிலைகள் உள்ளன. பைரவர், சூரியன், சந்திரன், அனுமன், வீரபத்திரர், கன்னிமார்கள், நவக்கிரகம், தேவார மூவர் ஆகிய தெய்வங்கள் சன்னிதி கொண்டுள்ளனர். அம்பாள் விசாலாட்சி தனி சன்னிதி தெற்குப் பார்த்தவாறு அமைந்துள்ளது. சன்னிதியின் எதிரே பலிபீடம், கொடிமரம், சிம்மவாகனம் ஆகியவற்றைக் காணலாம். அம்மன் சன்னதியில் கொடிமரம் இருப்பது அரிது. ஆனால் இங்கு உள்ளது. கோவிலின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது.[7][8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 The Tawkers of Madras Muthiah, S. The Hindu May 07, 2018
  2. 2.0 2.1 2.2 Gujaratis gave us this temple Sriram V. The Hindu May 23, 2012
  3. 3.0 3.1 3.2 3.3 The Tawker legacy in Ayanavaram Sriram V. Madras Musings Vol.. XXI No. 3, May 16-31, 2011
  4. List of Heritage Buildings listed in the Justice E.Padmanabhan Committee Office Order 22/2010 Dt. 09.09.2010 CMDA Chennai
  5. 5.0 5.1 5.2 Following the 400 year old history Janani Sampath. The New Indian Express July 15, 2013
  6. 6.0 6.1 About Us History of DGK Samaj. Dakshina Gujarathi Khedawal Samaj
  7. A 200-year old Shiva temple in the city
  8. அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில் Athma Dharisanam YouTube